"

ஹெலன் கெல்லரின் வாழ்க்கையிலும் காதல் மலர்ந்தது. காதல் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும். காதலில் புரிதல் என்பது மிக மிக முக்கியமானது. ஆனி சல்லிவனின் உடல் நலம் 1916 இல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஆனியின் உடல் நலம் தேறவும், ஓய்விற்காகவும் போர்டோரிக்கோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஹெலனின் எழுத்துப் பணிக்கு உதவ பீட்டர் ஃபேகன் என்னும் இளம் எழுத்தாளரை தற்காலிக காரியதரிசியாக நியமிக்கப்பட்டார்.

பீட்டர் மிக விரைவாக ஹெலனுடன் கருத்துக்களைப் பரிமாறும் கலையைக் கற்றுக் கொண்டார். இருவரும் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். பீட்டர் சிறந்த மனிதராகவும் இருந்தார். அதுவரை ஆண்களிடம் நெருங்கியப் பழக்கம் இல்லாத ஹெலனுக்கு பீட்டரின் அன்பு புதிய உணர்வைத் தந்தது. இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. அது காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஹெலனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொண்டால், மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையைக் கூட நடத்த முடியாது என்கிற கருத்து சமூகத்தில் நிலவி வந்தது. இதே கருத்தைத்தான் ஆனி சல்லிவனும், ஹெலனின் பெற்றோர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள ஹெலன் முடிவு செய்த போதிலும் அவர்கள் திருமணம் நடக்கவில்லை. துரதிஷ்டவசமாக பீட்டர் ஃபேகன், ஹெலன் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்று விட்டார்.

என் தனிமையைப் போக்க வந்த சூரியன் அவன். இருள் நிறைந்த கடலில் மகிழ்வோடு இளைப்பாறக் கிடைத்த சிறு தீவு என் காதல் என அவரின் குறுகிய காலக்காதலைப் பற்றி ஹெலன் இவ்வாறு குறிப்பிட்டார். உலகில் உள்ள மிக அழகானப் பொருட்களைத் தொட்டுப் பார்க்க முடியாது என ஹெலன் குறிப்பிட்டார். ஆனால் மிகவும் அழகானப் பொருட்கள் என்பது மனிதர்களின் உணர்வுகள் தான் எனக் கூறியுள்ளார். எனது வாழ்க்கையினை அழகுப்படுத்தும் மிகச் சிறிய விசயங்களில் காதலும் ஒன்று. ஒருவர் மீது அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் உலகின் உன்னத விசயமாகும். எனினும் அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை உண்டு எனக் காதல் பற்றி ஹெலன் கெல்லர் குறிபிட்டுள்ளார்.

License

Icon for the Public Domain license

This work (பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் by nat123 and ஏற்காடு இளங்கோ) is free of known copyright restrictions.

Share This Book