சோஷலிசத்தில் தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் ‘குறைக்கப்படாத’ அல்லது ‘முழுமையான பயன்’ கிடைக்குமென்று லஸ்ஸால் கூறிய கருத்து தவறென்பதை நிரூபிக்க கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் மார்க்ஸ் விவரமான பரிசீலனையில் இறங்குகிறார். சமுதாயத்தினுடைய சமூக உழைப்பு அனைத்திலுமிருந்து காப்பு நிதி ஒன்றைக் கழிக்க வேண்டுமென்பதை, பொருளுற்பத்தியை விரிவாக்குவதற்கும், இயந்திரங்களின் ‘தேய்மானத்துக்கு’ மாற்றீடு செய்வதற்கும் இன்ன பிறவற்றுக்குமான நிதிகளைக் கழிக்க வேண்டுமென்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். பிறகு நுகர்வுச் சாதனங்களிலிருந்து நிர்வாகச் செலவுகளுக்கும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், முதிய வயதினர் இல்லங்கள் முதலான பலவற்றுக்கும் வேண்டிய நிதியைக் கழிக்க வேண்டும்.
லஸ்ஸாலின் தெளிவற்ற, குழப்படியான, பொதுத் தொடருக்கு (‘தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் முழுமையான பயன்’) பதிலாய், மார்க்ஸ் சோஷலிச சமுதாயம் அதன் விவகாரங்களை உண்மையில் எப்படி நிர்வகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து நிதானித்து மதிப்பீடு செய்கிறார். முதலாளித்துவம் இல்லாது ஒழிந்து விடும் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளை மார்க்ஸ் ஸ்தூலமான முறையில் பகுத்தாராய முற்படுகிறார். அவர் கூறுவதாவது:
“இங்கு நாம் ஆராய வேண்டியிருப்பது [தொழிலாளர் கட்சியின் வேலைத்திட்டத்தைப் பகுத்தாராய்கையில்] தனது சொந்த அடித்தளங்களின் மீது வளர்ந்தெழுந்துள்ள ஒரு கம்யூனிச சமுதாயமல்ல; மாறாக முதலாளித்துவச் சமுதாயத்திலிருந்து வெளித்தோன்றுவதும், ஆகவே தான் உதித்த அந்தப் பழைய சமுதாயத்தினிடமிருந்து பெறப்பட்ட பிறவிக்குறிகள் ஒவ்வொரு வழியிலும் பொருளாதார வழியிலும் தார்மீக வழியிலும் அறிவு வழியிலும் _ இன்னமும் பதிந்திருப்பதுமான கம்யூனிச சமுதாயத்தையே இங்கு நாம் ஆராய்கிறோம்.’’
இந்தக் கம்யூனிச சமுதாயத்தைத்தான், முதலாளித்துவத்திலிருந்து பிறந்து இப்பொழுதுதான் வெளியே வந்த அந்தப் பழைய சமுதாயத்தின் பிறவிக்குறிகள் எல்லா வழியிலும் பதிந்திருக்கும் இந்த சமுதாயத்தைத்தான் மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் ‘முதல்’ அல்லது கீழ்க் கட்டம் என்று குறிப்பிடுகிறார்.
உற்பத்திச் சாதனங்கள் இப்பொழுது தனியாட்களது தனியுடைமையாய் இல்லை. உற்பத்திச் சாதனங்கள் சமுதாயம் அனைத்தின் உடைமையாகிவிட்டன. சமூகத்துக்குத் தேவையான வேலையில் ஒரு பகுதியைச் செய்திடும் சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரும் இவ்வளவு வேலையைச் செய்திருப்பதாய்க் கூறும் சான்றிதழ் ஒன்றைச் சமுதாயத்திடமிருந்து பெற்றுக் கொள்கிறார். இச்சான்றிதழைக் கொண்டு இதற்கு இணையான அளவுக்கு அவர் நுகர்வுப் பண்டங்களின் பொதுக் களஞ்சியத்திலிருந்து பண்டங்கள் பெறுகிறார். பொது நிதிக்குச் செல்லும் உழைப்பின் அளவு கழித்தெடுக்கப்பட்ட பின், ஒவ்வொரு தொழிலாளியும் சமுதாயத்திற்குத் தான் அளித்ததற்குச் சமமான அளவில் அதனிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.
‘சமத்துவம்’ அரசோச்சுவதாகவே தோன்றுகிறது. ஆனால் இத்தகைய சமுதாய அமைப்பினை (வழக்கமாய் இது சோஷலிசம் என்று அழைக்கப்படுகிறது, மார்க்ஸ் இதனைக் கம்யூனிசத்தின் முதற் கட்டமெனக் குறிப்பிடுகிறார்) கருத்தில் கொண்டு லஸ்ஸால் இது ‘சமத்துவ விநியோகமாகும்’ என்றும், ‘உழைப்பின் உற்பத்திப் பொருளில் சம பங்கு பெற எல்லோருக்கும் சம உரிமை அளிப்பதாகும்’ என்றும் கூறும் போது, லஸ்ஸால் தவறிழைக்கிறார்; இந்தத் தவறை மார்க்ஸ் அம்பலம் செய்கிறார்.
‘சம உரிமை’ இங்கு இருக்கிறதுதான், ஆனால் இன்னமும் இது ‘முதலாளித்துவ உரிமையேதான்’, ஒவ்வொரு உரிமையையும் போல சமத்துவமின்மையைக் கொண்டதேதான் என்று மார்க்ஸ் கூறுகிறார். ஒவ்வொரு உரிமையும் உண்மையில் ஒரே மாதிரி இல்லாத, ஒருவருக்கொருவர் சமமாகவில்லாத வெவ்வேறானோருக்கும் சம அளவீட்டைப் பயன்படுத்துகிறது. ஆகவே ‘சம உரிமை’ என்பது உண்மையில் சமத்துவத்துக்குப் பங்கம் செய்கிறது, அநீதியாகிவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏனையவர் எவரையும் போல அதே அளவு சமூக உழைப்புப் புரிந்து, சமூக உற்பத்திப் பொருளில் (மேற்கூறியபடி கழித்தபின் எஞ்சுவதில்) சம பங்கு பெறுகிறார்.
ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை; ஒருவர் வலுவானவர், மற்றொருவர் பலவீனமானவர்; ஒருவர் கல்யாணமானவர், மற்றொருவர் ஆகாதவர்; ஒருவருக்கு அதிகக் குழந்தைகள், மற்றொருவருக்கு அவ்வளவு இல்லை… மார்க்ஸ் இதிலிருந்து எடுத்துரைக்கும் முடிவு வருமாறு:
“…சமமான உழைப்பை அளித்து, ஆகவே சமுதாய நுகர்வு நிதியிலிருந்து சமமான பங்கு பெறுவதன் மூலம், உண்மையில் ஒருவர் பிறிதொருவரைவிட அதிகம் பெறவும், ஒருவர் பிறிதொருவரைவிடச் செல்வந்தராய் இருக்கவும், இன்ன பலவாறாகவும் நேர்கிறது. இந்தக் குறைபாடுகளைத் தவிர்க்க, உரிமை சமமாய் இருப்பதற்குப் பதில் சமமின்றி இருத்தல் வேண்டும்…’’
ஆகவே கம்யூனிசத்தின் முதற்கட்டம் இன்னமும் நீதியும் சமத்துவமும் அளித்திட முடியாத நிலையிலேதான் இருக்கும்: செல்வத்தில் வேறுபாடுகள், நியாயமில்லா வேறுபாடுகள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மனிதனை மனிதன் சுரண்டுதல் முடியாததாகி விடும், ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களை _ ஆலைகளையும், இயந்திரங்களையும், நிலத்தையும், பிறவற்றையும் _ கைப்பற்றி அவற்றைத் தனியுடைமையாக்கிக் கொள்வது முடியாததாகிவிடும். பொதுவில் ‘சமத்துவம்’ குறித்தும் ‘நீதி’ குறித்தும் லஸ்ஸால் கூறும் தெளிவற்ற குட்டி முதலாளித்துவத் தொடர்களைத் தகர்த்திட்டு, மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதையைத் தெளிவுபடுத்துகிறார். கம்யூனிச சமுதாயம் தனி நபர்களால் உற்பத்திச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விட்டதிலுள்ள ‘அநீதியை’ மட்டும்தான் முதலில் ஒழிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதையும், மற்றோர் அநீதியை, அதாவது நுகர்வுப் பண்டங்களை (தேவைகளுக்கு ஏற்ப அல்லாமல்) ‘ஆற்றிய உழைப்பின் அளவுக்கு ஏற்ப’ விநியோகிப்பதிலுள்ள அநீதியை அதனால் உடனடியாக அகற்ற முடியவில்லை என்பதையும் மார்க்ஸ் காட்டுகிறார்.
முதலாளித்துவப் பேராசிரியர்களும் ‘நமது’ துகானும் அடங்கலான கொச்சைவாதப் பொருளியலாளர்கள் ஓயாமல் சோஷலிஸ்டுகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்; சோஷலிஸ்டுகள் மக்களிடையிலான சமத்துவமின்மையை மறந்துவிடுவதாகவும் இந்தச் சமத்துவமின்மையை அகற்றிவிடலாமெனக் ‘கனவு காண்பதாகவும்’ கூறுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுடைய அளவு கடந்த அறியாமையைத்தான் காட்டுகிறது என்பது விளங்குகிறது.
சிறிதும் தவறாது உன்னிப்புடன் மார்க்ஸ் மனிதர்களிடையிலான தவிர்க்க முடியாத சமத்துவமின்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுடன் நிற்காது, உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் அனைத்துக்குமுரிய பொதுவுடைமையாய் மாற்றுவதால் மட்டும் (சகஜமாய் இது ‘சோஷலிசம்’ என்றழைக்கப்படுகிறது) விநியோகத்திலுள்ள குறைபாடுகளும் “முதலாளித்துவ உரிமையின்’’ சமத்துவமின்மையும் அகற்றப்பட்டு விடுவதில்லை என்பதையும், ‘ஆற்றப்படும் உழைப்புக்கு ஏற்ப’ உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும் வரை இவை தொடர்ந்து நிலவும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். மேலும் தொடர்ந்து மார்க்ஸ் கூறுவதாவது:
“…இந்தக் குறைபாடுகள் கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் தவிர்க்க முடியாதவை, ஏனெனில் இச்சமுதாயம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து வெளிவந்திருக்கிறது. உரிமையானது ஒருபோதும் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையும் இதனால் நெறிப்படுத்தப்பட்ட அதன் கலாசார வளர்ச்சி நிலையையும் காட்டிலும் உயர்வானதாகி விட முடியாது…’’
ஆக, கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் (சாதாரணமாய் இது சோஷலிசம் என்றழைக்கப்படுகிறது) ‘முதலாளித்துவ உரிமை’ அதன் முழு அளவிலும் ஒழிக்கப்பட்டுவிடுவது இல்லை; பகுதி அளவுக்கே, இதுகாறும் சித்தி பெற்றுள்ள பொருளாதாரப் புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே, அதாவது உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்த மட்டிலுமே ஒழிக்கப்படுகிறது. ‘முதலாளித்துவ உரிமை’ இவற்றைத் தனிநபர்களுடைய தனியுடைமையாய் அங்கீகரிக்கிறது. சோஷலிசம் இவற்றைப் பொதுவுடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு _ அந்த அளவுக்கு மட்டுமே _ ‘முதலாளித்துவ உரிமை’ மறைகிறது.
ஆனால் அதன் மற்றொரு பகுதியைப் பொறுத்தவரை அது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது; சமுதாய உறுப்பினர்களிடையே உற்பத்திப் பொருட்களின் விநியோகத்திலும் உழைப்பைப் பிரித்தளிப்பதிலும் ஒழுங்கியக்கியாய் (நிர்ணயிக்கும் காரணியாய்) தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ‘வேலை செய்யாதவன் உண்ணவும் வேண்டாம்’ என்னும் சோஷலிசக் கோட்பாடு ஏற்கனவே சித்திபெற்றுவிட்டது; ‘சம அளவிலான உற்பத்திப் பொருட்கள்’ என்னும் மற்றொரு சோஷலிசக் கோட்பாடும் ஏற்கனவே சித்திபெற்று விட்டது. ஆயினும் இது இன்னமும் கம்யூனிசமாகிவிடவில்லை; சமமல்லாதவர்களுக்கு, சமமில்லா (மெய்யாகவே சமமில்லா) உழைப்பு அளவுக்கு ஊதியமாய்ச் சம அளவிலான உற்பத்திப் பொருட்களை அளிக்கும் ‘முதலாளித்துவ உரிமை’ இன்னும் ஒழிக்கப்பட்டாகவில்லை.
இது ஒரு ‘குறைபாடே’, ஆனால் கம்யூனிசத்தின் முதற் கட்டத்தில் இது தவிர்க்க முடியாதது என்று மார்க்ஸ கூறுகிறார். ஏனெனில் கற்பனாவாதத்தில் ஈடுபடாதிருக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தை வீழ்த்தியதும் மக்கள் உரிமை தராதரம் எதுவும் பாராது சமுதாயத்துக்காக வேலை செய்ய உடனடியாய்க் கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. தவிரவும் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதும் இத்தகைய ஒரு மாறுதல் ஏற்படுவதற்கு வேண்டிய பொருளாதார முன் நிபந்தனைகள் உடனடியாய்ப் படைக்கப்பட்டு விடுவதில்லை.
‘முதலாளித்துவ உரிமையின்’ தராதரத்தைத் தவிர இப்பொழுது வேறு தராதரம் இருக்கவில்லை. ஆகவே இந்த அளவுக்கு அரசுக்குரிய தேவை இன்னும் இருந்து வருகிறது; உற்பத்திச் சாதனங்களின் பொதுவுடைமையைப் பாதுகாப்பதுடன், உழைப்பிலும் உற்பத்திப் பொருட்களின் விநியோகத்திலும் சமத்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய அரசு தேவைப்படுகிறது.
முதலாளிகளும் வர்க்கங்களும் இனி இல்லையாதலால் அந்த அளவுக்கு அரசு உலர்ந்து உதிர்கிறது. ஆகவே எந்த வர்க்கமும் இனி அடக்கப்பட முடியாது.
ஆனால் அரசு இன்னும் அறவே உலர்ந்து உதிர்ந்து விடவில்லை, ஏனெனில் உண்மையில் சமத்துவமின்மையைப் புனிதமாக்கிடும் ‘முதலாளித்துவ உரிமையைப்’ பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அரசு அறவே உலர்ந்து உதிர முழு நிறைவான கம்யூனிசம் அவசியமாகும்.