படம் முடிந்து திரும்ப அகம் வருகையில் ‘மன்னி, நீங்க இதுபோல கொட்டாய்-ல சினிமா பார்த்ததில்லையா?’ இந்தக் கேள்வி வரும் என்று நினைத்தேன். அதேபோல வந்தது.
‘ஊம், பார்த்திருக்கிறேனே! சீரங்கத்தில தேவி டாக்கீஸ், ரங்கராஜா டாக்கீஸ் அப்படின்னு இரண்டு இருக்கு. பேருதான் டாக்கீஸ். உள்ள போனா இப்படித்தான் இருக்கும்.’
வாண்டுகளுக்கு ஒரே சந்தோஷம். ‘அப்ப நீங்க மெட்ராஸ் இல்லையா? சீரங்கமா?
‘மக்கு, மக்கு, மன்னி மெட்ராஸ் தான். சீரங்கத்துக்கு வரும்போது கொட்டாய்-ல சினிமா பார்த்திருக்கா! இல்ல மன்னி?’
கேள்வி-பதில் எல்லாம் அவர்களுக்குள்ளேயே!
‘என்ன சினிமா மன்னி?’
‘பார்த்தால் பசி தீரும், அப்புறம்…….ஆங்….! வீரபாண்டிய கட்டபொம்மன். எங்க பாட்டியோட வருவோம். பாட்டி சேர் டிக்கட் எல்லாம் வாங்கமாட்டா. தரை தான். எங்களுக்கு சாப்பிட முறுக்கு, பர்பி எல்லாம் கொண்டுவருவா….!’
‘வீரபாண்டிய கட்டபொம்மனா? எந்த வருஷம்?’
‘வருஷம் நினைவில்ல. ஆனா நா ரொம்ப சின்னவ….. ஜக்கம்மா, ஜக்கம்மா என்று சிவாஜி சத்தம்போடும் போதெல்லாம் பாட்டி மடில படுத்துண்டுடுவேன்……பெரிசா ஜக்கம்மா முகம் வரும். நாக்க தொங்க போட்டுண்டு…..! ஜக்கம்மா போயிட்டா அப்படின்னு பாட்டி சொன்னவுடனேதான் படத்தை பார்ப்பேன்…..!’
நண்டுசிண்டுகள் ‘கிளுகிளு’ வென்று சிரித்தன.
‘அப்போ ஒரு வேடிக்கை நடந்தது சொல்லட்டுமா?’ என்றேன்.
‘சொல்லுங்கோ, சொல்லுங்கோ…!’
‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்துட்டு வந்து கொஞ்சநாள்ல இன்னொரு சினிமா போனோம். அதுலயும் சிவாஜிதான் ஹீரோ. எங்களோட கூட ரெண்டுபடத்துக்கும், எங்க உறவுக்காரப் பையன் வந்திருந்தான். இந்த இன்னொரு படத்துல சிவாஜி வந்தவுடனே ‘வீரபாண்டியன் படத்துல இந்த மாமாவ தூக்குல போட்டாளே…இப்போ எப்படி இந்த படத்துல வந்தா?’ அப்படின்னு கேட்டான் பாரு. தியேட்டர்லேயே! எங்களுக்கெல்லாம் சிரிப்பு தாங்கல…..’பக்’குனு சிரிச்சுட்டோம்.’
‘அப்புறம்?’
‘அவனுக்கு ஒரே கோவம். ‘நான் நன்னா பாத்தேன். இந்த மாமா கழுத்துல கயத்த மாட்டி மரத்து மேல இழுத்துட்டா. இந்த மாமா அப்படியே தொங்கினா’ என்று சொல்லிண்டே ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சுட்டான். எங்க பாட்டி அவன ரொம்ப பாடுபட்டு சமாதானப்படுத்தினா. பாவம் பாட்டி, அவன சமாதனப்படுத்தறதுல சினிமா பாக்கவே முயடியல’.
குழந்தைகளோட குழந்தையா நானும் பேசிண்டே வர அகம் வந்துடுத்து. ஆஹா! அடுத்த என்கௌண்டர் அடுக்கு தோசையுடன் தான் என்று நினைத்துக் கொண்டே மித்தத்துல (முற்றம்) போயி கால அலம்பிண்டு வந்தேன். நான்கு வீடுகளுக்கும் பொதுவாக அந்த மித்தம். (சீவா சித்தியின் பாஷையில் முற்றம் மித்தம் ஆகியிருந்தது.
எல்லோருக்கும் வாழலை சருகு போட்டு அடுக்கு தோசை போட ஆரம்பித்தார் சீவா சித்தி. ‘சித்தி ஒண்ணு போரும்’ என்றேன்.
‘ஒண்ணு எப்படிடி போரும். ரெண்டு போட்டுக்கோ’ என்றார் சித்தி. ‘கிட்டத்தட்ட 2 மைல் நடந்து வந்துருக்க…. நன்னா சாப்பிடு. அப்புறம் ராத்திரி பசிக்கும்’ என்று அருமை அருமையாக உபசாரம் செய்தார் சித்தி. கார்த்தால பண்ணின கொழம்பு, அப்புறம் மிளகாய்பொடி எண்ணெய். தம்ளர்ல மோரு. நல்ல பசி. மத்தியானம் சாப்பிட்டது.
சும்மா சொல்லக்கூடாது. தோசை பார்க்க தடிதடியாக இருந்தாலும் மெத்மெத்தென்று வாயில் கரைந்தது. என் பெண்ணிற்கும் அரைதோசை ஊட்டினேன்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் சித்தி பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தார். ‘நான் தேய்ச்சு தரேன் சித்தி’ என்றேன். ‘நீ என்னிக்கோ வர. அதுவும் மெட்ராஸ் மாட்டுபொண்ணு. உன்ன வேல வாங்குவாளா?’ என்றார் சிரித்துக்கொண்டே. ‘பரவாயில்ல சித்தி. நான் நன்னா தேய்ப்பேன்’ என்றேன்.
‘உன்னோட சமத்தெல்லாம் தெரியும்டி எனக்கு. அப்படி உக்காந்துண்டு பேசிண்டிரு. நான் ‘கிடுகிடு’ன்னு முடிச்சுட்டு வந்துடறேன்’ என்றார் சித்தி. எங்கள் அரட்டைக் கச்சேரி நடந்துண்டு இருக்கும்போது என் பெண் வந்தாள். ‘அம்மா தொப்ப வலிக்கறது’
‘சித்தி லெட்ரீன் எங்கருக்கு. இவளுக்கு தொப்ப வலின்னா டூ பாத்ரூம் போகணும்னு அர்த்தம்’ என்றேன்.
சித்தி தன் பெண்ணைக் கூப்பிட்டார். ‘அந்த காடா விளக்கை எடுத்துண்டு மன்னி கூட போ. குழந்தை ‘வெளிக்கி’ போகணுமாம்’ என்றார்.
காடா விளக்கா? ‘லெட்ரீன்ல விளக்கு இல்லையா?’ என்றேன்.
‘இங்க எதுடி லெட்ரீன்?’ என்ன சொல்ல வருகிறார். சட்டென்று புரியவும், எனக்கு உள்ளுக்குள் பதைபதைத்தது. எப்படி இந்த ராக்ஷசிய சமாளிப்பேன்? ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குமே!
(தொடரும்)