உளுந்து உடைக்கும் இயந்திரம், சிவராமபுரம்
புழக்கடையில் கிணறு
போனவாரம் என் நாத்தனார் வந்திருந்தார். என் அகத்துக்காரர் பேச்சுவாக்கில், ’இவ சீவா பத்திதான் எழுதிண்டிருக்கா’ என்றார். ‘பாவம் சீவா, ‘என்னை அப்பா நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு குடுக்கல’ என்று ரொம்பவும் குறைபட்டுப்பா’ என்று என் நாத்தனார் சித்தியைப் பத்தி நினைவு படுத்திண்டு சொன்னார்.
வாழைப்பூ மாம்பூ
பலா மூசு எலுமிச்சை
‘அஞ்சு பொண்ணு பொறந்தா அரசனும் ஆண்டி’ அப்படிங்கற போது பள்ளிக்கூட வாத்தியார் திருக்கண்ணபுரம் சௌரிராஜ ஐய்யங்கார் (என் அகத்துக்காரரின் அம்மாவப் பெத்த தாத்தா) 6 பெண்களைப் பெற்றவர் – 6 வது பெண் சீவரமங்கை. 6 பெண்களுக்கு அப்புறம் ஒரு பிள்ளை. 7 வது தடவை வெற்றி! அது வளந்து தன் பொண்களைக் கரையேற்றும் என்று என் அகத்துக்காரரின் தாத்தா நினைத்திருப்பாரோ, என்னவோ. கொடுப்பினை இல்லை. அந்தப் பிள்ளையும் சின்ன வயசுல திருக்கண்ணபுரம் கொளத்துல கால்தவறி விழுந்து போயிடுத்து. அதனாலேயோ என்னவோ என் மாமியாருக்கு திருக்கண்ணபுரம்னாலே கசப்புதான்.
எல்லாக் கல்யாணங்களுக்கும் சித்தி, சித்தியா வருவார்கள். குழந்தைகளும் வருவார்கள். அவ்வப்போது பார்த்துக்கொள்ளுவோம். ‘அரியலூர்ல வந்து அமர்க்களம் பண்ணின பொண்ணு’ என் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் சித்தி சொல்லிச் சொல்லி சிரிப்பார். சுந்தரம், மாலா இவர்களுக்குத் திருமணம் ஆயிற்று. மாலாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள். சுந்தரத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று தெரியவந்தது. சித்தியா அவ்வப்போது மெட்ராஸ் வருவார். போகப்போக அவர் வருவதும் குறைந்துவிட்டது. சர்க்கரை நோய் அவரைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
திடீர்னு ஒருநாள் மாலா போய்விட்டாள் என்று செய்தி எங்களை நிலைகுலையச் செய்தது. ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு என்னவாச்சு என்று எங்களுக்கு மனசு ரொம்பவும் நொந்து போயிடுத்து. சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் போய் சரியான சிகிச்சை எடுத்துக்காம ஒருநா இதயம் நின்னுடுத்து. கடசியில இந்த கதிக்கு அந்தக் கொழந்த ஆளாகணுமான்னு மனசு துடிச்சு போச்சு. சில வருடங்களில் சித்தியாவும் பரமபதித்தார். அவருக்கும் சர்க்கரை நோய் முற்றிப்போய் கடைசியில் கண் தெரியாமல் போய் ரொம்பவும் கஷ்டப்பட்டார். சித்தி கடைசி பிள்ளையுடன் இருந்தார். சித்தியா இருக்கும்போதே வத்சலாவிற்கு திருமணம் ஆயிற்று. அவளுக்கு இரண்டு பெண்கள். கண்ணம்மா தன் மனசுக்குப் பிடித்தவனை மணந்து கொண்டாள். குமாருக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை.
சுந்தரம் ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும்போது மேலிருந்த சூட்கேஸ் ஒன்று தலையில் விழுந்து மண்டையில் அடி. சில மாதங்கள் புத்தி சரியில்லாமல் இருந்தான். பிறகு அவனும் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று செய்தி வந்தது. சித்தியும் பரமபதித்தார் சில வருடங்களில். ஆனாலும் அடுக்கடுக்கா இத்தன துன்பம் வந்திருக்க வேணாம் சித்திக்கு! மனசு எத்தன நொந்து போனாரோ? தெய்வம் சிலபேர கஷ்டப்படன்னே பிறவி எடுக்க வைக்கிறதோனு தோண்றது.
என் பிள்ளையின் திருமணத்திற்கு என் மாமியார் பக்கம் எல்லோரையும் கூப்பிடணம்னு எனக்கு. தேடித் தேடித் பிடித்து எல்லோருக்கும் டெலிபோன் செஞ்சு கூப்பிட்டேன். அதிர்ஷ்ட வசமா வத்சலா கிடைத்தாள். நிச்சயம் கல்யாணத்துக்கு வரேன் மன்னி. எனக்கும் ஒங்கள பாக்கணும்’ என்றாள். நடுவில் ஹார்ட் ப்ராப்ளம் இருந்து அறுவை சிகிச்சை ஆச்சு என்றாள். ‘கட்டாயமா வாம்மா’ என்றேன். ஆனால் வரவில்லை. சில மாதங்களில் அவளும் போய்விட்டாள் என்ற செய்திதான் வந்தது.
இந்தக் குடும்பத்தை நினைக்கறச்சசேல்லாம் எனக்கு இவா அத்தன பேரோட நினைவும் வரும். எத்தனை நல்ல குழந்தைகள். ஆயுள் இல்லாமல் போய்விட்டதேன்னு இருக்கும். சித்தியின் உபசாரம் இன்றைக்கும் என் நினைவில். இவர்கள் யாரையுமே நான் அவர்களது கடைசிக் காலத்துல பார்க்கல. அதனால என் நெனவுல இருக்கறது அரியலூர் நினைவுகள்தான். ‘மன்னி, மன்னி’ ன்னு என் காலச் சுத்தி சுத்தி வந்த, சிரிப்பும் கும்மாளமுமா இருந்த குழந்தைகள் தான் இன்னிக்கும் என் நினைவுல இருக்கிறார்கள். இந்த நினைவே சாஸ்வதமா இருக்கக்கூடாதா என்று இன்னிக்கும் மனசு ஏங்கறது. எல்லாத்தை அழிச்சுட்டு திரும்ப அரியலூர் நினைவுகள் நிஜமா ஆனா எத்தன நன்னாயிருக்கும்!
புகைப்படங்கள் சிவராமபுரத்தில் எடுத்தவை.