எங்கள் கதைசொல்லி பாட்டி ஸ்ரீரங்கம்மாள்
நேற்று ஒரு சந்தோஷமான பதிவு எழுதினேன். எப்போதும் எழுதும் செல்வ களஞ்சியமே – குழந்தைகள் வளர்ப்புத் தொடருக்கு எழுதும் பதிவுதான். ஆனால் நேற்று ஒரு சிறப்பு என்னவென்றால் நான் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு மிகப்பழைய கதையை எழுதினேன். இந்தக் கதையை எனக்குச் சொன்னது எங்கள் பாட்டி. எங்கள் அம்மாவும் சிலசமயம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் பாட்டி சொல்லும்போது ஒருவித ராகத்துடன் சொல்லுவார். கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.
பெயர் மறந்து போன ஈ!
‘ஒரே ஒரு ஊரில ஒரு ஈ இருந்துதாம். ஒருநாள் அதுக்கு திடீர்னு அதோட பேரு மறந்து போயிடுத்தாம். என்ன பண்றதுன்னே தெரியலை. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துதாம். அங்கே ஒரு கன்னுக்குட்டி நின்னுண்டு இருந்துதாம். உடனே இந்த ஈ அதுகிட்ட போயி
‘கொழு கொழு கன்னே! எம்பெரென்ன?’ அப்படின்னு கேட்டுதாம்’
அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் அம்மாவ கேளு’ ன்னு.
அந்த ஈ உடனே அதோட அம்மாகிட்ட போயி,
‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே எம்பெரென்ன?’ அப்படின்னு கேட்டுதாம்.
அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் மேய்க்கற இடையன கேளு’ அப்படீன்னு.
அந்த ஈ உடனே அந்த இடையன் கிட்ட போயி,
‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா, எம்பெரென்ன?’ அப்படீன்னு கேட்டுதாம்.
அவன் சொன்னானாம்: எனக்கு தெரியாதுப்பா, என் கைல இருக்கற கோலக் கேளு’
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, எம்பெரென்ன?’ அப்படீன்னு கேட்டுதாம.
கோல் சொல்லித்தாம்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல இருக்குற கொடிமரத்த கேளு’
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே! எம்பெரென்ன?’
கொடிமரம்: எனக்குத் தெரியாதப்பா, என் மேல இருக்குற கொக்க கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே, கொடிமரத்துல இருக்குற கொக்கே! எம்பெரென்ன?
கொக்கு: எனக்குத் தெரியாதுப்பா, நான் நீராடும் குளத்த கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே! எம்பெரென்ன?’
குளம்: எனக்குத் தெரியாதுப்பா, குளத்துல இருக்குற மீனைக் கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! எம்பெரென்ன?’
மீன்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை பிடிக்கிற வலையன கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! எம்பெரென்ன?
வலையன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற சட்டிய கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, , கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! எம்பெரென்ன?
சட்டி: எனக்குத் தெரியாதுப்பா, என்ன பண்ற குயவன கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! எம்பெரென்ன?
குயவன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற மண்ணை கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! எம்பெரென்ன?
மண்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல வளர புல்லைக் கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! எம்பெரென்ன?
புல்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை திங்கற குதிரைய கேளு!
ஈ: ‘கொழு கொழு கன்னே,
கன்னுந்தாயே,
தாய மேய்க்கற இடையா,
இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!
கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! புல்லத் திங்குற குதிரையே! எம்பெரென்ன?
குதிரை ஈ யைப் பார்த்து ‘ஹிஈ…ஈ..ஈ… ஹி..ஈ…ஈ.. ன்னு சிரிச்சுதாம்! உடனே ஈக்கு தன் பேரு நினைவுக்கு வந்துடுத்தாம்.
எத்தனை எளிமையான ஒரு கதை!
குழந்தைகளுக்குச் சொல்லவென்று அதிகம் சிந்திக்க வேண்டாம். சாதாரண ஒரு நிகழ்வைக் கூடக் கதையாக்கலாம் என்று தோன்றுகிறது, இல்லையா?
குழந்தைகளுக்கு கதை சொல்வது என்ற நீண்ட நாளைய பாரம்பரிய வழக்கத்தைக் கைவிடாதீர்கள் என்று இன்றைய தலைமுறையினரைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
பி.கு. இந்தப் பதிவு நான்குபெண்கள் தளத்தில் இன்று வெளியானது. இந்தக்கதையில் ஒரு வரியை நான் மறந்துவிட்டேன். அதை நினைவு படுத்திய எனது தோழி ராதாபாலுவுக்கு என் மனமார்ந்த நன்றி!