"

6

இப்பொழுது சிறீலங்காவை விட்டு இன்னும் ஒரு நாட்டுக்குள் நுழைவது போன்ற பிரமை. எனது மனதில் எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

முழு இரவும் பயணம் செய்த களைப்பு. காலையில் சாப்பாடு இல்லை. வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் வெய்யில். இருந்தாலும் மனது மட்டும் குளிர்ச்சியாக இருந்தது. உடலில் ஒரு புத்துணர்ச்சி தானாக வந்து சேர்ந்தது.

கொல்கரின் கண்கள் என்னை நோக்கிக் கொண்டிருந்தன. அவன் எனது மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டிருந்தான் என்று அவனது புன்னகை சொன்னது.

சிவந்த மண் பாதை வளைந்து வளைந்து சென்றது. போராடிப் போராடி மண்ணும் சிவந்து போய் விட்டதோ என்று எனக்குள் ஒரு கற்பனை வந்து போனது. ஆங்காங்கே தமிழீழக் காவல்துறைப் பணியாளர்கள். ஆண், பெண் என்று நீல நிறச் சீருடை அணிந்து அழகாக ஆனால் விறைப்பாக கடமையே கண்ணாக அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தமிழீழச் சோதனை நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினோம். இருவர் எங்களை நெருங்கி வந்தார்கள். ஒருவர் ஒரு காலை இழந்திருந்தது தெரிந்தது. ஆனால் ஆள் உயரமாகவும், திடகாத்திரமாகவும் இருந்தார். மற்றவர் சாதாரண உயரத்தில் இருந்தார்.

„உங்களை அழைத்துப் போக வெண்புறாவில் இருந்து வந்திருக்கிறோம்„ திடகாத்திரமானவரின் பேச்சு கனிவாக இருந்தது.

„நாங்கள் வெண்புறாவுக்கு வாறம் எண்டு யார் சொன்னது?’

„தெரியும். வெள்ளைக்காரன் வந்திருக்கிறான். மற்றது சிவா மாஸ்ரர். இந்த இரண்டும் போதும்தானே. உங்களைக் கண்டு பிடிக்க.’

அவர் உடனடியாகவே நட்பாகிப் போனார். வெண்புறா நிறுவனத்தின் தொழில் நுட்பப் பொறுப்பாளர் அவர். அவரது பெயர் கரிகரன். மற்றவர் அவரது உதவியாளர் சடகோபன்.

அறிமுகங்கள் முடிந்தவுடன் „போகலாமா?’ என்றேன்.

„போகலாம். அங்கை போய் அனுமதி எடுக்காமல் உள்ளை விட மாட்டினம்’ கரிகரன் காட்டிய திசையில் அலுவலகம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் அவசர அவசரமாக கட்டிய கட்டிடங்களாக காட்சி தந்தன. தமிழீழத்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட சில வாரங்களில் நாங்கள் அங்கே நிற்கின்றோம். இன்னும் சரியான முறையில் கட்டிடங்கள் கட்டப் படாமல் இருப்பது தெரிந்தது.

அனுமதி தரும் பணியகத்துக்கு உள்ளே ஒருவர் இருந்தார். வெளியே நின்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். கடவுச் சீட்டை பணிமனையில் கொடுத்தேன். எனது கடவுச் சீட்டை வாங்கிப் பார்த்த அந்த இளைஞன், அவருக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும்.

„நேற்று அல்பா எண்டு ஒருத்தர் வந்தார். இண்டைக்கு ஆழ்வாப்பிள்ளை எண்டு ஒருவர் வாறார்’

அந்த இளைஞனின் பேச்சில் இருந்த ஏளனத்தைப் புரிந்து கொண்டேன்.

„தம்பி ஆழ்வாப்பிள்ளை ஒரு பழைய பெயர். உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் பாஸைத் தாங்கோ’ நான் அப்படிப் பேசியது அந்த இளைஞனுக்குப் பிடிக்கவில்லை. பேசாமல் எழுந்து உள்ளே போய் விட்டான்.

உள்ளே இருந்து ஒன்று இரண்டு பேர்களாக வந்து எட்டிப் பார்த்தார்கள். எனது பக்கத்தில் நின்றிருந்த கரிகரன் என்னைப் பாவமாகப் பார்த்தான்.

தேவை இல்லாமல் வாயைக் கொடுத்து விட்டேனோ என்று எண்ணம் வந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் நின்றேன்.

பத்து நிமிசம் போயிருக்கும். அந்த இளைஞன் மீண்டும் வந்தான்.

„வெள்ளைக்காரனுக்குத் தேவை இல்லை. மற்ற இரண்டுக்கும் ஆளுக்கு ஐநூறுப்படி ஆயிரம் ரூபா தாங்கோ’ என்னை அந்த இளைஞனுக்குப் பிடிக்கவே இல்லை என்பது தெரிந்தது. என் முகத்தைப் பார்ப்பதை அவன் தவிர்த்ததில் இருந்து அதைப் புரிந்து கொண்டேன்.

நானும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்து உள்ளே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன்.

வெண்புறாவை நோக்கி எங்களது பயணம் ஆரம்பமானது. கிளிநொச்சி வரும் வரை பெரிதாக ஆட்களின் நடமாட்டங்கள் இருக்கவில்லை. நகரத்தை நெருங்க நெருங்க ஆட்களின் நடமாட்டங்களும் தமிழீழ பணியகங்களின் வாகனங்களும், சைக்கிள்களும் என வீதிகள் நிறைந்திருந்தன. எங்களது வாகனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வளாகத்துக்குள் சென்று நின்றது.

பணியகத்தின் வாசலில் இருவர் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். தனது பெயர் இனியவன் என்று ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மெலிதான தேகம், சிரித்த முகம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளரின் உதவியாளர் அவர். மற்றவர் அன்ரனி. வெள்ளை சேர்ட், கறுத்த ரவுசர், சுருள் முடி, சிரித்த முகம். வெண்புறாவின் நிர்வாகி அவர்.

எனக்குக் கிடைத்த தகவலின் படி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் கே.பி.ரெஜி என்னை வந்து சந்திப்பார் என்று இருந்தது. ஆனால் வந்து சந்தித்ததோ இணைப்பாளரின் உதவியாளர். நான் அவரிடமே கேட்டேன், „உங்கள் இணைப்பாளர் வரவில்லையா?’

„அவருக்குக் காய்ச்சல். இப்ப இங்கை மலேரியா உ லாவுது’ இனியவன் சொல்லும் பொழுது, எனக்கு மலேரியா பயம் பிடித்துக் கொண்டது. இனியவனுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நான் அந்த இடத்தைப் பார்ப்பதைப் பார்த்த அன்ரனி சொன்னார். „அவர்தான் ரெஜி’

„மலேரியா வந்தால் உடம்பை வாட்டி எடுத்துப் போடும்’ அன்ரனி சொல்லும் பொழுது உடல் நடுங்குவது போன்ற உணர்வு.

„அது ஐஞ்சாறு „குயினின்’ போட்டால் சரியாப் போடும். நீங்கள் பாருங்கோ இன்னும் மூன்று நாளிலை ரெஜி உங்களை வந்து சந்திப்பார்’ அன்ரனி நம்பிக்கை தந்தார்.

„நேற்று இரவு வெளிக்கிட்டது. களைச்சுப் போயிருப்பீங்கள். போய் ரெஸ்ற் எடுங்கோ. நாளைக்கு நான் உங்களை வந்து சந்திக்கிறன்’ இனியவன் சொல்ல அன்ரனியும் அதை ஆமோதித்தார்.

„உங்களுக்கு வெண்புறாவிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறன். பிடிச்சால் சரி. இல்லை எண்டால் ஹொட்டலிலை தங்கலாம்’ அன்ரனி சொல்லி விட்டு என் முகத்தைப் பார்த்தார்.

„வசதி எண்டு எங்களுக்கு ஒண்டும் பெரிசா தேவை இல்லை. இங் கை பெரிய வசதி இருக்காது எண்டு கொல்கரிட்டை நான் ஏற் கெனவே சொல்லிட்டன்’

„அப்ப வாங்கோ வெண்புறாவுக்கே போவோம்“

வெண்புறா நிலையத்தைப் பார்த்தவுடன் எனக்கு பழைய கிளிநொச்சி, பரந்தன் நகரங்கள் நினைவுக்கு வந்தன.

வெண்புறா நிலையம் அமைந்திருந்த இடம் முன்னர் ஒரு பன்னசாலையாக இருந்தது. அந்த ஒற்றைப் பனைமரமும் அதனருகே இருந்த அரசமரமும் எனக்கு பழையதை நினைவு படுத்தின. நிலத்தைத் தொடுவது போல் கிளைகள் பரப்பி இருந்த அரச மரத்தின் கீழ் முன்னர் புத்தர் இருந்தார். இப்பொழுது பிள்ளையார் அமர்ந்திருந்தார். சுற்று மதிலுக்குப் பின்னால் சற்றுப் பருத்து, பெருத்து ஓலைகளால் சடைத்து நின்றது ஒரு ஆண்பனை.

வாசலில் வெண்புறா சின்னத்துடனான தொழில் நுட்ப நிறுவனத்தின் அறிவுப்புப் பலகை. ‘இராணுவச் சீருடைகளுடனோ, ஆயுதங்ககளுடனோ தயவு செய்து உள் நுழையாதீர்கள்’ என அந்த அறிவுப் பலகையின் இறுதி வாசகங்களில் குறிப்பிட்டிருந்தன. எங்கள் வாகனம் கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறாவுக்குள் நுழைந்தது.

அங்கிருந்தவர்கள் ஒரு தயக்கத்துடன் மெதுவாக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். போராட்டச் சூழலில் வாழ்ந்தவர்கள் இன்று சற்று ஓய்வாக அமைதியான காற்றைச் சுவாசிக்கிறார்கள். அவர்களது இருப்பிடத்திலேயே தங்கி அவர்களுக்கு பயிற்சி தர ஒரு வெள்ளைக்காரன் வந்திருக்கின்றான் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தது. சமாதான ஒப்பந்த நேரத்தில் வெளிநாட்டில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிளை ஒன்றில் இருந்து தாயக மக்களுக்கு உதவி செய்யச் சென்றது நாங்கள்தான் என்ற எண்ணம் எங்களுக்குப் பெருமையாக இருந்தது. அதே நேரம் அங்கிருப்பவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். அவர்களை எந்த வகையில் அணுக வேண்டும். கொண்டு வந்த பொருட்களையோ, பணத்தையோ கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? ஏதாவது கொடுக்கப் போய் கேள்விகள் ஏதாவது வந்து சேருமா என்ற ஒருவித அச்சம் எனக்குள் இருந்தது.