"

42

போர் கொதித்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் ஆயிரமாயிரம் கதைகள் எழுதப்படவேண்டி நமக்குள் உள்ளன. அப்படியான எழுத்துக்கள் படிப்படியாக எழுதப்படத் தொடங்கி விட்டன என்பது எனது பார்வை. அத்தகைய எழுத்துப்பிரதிகள் சார்பு, எதிர்ப்பு என்கிற அடையாளப்படுத்தல் வகை மாதிரிக்குள்ளும் தொடக்குக்கும் தழுவலுக்குமான தேர்வுக்குள்ளும் நமது தமிழ் வாசக மனம் அடைந்து கிடப்பது சங்கடம் தருகிறது. என்ன செய்யலாம்? இந்த அரசியல் மனம் நம்மை விட்டு சுலபத்தில் அகலப் போவதில்லை என்றாலும் இந்த நிலைமையை மாற்ற நமது தமிழ்ச் சூழலில் ஒரு கலாசாரப் புரட்சி நடந்தாகத்தான் வேண்டும்.

இந்த பண்பு ,பார்வை மாற்றத்திற்கு, நமது வாழ்வில் அனைத்துப் பகுதிகளையும் போக்குகளையும் தன்னிலை சார்ந்து மட்டுமல்லாது பிறர் நிலை சார்ந்தும் அணுகி ஒழிவு மறைவின்றி எழுதும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் தோவைப்படுகிறார்கள். நான் இதுவாகவே இருந்தேன், இருக்கிறேன். என்கிற பார்வையும் தாண்டி மற்றவர்களும் இருந்ததற்கும், இருப்பதற்குமான அகமும் புறமுமான பார்வைத் தேர்வு முக்கியமானது எனக்கருதுகிறேன். நமது மனங்களிலும் எண்ணங்களிலும் குடி கொண்டுள்ள  பொதுப் புத்தி சார்ந்த பல் வேறு கதையாடல்கள்,முன்முடிவுகள் உடைக்கப்பட்டு இக்கதையாடலின் அடிப்படையான கற்பிதங்கள், புனைவுகள்,போக்குகள் அதன் சூழல்கள் விரிவாக எழுதப்பட்டு பதியப்படவேண்டிய காலகட்டம் இது! மனிதர்களினதும் சமூகங்களினதும் வாழ்வை எழுதுகிற படைப்புகள் ஏன் முக்கியத்துவமாகின்றன என்கிற கேள்வி நமக்குமுன் உள்ளது.

சயந்தன் ஒரு படைப்பாளி என்கிற வகையில் தனது கருத்துக்களை முன்னிலைப்படுத்தாமலும் தனது நிலைப்பாட்டை நிறுவும் போக்கினையும் கைவிட்டு ,பல பாத்திரங்களின் ஊடாகவும் சனங்களின் வழியாகவும் இலங்கை இனச்சிக்கலின் பின்புலத்தில் ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட15 வருடம்) நிலவிய போக்குகளையும் நிலவரங்களையும்; அதன் திசைகளையும் எழுத முயன்றுள்ளார்.

ஒரு படைப்பாளி தான் ஒரு பாத்திரமாக மாறாமல் பிரச்சார நோக்கத்துக்காகவோ தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தவோ நிறுவவோ முயலாது  ,தான் படைக்க விரும்பிய அந்த காலகட்ட வாழ்வின் பல்வேறு போக்குகளையும் மனோநிலையையும் வரலாறு அந்த மனிதர்களை எப்படி நடாத்துகிறது ,நடாத்தியதுஎன்பதை சொல்லி இருக்கிறார். ஆறாவடு நாவலில்…. இதுவே இந்த நாவல் கூர்ந்து பார்க்கப்படுவதற்கும், முக்கியத்துவம் பெறுவதற்குமான முன்மாதிரியை நமது தமிழ் சூழலில் தருகிறது என நம்புகிறேன். ஒரு படைப்பாளியின் தன்னிலை சார்ந்த  அரசியல் நம்பிக்கையையும் தாண்டி அப்படைப்பு முழுமை பெறுவதற்கு இந்த தன்மை அவசியமானதாக இருக்கிறது. என நான் கருதுகிறேன்.

நான் இந்த நாவலை வாசித்ததன் ஊடாக பெறுகிற தரிசனம் வரலாறு மனிதர்களை எப்படி எப்படி கட்டமைக்கிறது, எங்கு எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதுடன் இதில் அவர்களது பார்த்திரம் என்ன என்பதனையும் தான் எனக்கு காட்டுகிறது. இக்கதைகளின் ஊடாக வருகின்ற பார்த்திரங்கள் இக் கேள்விக்கான பதிலை தம்மை சூழ கவிந்திருந்த ஒவ்வொரு காலகட்ட இருன்மையும் நெருக்கடியுமிக்க வாழ்வு அனுபவத்தின் ஊடே நமக்கு முன்தருகிறது. இதனை நாம் பார்க்க வேண்டும் என்றால் இந்த நாவலில் மட்டுமல்ல, நடைமுறையிலும் ஏராளமான உதாரணங்கள்  நம்முன் நாளுக்கு நாள் விரிந்து கொண்டிருக்கின்றன. இதற்கான உதாரணங்களை விரித்து சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

 

அமுதனின் கதை

இத்தாலிக்கு போக மூன்றாவது முறை ஏஜெண்சுக்கு காசி கட்டி மூன்று மாதத்தின் பின் நீர்கொழும்பிலிருந்து மீன்பிடி வள்ளமொன்றில் அறுபத்தி நாலுபேருடன் கடல் பயணத்தை தொடங்குவதுடன் அமுதன் நமக்கு அறிமுகமாகிறார்.

சொந்த பெயர் ஐயாதுரை பரந்தாமன், ஐந்து வருட இடைவெளிக்குள் இயக்கம் இரண்டு பெயர்களை வைத்தது.  இவான் இந்திய இராணுவம் வெளியேறிய இரண்டாவது மாதத்திலும் ,அமுதன் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு ஆறுமாதத்திற்கு முன்பும். இந்திய இராணுவம் இலங்கையில் கால்பதித்த காலகட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஐயாத்துரை பரந்தாமன் .இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு ஈ பி ஆர் எல் எப் யினரால் பலவந்தமாக உயிர் அச்சுறுத்தலுகுள்ளாக்கப்பட்டு  தமிழ்த் இராணுவ ஆயுதபாணியாக மாற்றப்படுகிறார். இவருடன் இவரது நண்பர் தேவபாலுவும்.

“இரண்டாவது நாள் துவக்குச்சுடவும் கிரனைட்டை சுழற்றி எறியவும் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அப்படியே இரண்டு மூன்று நாள் பயிற்சிகள் கடந்த பிறகு ஒருநாள் இவன் பொறுப்பாளரிடம் தயங்கி தயங்கி கேட்டான், அண்ணை எங்கட தலைவர் யார் என்று இண்டைக்கு வரைக்கும் சொல்லேல்லையே.”

இதுதான் ஐயாத்துரை பரந்தாமனின் இயக்க வாழ்வின் ஆரம்பம். இக்காலகட்டத்தில்  இவரின்அரசியல் சமூகம் பற்றிய பொது அறிவின் பார்வை மனப்பதிவு இது….

” இந்திய இராணுவம் வருகிறதாம் என கதையடிபட்டபோது இவனுக்கு இந்தியா பற்றிய மூன்று சங்கதிகள் தெரிந்திருந்தன.

1.    இந்திய  ஒரு வெளிநாடு.
2.    இந்திய ஜனாதிபதி எம். ஜீ. ஆர். அவர் ஒரு தமிழர்.
3.    இந்தியாவில் ரஜனிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா, அமலா, நதியா முதலான நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.”

இப்படியான  ஐயாத்துரை பரந்தாமன்ஆயுதபாணியாக்கப்பட்டு அவர் வாழ்வு அன்றைய அரசியல் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளில் சேரும் முடிவுகூட அவனால் எடுக்கப்பட வில்லை என்பதும் இங்கு முக்கியம்.

ஈபி ஆர் எல் எப் காலத்தில் ஒரு சம்பவம் ஊர்காவற்துறையிலிருந்து நயினாதீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் “அலையரசி” படகினை  கடலில் வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இந்தியப்படைக்கு ஆதரவாவக நடக்கும் கூட்டத்திற்கு பயணிகளை வலுக்கரமாக அழைத்துச் செல்லும் கட்டத்தில் அமுதன் இப்படி நடந்து கொள்கிறான்.

“இவன் தனது கைகளில் எல்எம்ஜியை வானத்தை நோக்கி உயர்த்தி பிடித்திருந்தான். சற்று முன்னர் அதிலிருந்து மூன்று நாங்கு குண்டுகள் கடல் அதிரும் சத்தத்தோடு  வெளியேறியிருந்தன. “என்னத்திற்கு எங்கள திரும்ப கூட்டிக் கொண்டு போறீங்கள் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமோ?” என்று அதிபர் கேட்டார்..”
“கொண்டு வரச் சொல்லி ஓடர்”
“யாரிட்ட இருந்து”
“மேலிடம்”
“நானொரு அதிபர் கவர்மெண்ட் உத்தியோகத்தன். இஞ்ஞை பாரும் சனங்கள் குழந்தைகள் வயோதிபர்கள் எண்டு நிறையப் பேர். இப்படி நீங்கள் செய்யக் கூடாது… சனங்களின்ர சாபம் உங்கள சும்மா விடாது. நீங்கள் செய்யிறது நல்லதில்லை….”

இந்த இடத்தில் ஐயாதுரை பரந்தாமன் அதிகாரத்தின் கருவியாய் மாறுகிறான். “இவனுக்கு உச்சந்தலை கொதித்துக் கொண்டு வந்தது நாங்கள் செய்கிறது நல்லதில்லை எண்டு எங்களுக்கும் தெரியுமடா நாயே என்று அவரைப்பிடித்து தள்ளினான். தடுமாறி விழப் போனவரை அவரது மனைவியாக இருக்க வேண்டும் ஒருவாறு தாங்கிப்பிடித்துக் கொண்டாள். தோளில் சாய்ந்திருந்த குழந்தை நித்திரை குழம்பி கத்தத் தொடங்கியது இவனுக்கு இன்னும் கோபம் அடங்கியமாதிரி தெரியல்ல”

“எடியே உன்ர புருசனிட்ட கேள், உயிரோட கரைக்குப் போக விருப்பமோ இல்லாட்டி செத்த சவமா கடலுக்குப் போக விருப்பமோ எண்டு” அதற்குப் பிறகு அலையரசி அமைதியானது ஒன்றிரண்டு விசும்பல்கள் மட்டுமே கேட்டன.”

“கரையில் வெயில் கடுமையாக இருந்தது, இவர்களை அழைத்துப் போக இரண்டு மினி பஸ்சுகள் அங்கே நின்றன. முன்னொரு காலத்தில் சுடலையில் குப்புறக் கிடத்தி சுட்டு சுட்டு விளையாடிய, இப்போதய இவனது பொறுப்பாளன் இவர்களை வரவேற்றான்.”

இந்த இடத்தில் ஐயாதுரை பரந்தாமனுடன் சேர்த்து நண்பனான தேவபாலுவும் ஆயுதபாணியாக்கப்பட்டதையும் தேவபாலுவின் அகாலமரணத்தையும் குறித்துக் காட்டவேண்டி உள்ளது.

“இவனையும் தேவபாலுவையும் பின்னால் கைகளைக்கட்டி இந்திய ஆமிக்காரர் இவ்விரண்டு பேராக தூக்கி ட்ரக்கில் எறிந்தார்கள் ட்ரக் புறப்பட்ட போது அம்மா தலைவிரி கோலமாக பின்னாலே ஓடிவந்தா….”

“இவனை, தேவபாலுவை, சந்திரனை, காந்தனை இன்னும் ஊரின் இளைஞர்களை கைகளை பின்புறமாக கட்டி வெறும் பென்ரரோடு குறுக்கும் மறுக்குமாக நிலத்தில் போட்டிருந்தார்கள். உடல் முழுவதும் முரட்டு சப்பாத்துக்களின் அடையாளம் புழுதியால் பதிந்திருந்தது…..”

௦௦௦௦……

“இவனும் தோழர்களும் முகாமுக்கு திரும்பினார்கள் அடுத்துவந்த காலங்கள் பதற்றம் மிகுந்தவையாக இருந்தன. இவனது பொறுப்பாளர்கள் பேயறைந்ததைப் போல திறிந்தார்கள். இந்தியப் படைகள் வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதியானது. வன்னிக் காட்டுக்குள் நின்ற பெரிய பெரிய புலிகலெல்லாம் கொழும்பு ஹில்டன் தங்கி நின்று பிரமதாசாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்த பலரை போட்டுத்தள்ள புலிகள் தொடங்கி இருந்தார்கள் அவர்களில் தேவபாலுவும் ஒருவனானான்.”

“அவன் வீட்டுக்குப் போயிருந்த போது அது நடந்தது. அன்றைக்கு அவனது குழந்தையின் பிறந்த நாள். விடிய ஆறுமணிப் பொழுதில் அவன் வீட்டக்குப் புறப்பட்டான். குழந்தையை முதுகில் சுமந்து ஒரு யானையைப் போல தேவபாலு தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த எட்டுமணி வாக்கில் வெளிப் படலையை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள். அதற்கு சற்று நேரம் கழித்து அவர்கள் தேவபாலுவையும் தட்டினார்கள்”

“இளைஞர்களில் ஒருவன் தேவபாலுவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்திய போது கண்கள் இருளத் தொடங்கின தேவபாலுவின் குரல் நடுக்கமுற்று கீச்சிட்டது “நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை… நான்.” என்று அவன் முடிக்க முன்பாகவே சத்தம் அதிர பிடரியை பீய்த்துக் கொண்டு குண்டு பறந்தது. அவன் தேர் சரிவதைப் போல பின்புறமாக சரிந்தான். திறந்து கிடந்த விழிகளில் திகைப்பு அடங்கியிருக்கவில்லை. மனைவி மூச்சிப் பேச்சின்றி சரிந்தாள்…. தேவபாலுவின் குழந்தை அவனது தலைக்கு அருகில் உட்காந்து இரத்தத்தில் கைகளை அளைந்து விளையாடியது. பிறகு “ப்பா ப்பா” என்று அவனது கன்னத்தில் தட்டியது சற்று நேரத்தில் பீரிட்டு கத்தத் தொடங்கியது…..”

“தேவபாலுவின் சாவு இவனை கலங்கடித்திருந்தது. இந்தியப் படைகள் வெளியேரும் நாள் நெருங்க நெருங்க சாவு வாயைப் பிளந்தபடி இவனை நோக்கி விரைவதைப் போலவே இருந்தது. சுழி புரத்தில் இந்திய இராணுவமுகாம் ஒன்றுக்குள் இவர்கள் முடங்கிக் கிடந்தார்கள்.

 

விடுதலைப் புலிகளில் சேர்க்கப்பட்டது

“புலிகள் வீட்டுக்குள் புகுந்த போது அவர்களது கைகளில் துப்பாக்கிகள் எதனையும் கொண்டுவரவில்லை….” “சாவுக்கு இரண்டு சோடிக் கால்கள் முளைத்து வாயில் படியில் நிற்பதை இவன் கண்டான்… இப்படித்தான் முன்பு ஒரு நாள் தேவபாலுவின் வீட்டு வாசலிலும் சாவு முளைத்தபடி நின்றது.”

“அப்பு ராசாக்கள் உங்கள கையெடுத்துக் கும்பிடுறன். இவன் எதனையும் விரும்பிச் செய்யல, காலமும் நேரமும் அவனை இப்படி அலைக்கழிக்குது, தயவு செய்து அவனை விட்டுட்டு போங்கோ இவனை தன்பின்னால் தள்ளி மறைத்துக் கெண்டாள்….” தாய்.

“இவனது கையைப் பிடித்தார்கள். உடல் நடுங்கத் தொடங்கிய போது வார்த்தைகள் அது பாட்டுக்கு வந்தன. உங்களுக்கு தெரியாத ஒன்றில்ல ஈ.பி என்னை பைஃபோசாகத்தான் பிடித்து அவ  சென்னதைத்தான் நான் செய்தேன்.”

“போகுற வழியில் புலிகள் சந்திரனையும் கைது செய்தார்கள்…. நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் மதில் சுவர்களை மேலும் உயர்த்தி தாவரங்களால் வேலி இடப்பட்டகாணியில் அந்த பெரிய வீடு இருந்தது…..”

“இவர்கள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே கோயில் ஐயர்கள், பள்ளிக்கூட அதிபர்கள் சேர்ச் பாதிரிகள் சரணடைந்து இருந்தார்கள்….. பருத்த உடம்பினை உடைய புலிகளில் ஒருவன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்….”

“உள்ளே “சொல்லடா நாயே” “சாகவிருப்பமோ” எங்களுக்கு எல்லாம் தெரியும் முதலான வார்த்தைகள் கடூரமாக ஒலித்த வண்ணம் இருந்தன….”

“ ‘ஒருக்கா உள்ளே வந்து பாருங்கோ’ என்று அழைத்தான் விசாரணையாளன், இவர்கள் உள்ளறைக்கு நடந்தார்கள். அங்கு நிறையப் பேருக்கு வேறுமாதிரியும் விசாரணை நடந்து கொண்டிருந்தன….. இவன் தன்னை அறியாமல் பொறுப்பாளர் என்று கூவினான். இவனது முன்னாள் பொறுப்பாளர் கைகள் பின்னால் கட்டப்பட்டு வெறும் ஜட்டியோடு தலையை குனிந்தபடி உட்காந்திருந்தார். அவரை இந்தியாவுக்கு கூட்டிப் போய் இருப்பார்கள் என்றுதான் இவன் நம்பியிருந்தான்.  “இந்திய வேசை மக்கள் நம்ப வைச்சு கழுத்தறுத்துப் போட்டான்கள்” என்று விசாரணை இடைவெளி ஒன்றில் முனகியதாக விசாரனையாளன் சிரித்துக் கொண்டு எங்களிடம் சொன்னான்….”

‘இவர்களைப்பற்றி எங்களுக்கு தெரிந்ததை விட அதிகமாக உங்களுக்குத் தெரியும் யார் யார் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டவை எங்கிற விசயங்கள் நீங்கள் தரவேனும்.”

“இவன் தரலாம் என்பதைப் போல தலையசைத்தான். அது தலையாட்டி அசைப்பதைப் போல மேலும் கீழுமாக இருந்தது. பிறகு சொல்லத் தொங்கினான்………”

௦௦௦௦௦…

“நீர் எங்களோட நில்லுமன்” என்றான் விசாரனையாளன். பிறகு “வெற்றியும்” முந்தி ரெலோவில இருந்து எங்களோட சேர்ந்த ஆள்தானே”  என்று சொன்னான்.”

‘இவன் மிக சாதாரணமாக “சரி” என்றான்”

“மூன்று மாதங்களுக்குப் பின் இவனுக்கென்று புதிய பொறுப்பாளர்கள், புதிய நண்பர்கள் கிடைத்திருந்தனர்.”

இப்படியாகத்தான் ஐயாதுரை பரந்தாமன் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் உறுப்பினறாகிறார். இந்த பிரதான பாத்திரத்தின் விபரிப்பை முழுவதுமாக குறித்துக் காட்ட வேண்டி இருந்ததற்கான காரணத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள்…… ஐயாத்துரை பரந்தாமனின் விடுதலைப் புலிகளின் காலம், சனங்களின் மனோநிலை, விடுதலைப்புலிகளின் அரசியல் இயக்கச் செயற்பாடு, சாதியம், புலம் பெயர் மக்களின் வருகை, தியாகி, துரோகி கதையாடல், நேரு ஐயாவின் பாத்திரம் 2012 சமாதான காலம், கொலைகள், அமுதனின் காதல், அமுதன் இயக்கத்திலிருந்து விலகுதல், சிங்ள தமிழ் முரண்பாடு, கடற்பயணம் என இந்த நாவல் பல சம்பவங்களின் ஊடாக மேலும் விரிகிறது.

இந்த நாவலில் அக்காலகட்டத்தின் மக்களின், இயக்கங்களின்,  அரசியலின் தெளிவான சித்திரத்தை  தனது கதை சொல்லலின் ஊடாக சயந்தன் தீட்டியிருக்கிறார். இது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதியல்ல. முழுக்க முழுக்க பாத்திரங்களின் வழியே அரசியல் பேசுகின்ற,  தன்னிலைக் கதை சொல்லலைக் கடந்தஅரசியல் பிரதியென்பதில் எனக்கு ஐயமில்லை. அது எதிர்ப்பு அரசியலுமல்ல ஆதரவு அரசியலுமல்ல. சனங்களின் வாழ்வை எழுதிய ஒரு கலைஞனின் தன்னிலை சார்ந்த எழுத்தில் இருந்து விலகிய ஒரு புறவயமான படைப்பு மனோநிலையிலிருந்து பிறந்தவை….

ஐயாதுரை பரந்தாமன், தேவபாலு போன்றவர்களை நீங்கள் வாழ்வில் சந்தித்திருக்க முடியும். இப்படியான மாற்றங்களையும் கொலைகளையும், நெருக்குவாரத்தையும் நீங்களும் நானும் கடந்து வந்தவர்கள்தான். தான் கண்ட வாழ்வின் ஒரு பகுதியை சயந்தன் படைப்பு மொழி ஆளுமையுடன் பதிவு செய்திருக்கிறார். இந்த நவீனத்தை வாசிப்பதன் ஊடாக நான் ஒரு காலகட்ட சமூகம், அரசியல் சார்ந்த பல்வேறு போக்குகனை துல்லியமாக இனங்காண்கிறேன்.

இந்த நாவல் தொடர்பாக நான் “எதுவரை” இரண்டாவது இதழில் எழுதிய முதலாவது பதிவு தொடர்பாக ஒரு நண்பர் என்னிடம் கருத்து சொன்ன போது, நாவலில் வருகின்ற பாத்திரங்களின் உரையாடல்களை மேற்கோள் காட்டியிருக்கத் தேவையில்லை என்றார். நான் இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பை குறித்துக்காட்ட வேண்டுமென எண்ணியது பாத்திரங்களின் பதிவின் ஊடே மேல்வருகின்ற அம்சங்களை, இந் நாவலை இது வரை வாசிக்காதவர்கள் இதன் பேசு பொருளை தெரிந்து கொள்வதற்காகவும், நமது நெருக்கடிமிகு வாழ்வில் இதன் பாத்திரங்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த சனங்களும் எப்படி எப்படி அந்தந்த காலகட்ட போக்குகளினாலும் சூழ்நிலைகளாலும் நிர்ப்பந்தங்களாலும் சொல்லாலும் செயலாலும் முழுவாழ்விலுமாக மாறா நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுவதும்  பிரதான தேவையாக இருக்கிறது எனக் கருதினேன்.

இலங்கை தமிழ் மொழி சூழலுக்கு வெளியில் உள்ளவர்கள் நமது அரசியலை வெறுமனே இன உணர்வு,தேசியவாத உணர்வு சார்ந்து பெரிதும் பார்க்க பழகியுள்ளதன் தன்மை அதிகரித்து வருகிறது.இந்தப்போக்கு மிக ஆபத்தாக மாறிவிட்டுள்ளதுடன் பெரும் அக்கப் போர்களுக்கும் தொடர்ந்தும் வழி அமைத்து வருகிறது. ஒரு  இலக்கிய பிரதியின் ஊடே,ஒரு முக்கிய காலகட்டம் எந்த மாதிரி அமைந்திருந்தது என்றும்,இக்காலகட்டத்தில் நமது மக்களின் வாழ்வு, முன்னெழுந்த அரசியல் எத்தன்மையாக இருந்தது என்பதை குறித்துக்காட்டுவதற்கு,பாத்திர உரையாடல்களின் மேற்கோள் இல்லாது இந்த விடயத்தினை சுட்டி பேசுவது முடியாததாக இருக்கிறது என்பதற்கு நான் மேற்கோள்களை எடுத்துக் காட்ட வேண்டி இருந்தது.

இந்த நாவலின் பிரதான பாத்திரம் ஐயாதுரை பரந்தாமனில் தொடங்கி, விடுதலைப் புலிகளுக்கு நாடகம் போடும் சிவராசன், நேரு ஐயா, இத்தாலிக்கு படகில் பயணம் செய்கின்ற போது படகில் உள்ள சிங்கள, தமிழ் பயணிகள், சனங்கள் மேல் நிர்ப்பந்தங்களும்   நெருக்கடிகளும் அதிகாரமும் மேலாதிக்கமும் மனிதர்களை ஆட்டிப்படைப்பதும், அவர்களது விருப்பு, வெறுப்பு, உறவு, முரண்களை மட்டுமல்ல, தேர்வுகளையும்  தீர்மானிப்பதும் மிகத்துல்லியமாக  இந்தப்பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.போர்க்காலத்தினுள் சனங்களின் வாழ்வை மிக விரிவாகவும் அனுபவத் தரிசனமாகவும் எழுதிய நமது தமிழ் நாவல் பிரதிகளுக்குள் ஆறாவடு இந்த இடத்தில்தான் முதன்மையாகிறது.

ஆயுத இயக்க ஆரம்பகால கட்டத்தின் போது இயக்கங்களில் சேர்ந்த கணிசமானவர்களுக்கு எந்த இயக்கத்தில் சேர்வது என்கிற சுய தேர்வு தெளிவாக இருந்ததில்லை. பல இயக்கங்கள் அப்போது இருந்தன. எந்த இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்திற்கு வெளிக்கிடுவது என்பதனை நண்பர்கள், பிரதேசம், ஏனைய தொடர்புகள்தான் தீர்மானித்தன. முதல் போகிற வள்ளம், கெதியா பயிற்சிக்கு அனுப்புகிற இயக்கம், அதிகமான ஆயுதக் கவர்ச்சியை காட்டும் இயக்கம் என்பன  சேரும் இயக்கத் தேர்விற்கான காரணிகளாக இருந்திருக்கின்றன. எல்லாப் பாதையும் ரோமபுரிக்கே என்பது போல் எல்லா இயக்கங்களும் தனி ஈழத்திற்காகவே என்று அன்று இருந்தன.

விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங்களை தடை செய்ததன் பின்னான காலகட்டம் ,இந்தியப் படையின் வருகையின் பின்னான சூழலும்,இயக்க சேர்ப்பில் பலவந்தம், நிர்ப்பந்தம் என்பன இருந்திருக்கின்றன. சக இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்து கொன்றழித்து தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரதேசங்களில் 1990க்குப் பின் வளர்ந்த இளம் தலைமுறையினருக்கு பல  இயக்கத் தேர்வு இருந்ததில்லை. விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த இயக்கம், அவர்கள் சேர்ந்ததும் சேர்க்கப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மட்டும்தான். சனங்களுக்கும் இதுதான் நிலை. எந்தெந்த காலகட்டத்தில் எந்த இயக்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் சனங்கள் இருந்தார்களோ அந்த இயக்கத்தினை ஆதரிப்பது அல்லது அதன் அதிகார மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட்டு காலத்தை ஓட்டுவது சனங்களின் வாழ்வாக இருந்திருக்கிறது.

கட்டாயத்தின் பேரில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, இந்தியப்படையின் வெளியேற்றத்தின் பின் அநாதரவான நிலையில், விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு கொலை அச்சுறுத்தல் காரணமாக நிர்பந்தத்தின் பேரில் விடுலைப்புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட ஐயாதுரை பரந்தாமன், தனது பத்து பனிரெண்டு வருட புலிகள் இயக்க காலப்பணியில் இயக்கம், தலைமை பற்றி சொல்கிறார்.

“சண்டை எண்டு வந்து விட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுண்சும் வாயிலிருந்து தூசணங்களும் பாய்ந்து கொண்டிருக்கும். ரவுண்ஸை அளவாக பாவிக்கச் சொல்லி இயக்கத்திற்குள்ளே விதிமுறை ஒன்றிருந்தது. தூசணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லை.”

“அண்ணணுக்கு எல்லம் தெரியும்” என்று சொல்லியிருக்கக்கூடும். அண்ணணுக்கு எல்லாம் தெரியுமா என்ற ஒரு கேள்வி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தோனுவது ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது மனமும் உடலும் ஒருங்கே   பதற்றமடைவதாய் தோன்றிற்று.”

இன்று வரை மூளைக்குள் கோடுகளையும் வரைபடங்களையும் வரைந்து பழக்கப்பட்டிருந்த நான் முதற் தடவையாக இதயமொன்றை கீறினேன் அதன் குறுக்காக நிற்கின்ற மனிதர்களை கோடுகளாய் சித்தரித்தேன்………… ஒரு பெரும் தனிக் கோடு துப்பாக்கியைப் போல இதயத்தை குறுக்கறுத்துப் போனது அந்தக் கோட்டினை நான் இயக்கம் என குறித்தேன்.”

இந்தியப் படை வெளியேறிய பின், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் வந்த போது நாவலில் இரு இடத்தில் சனங்கள் பற்றிய சித்தரிப்பில்…..

“இவர்கள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே கோயில் ஐயர்கள், பள்ளிக்கூட அதிபர்கள், சேர்ஜ் பாதிரிகள் சரணடைந்து இருந்தார்கள். பருத்த உடம்பினை உடைய புலிகளில் ஒருவன் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தான். “நீங்களோ ஊரில சனங்களிட்ட மதிப்பும் மரியாதையும் உள்ள ஆட்கள், நீங்களே இப்படி இந்தியன் ஆமிதான் திறம் எண்டு கதைச்சால் என்ன நடக்கும் எண்டு யோசியுங்கோ….”

“நீர் சொல்வது மெத்தச் சரிதம்பி, இப்ப பாரும் நீர் எப்படி தன்மையாய் கதைக்கிறீர்…. ஆனால் அவங்கள அப்படியோ…. கதைச்சாங்கள்…. அவங்க எங்க கதைச்சவங்கள்…. துவக்குத்தான கதைக்கும் எண்டவங்கள்” வெற்றிலைச் சிவப்பில் வாயும் சற்றுப் பருத்த கொட்டைப்பாக்கு அளவில் குடுமியும் உள்ள ஐயர் சொல்லிக் கொண்டிருந்த போது இவனும் சந்திரனும் அவர்களை கடந்து உள்ளே போனார்கள்…. முற்றத்தில் தொடங்கி உள் அறைவரை துரோகிகளால் நிரம்பி வழிந்தது….”

துரோகி – தியாகி கதையாடல் அதிதீவிர தேசியவாத தமிழ்ச் சூழலில் கட்டமைக்கப்பட்ட கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே – இந்தப்பாத்திரங்கள் பல்வேறு காலகட்டங்களில் மாறிக் கொண்டே இருக்கின்றன.அமிர்தலிங்கம் தொடங்கி பிரபாகரன் வரை இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. முள்ளிவாய்க்கால் முடிவின் பின் யார் தியாகி, யார் துரோகி என்பதே இன்றைய பெரும் கதையாடலாகவும் விவாதமாகவும் மாறிவிட்டுள்ளதை காண்கின்றோம்.

இந்த நாவலில் ஓர் இடத்தில் -,பாடசாலைக் காலத்தில் பண்டார வன்னியன் நாடகம் போடும் கட்டம் வருகிறது. அங்கதமிக்க பகுதி இது என்றாலும் ஒரு வரலாற்று உண்மையையும் இந்த நாவல் பகிர்ந்து செல்கிறது. பண்டார வன்னியனான நாடகத்தில் பாத்திரமேற்றவன் – பிற்கால இயக்க அரசியலில் துரோகியாகவும் காக்கை வன்னியனாக நடிப்பவன் தியாகியாகவும் வருகிறார்கள்…. காட்சிகளும் பாத்திரங்களும் நமது அரசியல் சூழலில் மாறிக் கொண்டே வருகிறது.

இந்த நாவலில் வருகின்ற நேரு ஐயாவின்  பாத்திரம் – மக்களின் குரலாக வருகிறது. இயக்கத்திற்கு மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்கின்ற அவர், வாய்திறக்க முடியாத சனங்களின் பாடுகளை இந்த நாவலின் பிரதான பாத்திரத்துடன் உரையாடுகின்ற தருணங்கள் இந்த நாவலின் தளத்தை, நாவலாசிரியரின் நோக்கு நிலையை நமக்கு தெளிவுபடுத்துகிறது. இப்படியான பலரை பலரும் தமது அரசியல் காலகட்ட அனுபவங்களில் கண்டு இருக்கக் கூடும். இனி எழுதப்படப்போகின்ற புனைவுப் பிரதிகளில் இந்த நேரு ஐயாவை ஒத்த பாத்திரங்களின் பெறுமானமும் முக்கியத்துவமும் அதிகமாக எடுத்தாளப்பட வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன்.ஏனெனில் இப்பாத்திரங்களின் ஊடாக வெளிவராமல் இருந்த,மறைக்கப்பட்ட,அல்லது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்ற போது இவைகளை கதைக்கக் கூடாது என்கிற அரசியல் திரை ,தடை கடக்கப்பட்டு விட்டது.

இந்த நாவலின் பிரதானமான பாத்திரமான அமுதனின் பார்வையில் அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களிலும் நேரு ஐயா இப்படி சித்தரிக்கப்படுகிறார்.

“நேரு ஐயா நல்ல மனிதர், ஆனால் எப்போது பார்த்தாலும் இயக்கத்தை நொட்டையும் நொல்லையும் சொல்லிக் கொண்டிருந்தார்.”

நேரு ஐயா சொன்னவைகள் இவைதான்….

பாடசாலைக்குச் சென்று பிள்ளைகளை இயக்கத்திற்கு சேர்ப்பது தவறு, யுத்த வெற்றிகளால் மட்டும் நாட்டை பிரித்தெடுக்க முடியாது, பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை கண்டடைய முடியும் ஆகவே பேச்சுவார்த்தை சந்தர்ப்பங்களை தூக்கி எறியாமல் பேச்சுக்குப் போங்கோ…. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வரிவிலக்கு அளித்து, உள்நாட்டிற்குள் பங்கர் வெட்டவந்து, பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பிய சனங்களுக்கு மேல் வரிவிதிப்பது, சில விடயங்கள் தொடர்பாக கேட்கும் போது தலைமைக்கு தெரியாம நடந்தது என சாக்குப் போக்கு சொல்வது வெட்கமானது, இவைகள் இயக்கம் மீதான நேரு ஐயாவின் குற்றச்சாட்டுக்கள் – ஆனால் இதே நேரு ஐயா, யாழ்ப்பாணத்தில் நடந்த மனிட தமிழ் ஒன்று கூடல் நிகழ்வில் விடுதலைப்புலிகள் ,மற்றும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக பேசுகின்ற போது இயக்கத்தை புகழ்ந்து தள்ளுகிறார்.

நாவல் ஆசிரியர் இதனை இப்படி சித்தரிக்கிறார்.

“அனைத்துலக அங்கீகாரம் என்பது புலிகளின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தம்பி பிரபாகரனின் தீர்க்க தரிசனமான வழிகாட்டல் இன்றி தற்போதைய இடத்தை அடைய முடியாது என நேரு ஐயா பேசிக் கெண்டிருந்ததை நான் ஆச்சரியத்துன் கேட்டுக்கொண்டிருந்தேன்.”

அப்படியாக நேரு ஐயா பேசுகின்ற 2002 சமாதான பேச்சுவார்த்தை  காலகட்ட சித்தரிப்பை  நாவலாசிரியர் இப்படி விபரிக்கிறார்.

“செங்கை ஆழியானும் புதுவை இரத்தின துரையும் அருகருகாகப் போடப்பட்ட கதிரைகளில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். ….உதயன் பேப்பரில் தீபனும் சரத் பென்சேக்காவும் கைகொடுத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்……. பாஸ் ஒபிசுகளில் தவங்கிடந்து பினை முறி கட்டி வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்கள் வன்னிக்கு வந்து கொண்டிருந்தார்கள்……… வெளிநாடுகளில் இருந்து “போராட்டத்தை கையில் வைத்து தாங்கியோ என்னவோ” களைத்து இளைப்பாற வந்த செயற்பாட்டாளர்களின் வருகை….., என்பவற்றை அன்றைய அரசியல் சூழலுடன் பொருத்தி சயந்தன் பதிவாக்கியுள்ளார்.

தமிழ் ஊடகத்துறையுடன் தொடர்பு கொண்டிருப்பதாலும் அதன் போக்குகள் பற்றிய நிறைய விமர்சனம் எனக்கு இருப்பதாலும், இந்த நாவலில் வருகின்ற தமிழ் பத்திரிகையாளர்கள் பற்றிய சித்தரிப்பு என்னைப் பெறுத்தவரை முக்கியத்துவமாகிறது மட்டுமன்றி, அந்த காலகட்ட தமிழ் ஊடகத்துறையின் செயற்பாட்டு வழிமுறையையும் நமக்கு முன் அப்பட்டமாக காட்சிப்படுத்தப்படுகிறது. பிரான்சு நாட்டிலிருந்து வந்துள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் எழுப்பிய கேள்வியைப்பார்த்து பிரதான கதாபாத்திரம் இப்படி பேசுகிறது.

பெண் விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்றால் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதா?” “தலையை வறுவறு எண்டு சொறிய வேண்டும் போல எனக்கு தோன்றிற்று. வெளிநாட்டு ஆட்களின் முன் அப்படி நடந்து கொள்வது நாகரீகம் இல்லை என்பதால் சொறிய வில்லை. இப்படி எல்லாம் கேள்விகள் உள்ளன என்பது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் பத்தரிகையாளர்கள் ஒரு போதும் இப்படிக் கேட்டதில்லை. அவர்கள் தயங்கி தயங்கி கேட்கிற ஒரே கேள்வி “தலைவர் எப்பொழுது சண்டையை தொடங்குவார் என்பதே” மிக யதார்த்தமான சித்தரிப்பு இது.அன்றைய கணிசமான தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்படியேதான் தமது பணியை செய்துவந்தனர் என்பது நமக்கு முன்னுள்ள உண்மைகளில் ஒன்றாக இருக்கிறது.

இன்றைய இலங்கையின் சமூக அரசியல் சூழலில் இனங்களிடையேயான ஐக்கியம் முன் நிபந்தனை இல்லாத அவசிய விடயமாகியுள்ளது. இலங்கையின் இனத்துவச் சூழல் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை மோசமான முரண்பாட்டிற்கும் குரோதத்திற்குமிடையே தள்ளி சேற்றில் அமுக்கி வைத்திருக்கிறது. நீடிக்கின்ற அரசியல் நிலைமைகள், அரசியல் போக்குகள் இனங்களிடையேயான உறவை மேசமாக சீர்குலைத்திருக்கின்றன. தவறான பிரச்சாரங்களும் கற்பிதங்களும் அனைத்து இனமக்களை யும் தள்ளிவைத்திருக்கின்றன – இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நோக்கில் சந்தித்துக் கொள்வதோ தமது பிரச்சினைகள் தொடர்பாக உரையாடுவதற்கான வாய்ப்புகளோ இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஒன்றாக இருந்து பிரச்சினைகள் ,பாடுகளை பேசுகின்றபோது புரிதலும் இணக்கமும் பரஸ்பர ஐக்கியமும் ஏற்படுவதற்கு நிறையவே வழியுள்ளது. எல்லாப்பக்கமும் உள்ள அரசியல் இதனை தடுத்தே வைக்கின்றது.

இந்த நாவலில் இத்தாலியை நோக்கி பயணப்படுகின்ற பயணிகளுள் தமிழர், சிங்களவர் உள்ளனர். படகுப்பயண ஆரம்பத்தில் அவர்கள் வழமையான விலகல், முரண்பார்வைகளில் இருந்தாலும் நாட்பட நாட்பட அவர்களுக்குள் நடக்கின்ற உரையாடல்களின் ஊடே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையும் இனவாத சித்தரிப்பின் பிரிப்புக் கோடுகளும் மெல்ல மெல்ல விலகத் தொடங்குவதை நாவல் எடுத்துக்காட்டுகிறது. சிங்கள இளைஞர்கள் இராணுவத்திற்கு செல்வதையும் அதற்கு பின்னால் உள்ள அரசியல் சமூக பொருளாதார சூழலையும், அவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்பதையும் சொல்கிறது. விடுதலைப் புலிகளுக்காக நாடகம் போடும் சிவராசனின் பாத்திரம் ஊடாகவும் இந்த எதிர் நிலை சித்தரிப்பு துல்லியமாக பதிவு பெறுகிறது.

இந்த நாவல் தொடர்பாக வந்த கருத்துக்களை நான் படித்து வந்திருக்கிறேன் – நமது தமிழ்ப் பரப்பில் அதிகமான குறிப்புகள் எழுதப்பட்ட பிரதியாக ஆறாவடு உள்ளது. இந்த நாவல் வருகையின் பின் சயந்தன் வெளியுலகிற்கு அதிகம் தெரிய வந்திருக்கிறார். கவனிப்புக்குரிய எழுத்தாளன் என்கிற பார்வை அவர் மீது கவிந்திருக்கிறது. நான் பல வருடகாலமாய் அவரது செந்த இணைய தளத்தில் அவரது பல சிறுகதைகளை வாசித்தே வந்திருக்கிறேன் – படைப்பாற்றல் மிகு புனைவெழுத்தாளராக அவர் அப்போது  அடையாளம் காட்டினார். ஏலவே அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றும் வெளிவந்துள்ளது. அத்தொகுதி பற்றிப் பேசப்படவே இல்லை. ஆனால் இந்த நாவல் வெளிவந்தவுடன் அதிகமாக பேசப்பட்டதற்கு  இதன்காலமும் இதன் உள்ளடக்கமும் அதிக வாய்பளித்திருப்பதுடன், இந்த நாவலை முன்னுக்கு கொண்டுவருவதில் நாவலாசிரியர் எடுத்துக் கொண்ட பிரயத்தனமும் காரணமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் நமது இலக்கிய அரசியல் சூழல் குழு மையமானதும், வரண்ட, கள்ளமெனங்கள் நிறைந்ததே. அவரது முதல் சிறு கதைத் தொகுதி வெளிவந்த போதே, அவரது கதைகள் இணைய  வெளியில் படிக்கப்பட்ட போதோ அவர் சரியாக அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். நமக்குள் இருக்கின்ற இன்றைய புனைவெழுத்தாளர்களில் சயந்தன் முக்கியமானவர் – அத்துடன் இந்த நாவலின் பேசு பொருளை ஒட்டி இந்த நாவல் முள்ளி வாய்க்காலுக்கு முன் சயந்தனால் எழுதப்படவோ பிரசுரிக்கப்படவோ முடியாததாக இருந்திருக்கும் என்பதும் எனது கருத்தாகும்.

இந்த நாவலின் வடிவக் கட்டமைப்பு ( Structure)தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்து தொடர்பாக என்னால் சொல்லக் கூடியது புனைவுக் கட்டமைப்பு தொடர்பான தேர்வை படைப்பாளியிடம் விட்டு விடுவதே படைப்பூக்கத்திற்கு சாதகமானது என்பதாகும். இந்தப் பிரதியின் இறுதி அத்தியாயம் தொடர்பாக நான் சொல்ல விரும்புவது ,இயல்பாக வந்து கொண்டிருந்த கதை, ஒரு கால் இழந்த இத்ரீஸ் என்கிற முன்னாள்எத்தியோப்பிய கிளர்ச்சியாளனின் முதிர்த்த வயதில், பரந்தாமனின் செயற்கை கால் அவருக்கு கிடைப்பதாக காட்டியிருப்பது அரசியல் படிமம் நிறைந்த குறியீடாக இருந்தாலும் – அதிக செயற்கை தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. இந்த நாவலின் பலவீனம் இந்த முடிவுதான் என்பது எனது தனிப்பட்ட வாசிப்பனுபவமாகும்.

இறுதியாக இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரத்தின் தாயின் மரணம் தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பை மேற்கோள் காட்டுவதன் ஊடாக ஒரு வாசகனான எனது குறிப்பினை முடிக்கலாம் என நினைக்கிறேன்.

“ஆறு மாதத்தில் றோட்டுகளும் ஒழுங்கைகளும் வளவுகளும் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தன. சருகுகளும் கந்தல்களும் குவிந்து போய்க்கிடந்தன. வீட்டைக் கண்டதும் பொல பொலவென்று கண்ணீர் வந்தது. சிவராசன் படலையடியில் சைக்கிளைப் போட்டு விட்டு அம்மாவென்று கத்திக் கொண்டு கட்டில் அருகே ஓடினார். வளவிற்குள் வித்தியாசமான மணம் பரவியிருந்தது. வெளிவிறந்தைக் கட்டிலில் இன்னமும்  ஊனம் வடிந்து கொண்டிருந்த எழும்புக் கூடொன்று நீட்டி நிமிர்ந்து கிடந்தது. அருகில் சில மருந்து டப்பாக்களும் தண்ணீர் இல்லாத ஐந்து பெரிய க்ளாஸ்களும் இருந்தன கட்டிலில் புழுக்கள் நெளிந்தன…..

இது சிவராசனின் தாய்க்கு மட்டுமல்ல,கடந்த நாற்பது வருடத்திற்கும் மேலான அரசியல் ,இராணுவ போராட்டத்தின் விளைவு,முழு தமிழ் மக்களுக்கும்,ஒட்டுமொத்த இலங்கையின் அனைத்து மக்களுக்கும்  இந்த நிலைமையைத்தான் கடைசியில் கையளித்திருக்கிறது என்பதே நாம் கண்டு நிற்கிற வாழ்வின் சித்திரமாக உள்ளது.

ஒரு இளம் தலைமுறை கதைஞனாக நமக்குள் வியாபகம் கொள்கின்ற சயந்தன்,முக்கியமான ஒரு கால கட்டத்தின்  சனங்களின் ஒரு பகுதி வாழ்வை தன்னிலை நின்று நோக்காது,பொது நோக்குநிலையில் நின்று  எதிர்/ஆதரவு அரசியலைக் கடந்து இப்பிரதியை எழுதிச் சென்றிருக்கின்றார்… இன்னும் ஆயிரமாயிரம் கதைகள் எழுதப்படுவதற்கான  தளம் நம்முன் திறக்கப்பட சயந்தனின் படைப்பு நமது படைப்பூக்க வெளிக்கு பங்காற்றியுள்ளதுடன் ,முன்மாதிரியாகவும் உள்ளது.

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book