மார்க்ஸ் 1852 மார்ச் 5 தேதியிட்டு வெய்டமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகளை 1907_ல் மேரிங் ழிமீuமீ ஞீமீவீt14 சஞ்சிகையில் (மலர் 25, இதழ் 2, பக்கம் 164) வெளியிட்டார். இந்தக் கடிதத்தில் பிறவற்றுடன் கூட சிறப்புக்குரிய பின்வரும் வாசகமும் அடங்கியுள்ளது:
“என்னைப் பொறுத்தவரை, தற்போதைய சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ, அவற்றினிடையே போராட்டம் நடைபெறுவதையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சாராது. எனக்கு நெடுங்காலம் முன்னதாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளியலாளர்கள் வர்க்கங்களுடைய பொருளாதார அமைப்பியலையும் விவரித்திருந்தனர். நான் செய்ததில் புதியது என்னவெனில் பின்வருவனவற்றை நிரூபித்தது தான்:
(1) வர்க்கங்கள் இருப்பது, பொருளுற்பத்தியினது வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் (historische Entwicklungsphasen der Produktion) மட்டுமே இணைந்ததாகும், (2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாய்ப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது, (3) இந்தச் சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும் ஒழிக்கப்படுவதற்கும், வர்க்கமில்லாத சமுதாயத்திற்குமான இடைக்கால கட்டமே ஆகும்…’’
முதலாவதாக, தமது போதனைக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய ஆழ்ந்த சிந்தனையாளர்களுடைய போதனைகளுக்குமுள்ள பிரதான, அடிப்படை வேறுபாட்டையும், இரண்டாவதாக, அரசு பற்றிய தமது போதனையின் சாரப் பொருளையும் மார்க்ஸ் இச்சொற்களிலே தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்து விடுகிறார்.
வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டத் தத்துவம் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாகக் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய தத்துவமே. வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகளாகி விடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத் தத்துவத்துக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும் சாதாரண குட்டி (மற்றும் பெரும்) முதலாளித்துவவாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைகல்லாய் அமைவது இதுவே, இந்தப் பிரச்சனையை ஐரோப்பிய வரலாறு ஒரு நடைமுறைப் பிரச்சனையாகத் தொழிலாளி வர்க்கத்தின் முன் நேருக்கு நேர் கொண்டு வந்தபோது, எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மட்டுமின்றி, எல்லா ‘காவுத்ஸ்கிவாதிகளும் கூட’ (சீர்திருத்தவாதத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே ஊசலாடுவோர் இவர்கள்) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிராகரிக்கும் கேடுகெட்ட அற்பவாதிகளாகவும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாகவும் தம்மை நிரூபித்துக் கொண்டதில் வியப்பில்லை. 1918 ஆகஸ்டில், அதாவது இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியாகி நெடுங்காலத்துக்குப் பிற்பாடு வெளிவந்த காவுத்ஸ்கியின் பிரசுரமான பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், மார்க்சியத்தைக் குட்டி முதலாளித்துவ வழியில் திரித்துப் புரட்டுவதற்கும், வஞ்சகமாய் அதைச் சொல்லளவில் அங்கீகரித்துவிட்டுச் செயலில் கைவிட்டு ஓடும் கயமைக்கும் அப்பட்டமானதோர் எடுத்துக் காட்டு (பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும், பெத்ரொகிராத், மாஸ்கோ, 1918, என்ற எனது பிரசுரத்தைப் பார்க்கவும்).
இன்றைய சந்தர்ப்பவாதம் _ அதன் பிரதான பிரதிநிதியான, முன்னாள் மார்க்சியவாதி காவுத்ஸ்கியின் வடிவில் _ மேலே தரப்பட்ட மேற்கோளில் முதலாளித்துவ நிலை குறித்து மார்க்ஸ் அளித்திடும் வரையறுப்புக்கு முழுக்க முழுக்கப் பொருந்துவதாகும். ஏனெனில் இந்தச் சந்தர்ப்பவாதம் வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை முதலாளித்துவ உறவுகளின் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொள்கிறது. (இந்த எல்லைகளுக்குள், இந்தக் கட்டுக்கோப்புக்குள், வர்க்கப் போராட்டத்தைக் ‘கோட்பாட்டளவில்’ அங்கீகரிக்க, கல்வியறிவுடைய எந்த மிதவாதியும் மறுக்க மாட்டார்!) சந்தர்ப்பவாதமானது வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை, தலையாய விவகாரத்துக்கு, அதாவது முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கும் மாறிச் செல்வதற்குரிய காலகட்டத்துக்கு, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி அதை அறவே அழித்திடும் கால கட்டத்துக்கு, விரித்துச் செல்வதில்லை. உண்மையில் இந்தக் காலகட்டம் தவிர்க்க முடியாதபடி வர்க்கப் போராட்டம் என்றுமில்லாத மூர்க்கத்துடன், என்றுமில்லாத உக்கிர வடிவங்களில் நடைபெறும் கால கட்டமாகும். ஆகவே இந்தக் கால கட்டத்தில் தவிர்க்க முடியாதபடி அரசு ஒரு புதிய வழியில் ஜனநாயகமான (பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவில் சொத்தில்லாதோருக்கும்) ஒரு புதிய வழியில் சர்வாதிகாரமாய் அமைவதான (முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்) அரசாகவே இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, தனியொரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தேவைப்படுவது பொதுவில் ஒவ்வொரு வர்க்கச் சமுதாயத்துக்கும் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திவிட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்தை ‘வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து’, கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் கட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்வோர் மட்டுமே அரசு பற்றிய மார்க்சின் போதனையினது சாரப் பொருளைக் கற்றுத் தேர்ந்தோர் ஆவர். முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பல தரப்பட்டவை, ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றேதான்: வடிவம் எப்படியிருப்பினும் இந்த அரசுகள் எல்லாம், முடிவாய்ப் பார்க்குமிடத்து, தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே ஆகும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய இடைக்காலம் பல தரப்பட்ட அரசியல் வடிவங்களையும் மிகவும் ஏராளமாய்த் தோன்றவே செய்யும், ஆனால் சாராம்சம் தவிர்க்க முடியாதபடி ஒன்றாகவே இருக்கும்; பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.