"

pic 19

ஹெலன் கெல்லர் உடல் ஊனமுற்றோருக்காக பேசி வந்ததால் பல நாடுகள் அவரை பேச அழைத்தன. 1930ஆம் ஆண்டிலிருந்து பல நாடுகளுக்குச் சென்று பேசினார். அவர் பேசிய இடங்களில் எல்லாம் பார்வையற்றோருக்காக நிதி சேர்த்தார். ஹெலன் தன்னுடைய டீச்சர் ஆனி சல்லிவனுடன் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினார். மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார்.

ஹெலன் கெல்லர் 5 கண்டங்களில் 39 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் ஊனமுற்றவர்களுக்காக சேவை செய்தார். இவர் 1965ஆம் ஆண்டில் ஆசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அது ஒரு மிக நீண்ட சுற்றுப்பயணம். அப்போது அவருக்கு வயது 75. இந்த வயதில் அவர் 40,000 மைல்கள் தூரம் பயணம் செய்தார். 5 மாத இடைவெளியில் இந்தக் கடினமான மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டார். இது தேர்தல் பயணம் அல்ல. பார்வையற்றோருக்காக உதவிட மேற்கொண்ட பயணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இவர் பயணத்தின் போது, உலகில் பல பிரபலமான தலைவர்களைச் சந்தித்தார். பல தலைவர்கள், மிகச்சிறந்த மேதைகளை நேருக்கு நேர் சந்தித்து பேசி மகிழ்ந்தார். பயணம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் காது கேளாத, பார்வையற்றவர்களுக்குப் பள்ளிகள் தொடங்க உலக நாடுகளை வற்புறுத்தினார். பல நாடுகள் இதனை வரவேற்றன. ஹெலன் கெல்லரின் பயணத்தின் மூலம் பல நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பயணங்களில் அற்புதமான, உற்சாக மூட்டும் உரைகளை நிகழ்த்தினார்.

ஹெலன் கெல்லர் 1931 ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றார். அங்கு இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி மேரி ஆகியோரைச் சந்தித்தார். அவர்கள் ஹெலனின் திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். தொடுதல் மூலம் எப்படி விசயங்களை புரிந்துகொள்கிறார் என்பதை நேரில் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் ஹெலன் கெல்லருக்கு நிதி உதவி செய்து பாராட்டினர்.

ஹெலன் கெல்லர் ஜப்பான் மூன்று முறை சென்றுள்ளார். அவர் இரண்டாவது உலகப் போர் முடிந்த பின்னர் ஜப்பான் சென்றார். அப்போது அவர் அமெரிக்காவால் அணு குண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோசிமா மற்றும் நாகசாகி நகருக்கும் சென்றார். அங்கு நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஹெலன் ஜப்பான் மக்கள் மீது அதிகம் பாசம் கொண்டிருந்தார். அவர்களின் உழைப்பைப் பாராட்டினார். தொட்டும், நுகர்ந்தும், சுவைத்தும் அவர்களின் அன்பை புரிந்து கொண்டார். ஜப்பான் அவருக்கு முழு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜப்பானின் உணவு, பட்டுத்துணி, டாட்டாமி விரிப்பு, வெந்நீர் குளியல் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்தது.

ஆனி டீச்சர் இறந்த பிறகு ஹெலன் கெல்லர் பாலி தாம்சனுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். அவர் சீனா, ஜப்பான், இந்தியா உள்பட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆசியாவில் பயணம் மேற்கொண்ட போது 1955ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் ரவீந்திரநாத் தாகூர், நேரு ஆகியோரைச் சந்தித்தார்.

ஹெலன் கெல்லர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்தார். அங்கு ஹெலனுக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஜவகர்லால் நேரும் கலந்து கொண்டார்.

ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். அவர் சற்று முன் கோபம் கொண்டவர். சட்டென்று கோபப்படுவார். ஆனால் உடனே கோபம் மறைந்துவிடும். தேசாபிமானத்தில் தலை சிறந்தவர். நேருவின் முகத்தை ஹெலன் கெல்லர் தொட்டுத் தடவி அவரை அறிந்து கொண்டார். நேருவைப் பற்றி அவர் முன்பே தெரிந்திருந்தாலும், அவரின் முகத்தை அவர் பார்த்ததில்லை. அவரின் முகத்தைத் தொட்டுப் பார்த்த பிறகு இவர்தான் நேரு; இவர் இப்படித் தான் இருப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். ஹெலனின் கை விரல்கள் அவருக்குக் கண்ணாக செயல்பட்டன.

மேடாக அமைந்துள்ள உமது நெற்றியையும், அது வெளிப்படுத்தும் உமது மேதைத் தனத்தையும் வருணிக்க ஒரு கவிஞனின் கற்பனை ஊற்று வேண்டும். வாழ்வியல் நாகரீகத்துக்கு அடித்தளமாகிய மானிடத்தின் உன்னத இலக்குகளை முன்கொணரும் புருஷோத்தமன் ஒருவரைப் பற்றி என் மனதில் ஒரு கனவு உண்டு. அதை உங்களிடம் நான் உணருகிறேன் என ஹெலன் கெல்லர் நேருவிடம் கூறினார். தான் சந்தித்த தலைவர்களில் நேருவே தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார்.

இந்தியாவில் ஹெலன் கெல்லர் மும்பைக்குச் சென்றார். அங்கு பார்வையற்றோர்க்காக உருவாக்கப்பட இருந்த ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்கச் சென்றார். தாஜ்மஹாலின் பளிங்குக் கற்களை தொட்டுத் தடவிப் பார்த்தார். மும்தாஜின் கல்லறையைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார். உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பார்வையற்ற ஒருவராலும் தாஜ்மஹாலின் அழகை ரசித்து வருணிக்க முடியும் என்பதை ஹெலன் கெல்லர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

pic yy

ஹெலன் கெல்லர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னைக்கும் வந்தார். அவருக்கு கவர்னர் மாளிகையில் விருந்து உபச்சாரம் செய்யப்பட்டது. ஹெலன் கெல்லர் தமிழ்நாட்டில் சிறந்த பின்னணி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியையும் சந்தித்தார். அவர் குரலை தனது விரல்களால் தொட்டு அவரின் இசையைக் கண்டார். ஊட்டிக்குச் சென்று பூங்காவில் பூத்திருந்த மலர்களை தொட்டு முகர்ந்து பரவசம் அடைந்தார். அவர் இந்தியாவிற்கு வந்த போது அவர் சேலை உடுத்திக் கொண்டார். அவருடன் வந்த பாலி தாம்சனும் சேலை உடுத்திக் கொண்டார். இதெல்லாம் அவர் இறக்கும் வரை இந்தியாவை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.

License

Icon for the Public Domain license

This work (பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் by nat123 and ஏற்காடு இளங்கோ) is free of known copyright restrictions.

Share This Book