68
1. மனதிற்குப் பிடித்தாற்போல வாழ்பவர்கள், புத்தியைப் பற்றி கவலைப்படாதவர்கள்.
2. புத்திசாலிதனத்தை மட்டுமே நம்பி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்பவர்கள்.
3. மனசாட்சியோடு புத்திசாலிதனத்தைப் பயன்படுத்துபவர்கள்.
இதில் நீங்கள் எந்த வகை என்பதை யோசித்துப் பாருங்கள். இதில் மூன்றாவது வகை மனிதர்களே ஞானிகள். எனவே கண்டிப்பாக, பொதுவாக அனைவரும் முதல் இரண்டு வகையில் மட்டுமே வருவோம். இந்த முதல் 2 வகையில் எந்த வகையை சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, சந்தோஷம் இருக்காது. ஆனால் எப்பொழுதும் கவலை, கோபம், பயம், டென்ஷன் ஆகியவை நிறையாக நன்றாகவே இருக்கும். இதற்குக் காரணம் மனதிற்கும், புத்திக்கும் உள்ள சண்டைதான்.
ஒரு மனிதனின் மனக் குழப்பத்திற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்று, ஏற்கனவே நடந்த விஷயத்தை நாம் தவறாக செய்து விட்டோம், சரியாக செய்யவில்லை. இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், சே ! தப்பு செய்து விட்டோமே ! என்று கவலைப் படுவோம். இல்லை, நாம் எடுத்த தவறான முடிவுக்காக பலர்மீது கோபப்படுவோம் அல்லது பலரைப் பார்த்து பயம் வரும். எனவே இனிமேல் நம் வாழ்க்கையில் நடக்க போகும் விஷயத்தைப் பற்றியும் பயம் வரும். இதற்குக் காரணம் நாம் எடுத்த தவறான முடிவுகளே.
எனவே கடந்த வாழ்க்கையில் நாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரி என்று ஒரு வேளை இருந்தால் நீங்கள் இப்பொழுது அமைதியாக, சந்தோஷமாக ஆனந்தமாக இருப்பீர்கள் இல்லையா? எனவே நாம் எடுத்த முடிவுகளனைத்தும் சரி என்று எப்பொழுது வாழ்கிறோமோ, சரியாக இருக்கிறதோ கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையும் இல்லாமல், வருங்கால வாழ்க்கையைப் பயமும் இல்லாமல் இந்த நிமிஷத்தில் நாம் அமைதியாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும்.
எனவே இனிமேல் நாம் ஒவ்வொரு முடிவும் எடுக்கும்பொழுதும் அனைத்து முடிவுகளையும் மனதிற்குப் பிடித்தாற்போல் எடுக்காமல் அனைத்து முடிவுகளையும் நல்லது அல்லது லாபம் தரக்கூடியது என்று புத்திக்குப் பிடித்த முடிவை மட்டுமே எடுக்காமல் இரண்டிற்கும், இரண்டு முடிவுகளில் இருந்தும் வெளியே வந்து ஞான புத்தியோடு யோசித்து இந்தச் சமயம், இந்த நாளில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் மனதின் பக்கம் மனசாட்சிப்படி நடக்க வேண்டுமா? அல்லது புத்திசாலித்தனமாக நடக்க வேண்டுமா? என்று யோசித்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்கும்பொழுது புத்திசாலித் தனமாக எடுக்க வேண்டுமென்றால் நம் மனத்தைப் புத்தி கொண்டு சமாதானப்படுத்தி அதைப் பிடித்த முடிவாக மாற்ற வேண்டும். ஒரு வேளை, மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டுமென்றால் நம் புத்தியை மனது கொண்டு சமாதானப்படுத்தி இது இப்பொழுது நல்ல முடிவு என்று புத்தியைச் சமாதானப்படுத்த வேண்டும்.
இப்படி நம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் மனதையும், புத்தியையும் சமாதானப்படுத்தி ஒரே நேர்கோட்டில் இரண்டையும் ஒன்றாக வைத்து கொள்ளும்பொழுது நம் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி என்றுமே கவலைப்பட மாட்டோம். வருங்காலத்தை எண்ணியும் பயப்படமாட்டோம். எனவே நிம்மதியாக வாழலாம். இதற்கு ஞானப்புத்தி என்று பெயர்.
ஒவ்வொரு முடிவும் எடுக்கும் பொழுது எப்படி நாம் முடிவெடுக்க வேண்டும்? என்று பலருக்குக் குழப்பம் இருக்கும். எப்பொழுதுமே நாம் எடுக்கும் முடிவு முடிந்தவரை மனதிற்குப் பிடித்த முடிவாக இருக்கும்பொழுது நாம் நிம்மதியாக வாழ முடியும். அதே சமயத்தில் மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டுமென்றால் அவரவர் இஷ்டத்திற்கு வாழ இந்த உலகத்தில் முடியாது. அது தவறான ஒரு வாழ்க்கைக்கு வழி வகுத்துவிடும். மனதிற்கு பிடித்தது போலவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. அந்த முடிவால் யாருடைய மனதிற்கும், உடலுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. இதை ஞாபகம் வைத்துக் கொண்டு நாம் முடி வெடுத்தால் அந்த முடிவு என்றென்றும் சரியான முடிவாக மட்டுமே இருக்கும். எனவே ஒவ்வொரு முறை நம் மனது குழப்பத்தில் இருக்கும்பொழுது மனதிற்குப் பிடித்த முடிவு புத்திக்குப் பிடித்த நல்ல முடிவு, என்று இரண்டையும் விட்டு வெளியே வந்து ஆலோசனை செய்து இந்த 2 முடிவுகளில் எந்த முடிவு எடுத்தால் இந்த சமயத்தில் நல்லது நமக்கு பிடித்தது மேலும் அடுத்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை மனதில் கொண்டு எடுக்கும்பொழுது அந்த முடிவு சரியான முடிவாக இருக்கும்.
ஆனால் நம்மில் பலர் எப்பொழுது முடிவெடுத்தாலும் எந்த முடிவில் அதிக இலாபம் இருக்கும்? நமக்குச் சாதகமாக இருக்கும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம்? பிறருடைய மனதும், உடலும் பாதிக்கும் என்பதை யாருமே கவலைப்படுவது கிடையாது. இப்படி நாம் அடுத்தவர்களின் மனதை பாதித்து எடுக்கும் முடிவுகளால் அவர்கள் நம்மை சபிக்கும்பொழுது அந்தச் சாபம் நமக்கும், நம் வாழ்க்கைக்கும் இடையூறாக இருக்கும். எண்ணம்தான் வாழ்க்கை. நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று பலர் எண்ணினால் அந்த எண்ணம் நம்மை வாழ வைக்கும். நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று பலர் எண்ணினால் நமது வாழ்க்கை நன்றாக இருக்காது.
பல அரசியல்வாதிகள் பல கொலைகளை, கொள்ளைகளைப் பலருடைய வாழ்க்கையை வீண் செய்து ஆட்சியைப் பிடிப்பதற்காக பல தவறான வழிகளைப் பயன்படுத்தியும், பல வருடங்களாக அவர்கள் நன்றாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம், அவர்களால் நாட்டின் பல நபர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்களை விட நன்றாக இருக்கும் நபர்கள் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் பிழைப்புக் கெட்டுவிடுமே என்ற எண்ணத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே பலரும் வேகமாக முன்னேறி திடீரென பாதாளத்தில் சரிவதற்குக் காரணம், மற்றவர்கள் மனதை மற்றும் உடலைப் பாதிப்பதால் ஏற்படும் முன்னேற்றமே. எனவே தயவுசெய்து வியாபாரத்தில் மற்றும் குடும்பத்தில் மற்றும் எல்லா இடங்களிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் முடிந்தவரை மனதிற்குப் பிடித்தமான முடிவும், நல்லதுமாக இருக்குமாறும் அடுத்தவர்கள் மனதையும் உடலையும் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும். இப்படி எடுத்து நம் வாழ்க்கையில் வாழ்ந்தால் நமது முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருக்கும். ஆனால் கீழே விழவே மாட்டோம். போகப்போக நமது முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்து மிகப்பெரிய அளவில் நமது உடல், மனம், புத்தி, பொருளாதாரம் அனைத்தும் அதிகரிக்கும்.
சில சாமியார்கள் 120 நாடுகளில் ஆசிரமங்களை வைத்துப் பல கோடி மக்களுக்கு பல பயிற்சிகளைக் கொடுத்து பல கோடி ரூபாய்களைக் கணக்குப் பார்த்து தினமும் பல்வேறுவிதமான மிரட்டல்களையும், பிரச்சினைகளையும் சமாளித்து ஒவ்வொரு விநாடியும் அமைதியாக, நிம்மதியாக ஏதாவதொரு கூட்டத்தில் மைக்கின் முன்னால் அமர்ந்து வெட்டியாகப் பேசிக் கொண்டிருக் கிறார்களே! இதற்குக் காரணம் என்ன வென்றால் இவர்கள் ஞானபுத்தியை பயன்படுத்தி எடுக்கும் முடிவுதான்.
சிறிய ஒரு கம்பெனியை வைத்து 10 நபர்களை வேலைக்கு வைத்திருக்கும் நாமே கம்பெனியின் வேலை கெட்டுப்போனால் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். அப்படி இருக்கையில் சில குருநாதர்களால் ஒவ்வொரு நாட்டு ஆசிரமத்திலும், எத்தனையோ கேசுகள், எத்தனையோ வங்கிக் கணக்குகள், எத்தனையோ பிரச்சினைகளைச் சமாளித்தும் அவர்களால் எப்படி நிம்மதியாக, அமைதியாக எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க முடிகிறதென்றால் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விநாடி மட்டுமே அல்லது ஒரு நிமிடம் மட்டுமே செலவு செய்வார்கள். மிகப்பெரிய முடிவுகளுக்கு சரியான முடிவு எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்ட பிறகு நாம் பல வருடங்களாக யோசித்து முடிவு எடுக்க முடியாத பல முடிவுகளை அவர்கள் ஒரு விநாடியில் எடுத்துவிட்டு மீதமுள்ள நேரங்களில் சும்மா இருப்பார்கள். ஆனால் நம்மில் பலர் சிறிய சிறிய பிரச்சினைகளுக்குப் பல வருடங்களாக மண்டையை உடைத்து இன்னமும் முடிவு எடுக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரே விஷயத்தை நம் மனம் நினைத்துக் கொண்டு குழப்பத்தில் இருக்கும் பொழுது நமக்கு நிம்மதியும், அமைதியும் கிடைப்பதில்லை. எனவே இனிமேல் முடிவெடுப்பது எப்படி என்பதை ஞானபுத்தியைக் கொண்டு புரிந்து கொண்டால் இனி நாமும் சும்மா இருப்போம். இப்படிச் சும்மா இருந்தால் நீங்களும் ஞானியாகலாம்.
ஆரம்பத்தில் இது சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் இன்றுமுதல் ஒரு 3 மாதம் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவாவது நாம் ஞானியாகி விடலாம். ஆரம்பத்தில் சிறுசிறு முடிவுகளை ஒரு காகிதம் எடுத்து எழுதிப் பழகுங்கள். நம் மனதிற்குப் பிடித்த முடிவு எது? புத்திக்குப் பிடித்த முடிவு எது? இந்த 2 முடிவுகளால் வரும் விளைவுகள் என்ன? இதில் யார் யார் பாதிக்கப்படுவார்கள்? என்ன இலாபம், நஷ்டம்? எது பிடிக்கும்? பிடிக்காது? என்பதை எழுதி வைத்து அந்தத் தாளைக் கையில் வைத்து இதில் சரியான முடிவு எது என்பதை யோசித்து முடிவெடுத்துக் பழகினால் போகபோக இனிமேல் நாம் மனதிலேயே இந்த முடிவை எடுக்க முடியும்.
எனவே தான் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் ஒரு சங்கல்பத்தை அனைவரும் தினமும் கூற வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார். “நான் என் வாழ்நாளில் யாருடைய மனதிற்கும், உடலிற்கும் எந்தத் துன்பத்தையும் தரமாட்டேன். துன்பப்படுபவர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்று வேதாத்திரி மகரிஷி ஐயாவை பின்பற்றும் நபர்கள் அடிக்கடி மூன்று முறை கூறிக் கொள்வார்கள். எனவே நாமும் தினமும் இந்த சங்கல்பத்தை தினமும் மூன்று முறை கூறுவோம்.