தீவிரப்புரட்சிநாயகன்(தீ.பு.நா) வீட்டிற்கு வந்தபோது, தேசியத்தின் புத்தகங்களை படிக்க கொடுத்தேன். ஆனால் பாருங்கள். மிக நிதானமாக தன் பணிக்கிடையே படிக்கிறார் போல. அவரையும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புத்தகம் வந்து சேருமா என்று பயமானது தீ.பு.நா ன் பேச்சில்தான். தனக்குப் பிடித்த புத்தகங்கள் யாராவது நண்பர்கள் கொடுத்தால் அவர்களுக்கு திருப்பித்தரமாட்டேன். ஏன் தரவேண்டும்? எனக்கு பிடித்திருக்கிறதே! என்று கூற, எனக்கு திக்கென்றானது. வயிற்றில் கோவை எக்ஸ்பிரஸ் ஹார்ன் அடித்துக்கொண்டு செல்வதை உணர்ந்தேன். அப்போதுதான் மார்க்வஸ் எழுதிய நூற்றாண்டுத்தனிமை நூலை அவரின் கையில் கொடுத்திருந்தேன்.
புத்தகம் படிப்பது காலத்தை சார்ந்தது என்று கார்த்திக் வால்மீகி கூறியது நினைவுக்கு வந்தது. ஆகா, அவன் பேச்சுவாக்கில் சொன்ன பன்ச் எல்லாம் நடக்குது, ஹிட் ஆகுது என்று எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. ஒருதடவை தவறவிட்டுட்டா அவ்வளவுதாம்பா பொண்ணுஞ்செரி, புஸ்தகமும் செரி என்று புது திகில் காமிக்ஸ் போல பேசினார் அரசமார்.
களப்பணி, தீவிரப்புரட்சி எல்லாம் கடுமையான ஒற்றைத்தலைவலி ஆட்கள் என்று ஸமீரா சொன்னபோது, பேராயக்கட்சி போராளிக்கு புத்தகத்தை தந்துவிடமுடியுமா? என்று திகில் அந்தக்கண்களில் தெரிந்தது.