"

„நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்’ என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம் நாடு வளம் பெறலாம் என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

கட்டுரைக்கு வருவதற்கு முன்,

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளை தொண்டர்களுக்கே போய்ச் சேர்கிறது.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய தேவையே பணம்தான். அதைப் பெற்றுத் தந்தவர்கள் கழகத்தின் தொண்டர்கள். நிறையவே அவர்கள் சிரமப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நானும் செயற்பட்டதனால் அவர்கள் பட்ட சிரமங்கள் எனக்குத் தெரியும்.

முழு நேர வேலை அதன் பின்னர் பகுதி நேர வேலை என்று பணம் சம்பாதித்து வசதிகளை பெருக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழவும் யேர்மனியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் முழு நேர வேலைக்கே விடுமுறை போட்டு விட்டு கழகத்துக்காக உழைத்தவர்கள் புனாவாழ்வுக் கழகத் தொண்டர்கள். அதைவிட வார இறுதி நாட்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறைகளில் ஊர் உலா என்று உலகை வலம் வராமல் புனர்வாழ்வுப் பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.

யேர்மன் நகரங்களில் வருடந்தோரும் வெளிநாட்டவர்களுக்கான விழாக்களில் ஆயிரமாயிரம் மக்களுக்கும், கேவலார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் திருப்பூசையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், யேர்மனிய மாவீரர் வணக்க நிகழ்வில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குமாக உணவு விடுதியில் நெருப்பில் வெந்து, வியர்வையில் குளித்து, உடலை துன்புறுத்தி சமைத்துப் போட்ட தொண்டர்களின் சிரமங்கள் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. சட்டத்திற்கும், சமூகத்திற்கும் இடையூறு இல்லாத வண்ணம் புனர்வாழ்வுப் பணிக்கு நிதி சேகரிக்க தங்களை முழுமையாக ஈடுபடுத்தி புனர்வாழ்வுப் பணிக்கு தொண்டு செய்தவர்கள் அவர்கள்.

தொண்டர்களைப் பற்றி மட்டுமல்ல, புனர்வாழ்வுக்கான தேவையை உணர்ந்து ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் பணம் உதவி செய்த உறவுகளைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

எங்களது தேவை இப்படி இருந்தது. ஒவ்வொரு தமிழரும் குறைந்த பட்சம் பத்து யூரோக்களை புனர்வாழ்வுப் பணிக்குத் தந்து தங்களையும் தாயகத் துயர் துடைப்பில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அது.. அதற்காக தாயக கொள்கையில் மாற்று எண்ணங்களை வைத்திருந்தாலும் அவர்களைக் கூட நாங்கள் சந்தித்தோம். ஒரு அரசசார்பற்ற புனர்வாழ்வுக் கழகமாகவே செயற்பட்டோம்.

நாங்கள் ஒரு நகரத்துக்கு புனர்வாழ்வுக்கான நிதி சேகரிக்கச் சென்றால் ஒருநாளில் ஏறக்குறைய பதினைந்தில் இருந்து இருபது தமிழ்க் குடும்பங்களை அல்லது தனி நபர்களைச் சந்தித்து மாதாந்த நிதியை வங்கி மூலம் பங்களிக்கக் கேட்டுக் கொள்வோம். தங்கள் பங்களிப்புகளை மட்டுமல்ல எங்களுக்கு உணவு தந்து, தேனீர் தந்து அன்போடு உபசரித்து அனுப்பிய உள்ளங்களுக்கும், எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காது தங்கள் கலைகளை புனர்வாழ்வுக் கழகம் நடத்திய நிகழ்ச்சிகளுக்குத் தந்த கலைஞர்களுக்கும் இந்த கட்டுரையின் மூலமாக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பற்றி நண்பர் சிவறஞ்சித்திடம் நான் சொன்ன பொழுது, „எழுதுங்கள்’ என உற்சாகம் தந்து கட்டுரைரையை முழுமை பெறச் செய்தார். „பொங்கு தமிழ்’ இந்தக் கட்டுரையை வெளியிட முன்வந்ததற்கு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு எனது நன்றி.

புலம் பெயர் தமிழர் சமூகத்தில் தாயகத்துக்காக உழைத்த பல விடயங்கள் பதியப் படாமலேயே போய் விடுகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுத முனைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாகிறது.

எத்தனை சிக்கல்கள், எவ்வளவு சிரமங்கள். இவற்றை எல்லாம் புறந்தள்ளி தாயகத்தில் அல்லல் படும் மக்களின் துயர் தீர்ப்பதே எங்கள் பணி என்று சேவை செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளைத் தொண்டர்களுக்கு, „நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம்’ என்ற இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

„கூட்டுறவாக நாம் இருந்தாலே நாட்டின் கவலைகள் அகலுமே’

அன்பன்

மூனா