"

67

பலருக்கு மனது என்றால் என்ன? புத்தி என்றால் என்ன என்பது தெரியவில்லை. மனது என்பது எப்பொழுதும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அது ஒவ்வொரு விஷயத்திலும் பிடிக்கும், பிடிக்காது என்பதை நமக்குக் கூறும். புத்தி என்பது நல்லது, கெட்டது எது என்பதை நமக்கு உணர்த்தும்.

உதாரணமாக, ஒரு கார் வாங்குவதற்காக நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்கிறீர்கள். அங்கே 50 விதமான கார்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறார்கள். நீங்கள் தூரமாக இருந்து 50 காரையும் உங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது உங்கள் மனது அந்த 50 காரில் ஏதாவது ஒன்று அல்லது 2 கார்களில் மட்டுமே கவனம் செலுத்தும். நமது மனது இந்த 50 காரில் எந்தக் கார் பிடித்திருக்கின்றது. எந்தக் கார் பிடிக்கவில்லை என உடனடியாக நமக்கு தெரியப்படுத்தும். இந்த மனதிற்கு அந்தக் காரில் எத்தனைபேர் பயணம் செய்யலாம். நம்மால் வாங்க முடியுமா? அதன் விலை என்ன? பெட்ரோல் மூலமாக ஓடுகிறதா? டீசல் மூலமாக ஓடுகிறதா? என்பதெல்லாம் பற்றிக் கவலைப்படவே படாது. மனது எனக்குப் பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பது மட்டுமே நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆனால் புத்தி என்பது அந்தக் கார் அலுவலகத்திற்குச் சென்று ஒவ்வொரு காரைப்பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு எந்தெந்தக் காரின் விலை எவ்வளவு? எதற்கு லோன் கிடைக்கும். கிடைக்காது. இது நம் வீட்டிலுள்ள அனைத்து நபர்களுக்கும் பொருந்துமா? அலுவலகத்திற்கும் பொருந்துமா, நமது வீட்டில் நிறுத்த முடியுமா போன்ற பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து போன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டு இரண்டு மூன்று நாள் அல்லது ஒரு வாரத்திற்குப்பிறகு நமது புத்தி ஒரு முடிவுக்கு வரும். இந்த 50 காரில் இந்தக் கார் தான் இருப்பதிலேயே நல்லது. இதை நாம் வாங்கலாம் என்று கூறும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனதிற்குப் பிடித்த காருக்கும், புத்தி நல்லது என்ற காருக்கும் சம்பந்தமே இருக்காது. இதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நம் மனது ஒரு முடிவையும், புத்தி ஒரு முடிவையும் எடுக்கிறது. ஒரு உணவுக்கடையில் சென்று அமரும்பொழுது நமது மனது கொத்து புரோட்டா சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறது. ஆனால் அதைச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும் என்று வேறு உணவை நல்லது என்று புத்தி கூறுகிறது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு இடத்திலும் புத்தியும், மனதும் வேறு வேறு முடிவை எடுக்கிறது என்று நாம் தடுமாறுகிறோம். உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் உள்ள குழப்பத்திற்கு காரணம் மனதிற்குப் பிடித்ததைச் செய்வதா? அல்லது நல்லதைச் செய்வதா? இந்தக் குழப்பம்தான் மனதின் அமைதியின் மிகப்பெரிய எதிரி. இதைப் புரிந்து கொண்டால் நம் மனதில் அமைதி என்றும் இருக்கும்.

புத்தியும், மனதும் தனித்தனியாக வேலை செய்யும்பொழுது நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது. புத்தியும், மனதும் ஒன்றாக எப்பொழுது இயங்குகிறதோ நாம் ஞானம் அடைகிறோம். ஞானி என்றால் என்ன? ஞானி என்றால் மனதும், புத்தியும் ஒரே முடிவை எடுப்பவர்களுக்கு ஞானி என்று பெயர். ஞானிகளுக்கு இந்தக் குழப்பம் வராது.

கமலஹாசன் நடித்த இந்தியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். அந்தத் திரைப்படத்தில் இந்தியன் தாத்தா தனது மகன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக அவரைக் கொலை செய்வதற்காக துரத்தி வருகிறார். அப்பொழுது இந்தியன் தாத்தாவின் மனைவி வீட்டில் இருக்கும்பொழுது அவரிடம் கேட்பார். மகன் எங்கே என்று, அந்தப் பாட்டிக்குத் தன் மகன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்தும், தெரியாது என்று பொய் சொல்லுவார். அப்பொழுது அந்தத் தாத்தா உனக்குப் பொய் சொல்லத்தெரியாது உண்மையைச் சொல் என்று கேட்பார். அதற்கு அந்தப் பாட்டி என் புத்திக்குப் புரிகிறது, ஆனால் மனசு கேட்கமாட்டேன் என்கிறது என்று கூறுவார். அதற்கு இந்தியன் தாத்தா எனக்கு மனசும், புத்தியும் ஒன்றுதான் என்று கூறுவார். இந்த இடத்தை புரிந்து கொண்டால் நாம் மனதையும், புத்தியையும் ஒன்றாக்குவது மிகமிக சுலபம். மனதையும், புத்தியையும் ஒன்று சேர்த்து ஒரே விஷயத்தில் கவனிக்க வைப்பதற்கும், ஒரே முடிவை எடுக்க வைப்பதற்கும் நமக்குச் சில வழிமுறைகள் உள்ளன. அதை கற்றுக்கொள்வது மூலமாக நாம் ஞானியாகலாம்.

சில வீடுகளில் சில குழந்தைகள் நன்றாக விளையாடும். மனத்திற்குப் பிடித்தவாறு சந்தோசமாக இருக்கும் இந்தக் குழந்தைகள் லூட்டி அடிக்கும் குழந்தைகள் என்று கூறுவார்கள். இந்தக் குழந்தைகள் வீட்டிலுள்ள அனைத்து பொருளையும் உடைக்கும். ஒருகாரியத்தை மனத்திற்குப் பிடித்தால் மட்டுமே செய்யும் மனதிற்குப் பிடிக்கவில்லையென்றால் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை செய்யாது இப்படி சிறு வயதிலிருந்து மனதிற்கு பிடித்த மாதிரியே வாழ்ந்த ஒரு குழந்தை புத்திசாலித்தனத்தை அதிகமாகப் பயன்படுத்தாது. எனவே இதனால் மற்றவர்களுக்கு அதிகமாகத் துன்பம் ஏற்படும் அதே சமயத்தில் அந்தக் குழந்தையைப் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால் மனதுக்கு பிடித்தமாதிரி எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும். இப்படி நம் வீட்டில் சில குழந்தைகளைச் செல்லமாக நாம் வளர்த்துவதுண்டு. இந்தக் குழந்தைகள் மனத்திற்கு பிடித்த விஷயத்தை மட்டுமே செய்யும். ஆனால் புத்தியைப் பயன்படுத்தாமல் நல்லது, கெட்டது பற்றி என்றும் யோசிக்காது.

இப்படிச் சிறு வயதிலிருந்து வளர்ந்த ஒரு குழந்தை ஏதாவது ஒரு வயதில் குறிப்பிட்ட ஒரு நாளில் மனதிற்குப் பிடித்தார்போல வாழ்ந்ததால் வாழ்க்கையில் ஒரு இடத்திற்கு மேல் நகர முடியாமல் புத்தியைப் பயன்படுத்தாமல் ஒரு இடத்தில் நன்றாக வாழ்க்கையில் அடிபட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அந்தக் குழந்தை (குழந்தை என்றால் வயது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்) வாழ்க்கையின் ஒரு இடத்தில் அடிபடும் பொழுது வாழ்க்கையே வெறுத்து இனிமேல் நாம் நம் மனதிற்குப் பிடித்தவாறு வாழக்கூடாது, புத்திசாலிதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும். இப்படி முடிவெடுத்து அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் புதிய ஒரு பரிணாமத்தில் புத்திசாலியாக வாழ ஆரம்பிக்கும். ஆனால் மனதிற்குப் பிடித்தவிஷயங்களைச் செய்யாது, இப்படி வாழும் குழந்தைகளை அதாவது பெரியவர்களை நாம் பார்க்கும் பொழுது அவர்கள் நன்றாக வசதியாக இருப்பார்கள். அருமையாகத் தொழில் செய்வார்கள், காசு, பணம் புகழ் இது போன்ற பல விஷயங்களில் சாதித்திருப்பார்கள். ஆனால் மனத்திற்குப் பிடித்த விஷயங்களைச் செய்யாமல் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். இவர்களை நல்ல புத்திசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் மனசாட்சி இல்லாதவர் என்று குறை கூறுவார்கள். இப்படி உலக மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இரண்டாவது வகை மனிதர்கள் பிறந்தது முதல் புத்திசாலியாக இருப்பார்கள். ஒரு சில வீடுளில் உள்ள குழந்தைகள் லூட்டி அடிக்காது நன்றாக சமத்தாகப் படிக்கும். சொன்னால் கேட்டுக் கொள்ளும் எந்தப் பொருளையும் உடைக்காது. ஒழுங்காகப்

பள்ளிக்குச் செல்லும். நல்ல மதிப்பெண் எடுக்கும், யார் என்ன சொன்னாலும் தலையாட்டி விட்டு புத்திசாலியாக இருக்கும் இந்தக் குழந்தைகளைப் பெற்றோர்கள் என் மகன், என் மகள் நல்ல புத்திசாலி சமத்தான பெண் என்று கூறுவார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளின் மனதுக்கு பிடித்தமாதிரி எந்தக் காரியத்தையும் அது செய்யாமல் புத்திசாலி என்ற பெயர் வாங்கிக் கொண்டே பல வருடங்களாக வாழும்பொழுது பல விஷயங்களைச் சிறு வயதிலிருந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதால் ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் புத்திசாலியாக இருந்தததால்தான் நம் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டோம் இனிமேல் நான் புத்திசாலியாக இருக்க மாட்டேன், நான் என மனதிற்குப் பிடித்தார்போல வாழப் போகிறேன் என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்தக் குழந்தை தன் மொத்த தன்மையை மாற்றி புத்திசாலித் தனத்தைக் கைவிட்டு விட்டு மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்துவிடும்.

இப்படி உள்ள பலபேரை மற்றவர்கள் இவர் ரொம்ப நல்லவர், தங்கமானவர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர், இவரால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று பெருமையாகப் பேசுவார்கள் ஆனால் இவர் பிழைக்கத் தெரியாதவர் என்று குறை கூறுவார்கள் இப்படி உலகில் உள்ள எந்த மனிதரையும் தரம் பிரித்தால் ஒன்று பிழைக்க தெரிந்தவர் மனசாட்சி இல்லாதவர் அல்லது நல்லவர் பிழைக்கத் தெரியாதவர் என்று இரண்டு வகையாக மட்டுமே பிரிக்கலாம். இதில் நீங்கள் எந்த வகை என்பதை யோசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.