நான்கு சங்கீதாக்களில் ஒரு சங்கீதாவுக்கு திருமணம் என்று கைபேசி அழைப்பு கூறியது. நத்தகாடையூர் சரஸ்வதி மகால் வரச்சொன்னார். சங்கீதா ஒரு பொதுவான பெயர் என்றபடியால் அதில் ஈடுபாடு எனக்கு இல்லை. அதிலும் கல்லூரியில் நான்கைந்து சங்கீதாக்கள் இருந்தார்கள். நிறம், முகம், உடல் என பல அடையாளங்கள் இருந்தன அவர்களை குறிப்பிட்டு பேசுவதற்கு என்றே. முடிந்தவரை தான் யார் என்று நினைவுபடுத்த முயற்சித்தார் இந்தப்பெண். எனக்கு ஞாபகம் வருவது இரண்டாவது. நம்மையெல்லாம் அழைக்கிறார்கள் பாருங்கள் போதுமே! திருமணத்திற்கு இதற்கெனவே செல்லலாம் யார் இந்த சங்கீதா என்று தெரிந்துகொள்ளவே. சாகச திரில் உள்ளதல்லவா?
பாதி வழியில் நெளியும் மண்புழு நல்லதம்பியைப் பார்த்தேன். அவன் மலர்ச்சியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்போதும் கண்ணில் நீர் தளும்பி இப்போதே விழுந்து விடுகிறேன் பார் என்று எதிரேயுள்ளவரை கவனமாக பேச வற்புறுத்தும் முகம் அவனுடையது.
அப்போது எப்போதும் மௌனவிரதம் கடைபிடிக்கும் சோனிப்பையன் சிணுங்கினான். நியூவிஷன் பத்திரிகையிலிருந்து நேர்காணலுக்கு வரச்சொல்லி ஒருவர் அழைத்தார். எங்கேயிருக்கிறீர்கள் என்று இருமுறை கேட்க, நான் திருமணத்திற்கு செல்வதை கேனத்தனமாக உளறிவைத்தேன். திருமணத்திற்குச் சென்று பார்த்தால் உள்ளூர் கடவுளின் எந்துபல் காதலி. முதல்வேலை என்ன பந்தி பாய்வதுதானே! நான் என் தாயுடன், கூடவே ஒரு அகிலநாயகனுடன் பாய்ந்தேன். ஓகே. ஒருதடவை சாப்பிடலாம். என்னை கிண்டல் செய்வதையே குறிக்கோளாக கொண்ட ராட்டைசுற்றிபாளையத்தானை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிக்கீருச்சேய் என்று குதித்தோடி வந்தான். அப்பறம், செம கைவேலயாட்ட? எளச்சிக்கிட்டே போறயே? என்றான். ரா.சு கூடவே இரண்டு இலை சோறு தின்ற அகிலநாதன், ‘’ ஆறுபடி கொண்டாறக்கு முயற்சி பண்றாப்புல’’ என்றான்.
‘’ஆமா, என்னோட போன் நம்பரு இந்தப் பாப்பாவுக்கு எப்படிடா தெரியும்?’’ என்றேன்.
‘’ நாந்தே குடுத்தேன். உன்னோட நம்பரு வேற யாருகிட்ட இருக்குது?’’ என சிரித்தான் ரா.சு. பின் ஆமா, பாப்பாவா, யாரு இந்த லேடியா? இவ செம கேடியாச்சே! இன்னும் ஆறுமாசத்துல இன்னொரு பாப்பா வந்துரும் பாரு. மாப்பள அந்தளவு வீரியவித்து ‘’ என்று சித்தமரு. சிவராஜ் பெரியப்பா போலவே பேசினான்.
ரா.சு வைவிட்டு பிரியவே மனசில்லை. நிறைய பேசவேண்டும். வெளிப்படையாக பேசுவான். நாசுக்கு பார்த்தால் அறுத்து பேச்சில் தொங்கவிட்டுவிடுவான். சென்னை கிளம்பவேண்டும்.
தாய் தந்த பணத்தை வாங்கிக்கொண்டு தாமரைப்பாளையம் கிளம்பினேன். ரயிலில் கூட்டம் நிரம்பி வழிய ரிசர்வ் பெட்டியில் ஏறவேண்டியதானது. எனக்கென்று உருவாகும் வில்லன்களை ஸ்பைடர்மேன் கூட சந்தித்திருக்கமுடியாது. சிலர் எனது மூடாத வாயினாலும், பார்வையாலும் டாமாகி என்னை ஜெர்ரியாக்கி அடித்து துவைக்கிறார்கள். அன்று ரிசர்வ் பெட்டி டீடீஆர் அசல் பெப்சி விஜயன்போல அப்போதுதான் முகத்தில் நாய் கடித்து ஆபரேசன் பண்ணினவர் போல இருந்தார். இதற்கான காரணத்தை ஆழமாக பரிசீலிக்கும்போது, மலச்சிக்கலாக இருக்கலாம் என்று சித்தமரு. அடிசில் நம்பிராஜன் கூறுகிறார்.
படிக்கட்டு அருகில் எப்போதும் கழிவறை அமர்ந்துதான் பயணிப்பது எப்போதும் அதுதான் நமது இடம். அன்று அந்த டீடீஆர் வந்தவுடன், ‘’ ஏ ஏ இங்கே எதுக்கு நிக்கற’’ என்று கேட்டவரின் கண்கள் பேய் பிடித்தவர் போல முறுக்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. முகம் மட்டும் உடலில் தனியாக பெரிதாக இருந்தது. உடல் பருமன் ஜிம் பாய்ஸ் போல எங்கெங்கோ புடைத்து வீங்கியிருந்தது.
‘’எதுவரைக்கும்?’’
‘’சென்னை வரைக்கும்’’
‘’டிக்கட்ட எடு’’
சலவாய் ஒழுகி கறிக்காக காத்திருக்கும் நாயின் முகம் நினைவில் வருவதை என்னால் தவிர்க்கமுடியாதுபோனது அப்போதுதான். எதையும் பார்க்கவில்லை. ‘’நேராக டிக்கெட்டில் 98 ரூபாய் என்று எழுதி, தமிழ் தெரியுமா என்ன எழுதியிருக்கறன் பாத்தியா’’ என்று நாய் எச்சில் ஒழுக பேசியது.
நூறு ரூபாயைக்கொடுக்க வேகமாக வாயில் கவ்வியபடி ஒரே ஓட்டம். மிச்ச இரண்டு ரூபாய் கிடைக்கவில்லை. மற்றொரு கதவினருகில் சென்று அமர்ந்துவிட்டேன். பயணம் நீண்டது. சென்ட்ரலில் கேப்டன் வாசிம்கானை பிடிக்கும் ஜம்பிங், சேசிங், பயரிங் பைட்டிங்கையெல்லாம் தாண்டி விஷயங்களை மக்கள் செய்வார்கள்.
ஒரு இருக்கைக்காக நாம் நடத்தும் சமர் இருக்கிறதே சுதந்திரத்திற்கு கூட இப்படி அர்ப்பணிப்பான தீவிரம் இல்லை. உயிரை ரோமத்திற்கு இணையாக மதித்து ரயில்பெட்டிக்குள் தாவி விழுந்துவிடவேண்டியதுதான். இதெல்லாம் நமது மரபான பயணப்பாரம்பரியம்.
ரயில் கிளம்ப இரண்டு நிமிடம் இருக்கும்போது, செகண்ட் கிளாசில் கதிரை தேடி வரும் அதி நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே அப்பா, அட்ஜஸ்ட் பண்ணுங்க, என்று தன்மனைவி குழந்தையோடு வந்து இறைஞ்சுவது, இடம் கிடைத்துவிட்டால் ஏழை வடமாநிலத்தவர்களை கடுமையாக வசை பாடுவது, சுத்தம் இல்லை என்று கூறிக்கொண்டே தீனிப்பாக்கெட்டு காகிதங்களை வீசி எறிவது என்று ரயிலில் களமாடுவதில் நமக்கு மிஞ்சி ஊரு உலகில் ஒருவன் பிறந்துவிடுவானா? அதிலும் சில பேர் எங்காவது ஊருக்கு டூர் போகிறார்களா அல்லது வீட்டையே காலிசெய்துகொண்டே போகிறார்களா என்று திகிலாக இருக்கும் அவர்கள் தூக்கி வரும் பெட்டிகள் அசாதாரணமானவை. அவற்றை தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுக்குட்படுத்தும் அளவு திணிக்கப்பட்டிருக்கும் அவர்களது பொருட்கள் பாதி பயணிகளின் உடல்மேல்தான் சுமத்தப்பட்டிருக்கும். அதிலும் ஒரு மார்வாடிப்பெண் தன் அண்டா இடுப்பில் திரும்பி இடித்தாள் பாருங்கள். முதுகுத்தண்டுவடத்தில் மின்னிய கொடி போல பரவிய ஓடிய வலியில் எனக்கு கர்த்தர், அல்லா, முருகன் த்ரீடி ஐமேக்ஸில் காட்சியளித்தார்கள்.
ஐய்யப்பன்தாங்கல் பஸ்ஸில் ஏறி வடபழனி பேருந்துநிலையத்தில் இறங்கி, பின்ஒய் பன்னாடின் வீட்டிற்கு நடந்துபோனேன். 2 கி.மீ தொலைவு இருக்கலாம். வருகிறேன். வருகிறேன். வருகிறேன் என்று கூறியவர் என் கண்ணில் அதுவரை தட்டுப்படவே இல்லை. பிறகுதான் தெரிந்தது தன் வீட்டுமுக்கு கூட தாண்டவில்லையென. செட்டிநாடு ஹோட்டலில் எக்ரைஸ் வாங்கித்தந்தார் பின்ஒய் பன்னாடு. என் தட்டை வாய்க்கு ஒருதரம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டார் அருகிலிருந்த மேசைக்காரர் ஒருவர்.
பிஎன்ஒய் பன்னாடின் முகத்தில் பீதி கிளைத்துக் கிடந்தது. என்னைத் தங்க வைப்பது குறித்துத்தான் என்று புரிந்துகொண்டேன். காலையில் நேர்காணல் என்று கூறினேன். இடம் பற்றிக்கேட்க நான் போய்விடுவேன் என்றேன். ‘’எத்திராஜ் கல்யாண மண்டபம் பக்கத்தில்’’ என்றார் பிஎன்ஒய் பன்னாடு
முகமது என்ற நண்பரை அழைக்க, அவர் வரவேயில்லை. எனவே நித்தியானந்தம் என்ற அல்டாப் மன்னன் ஒருவரின் அறையில் தங்கவைக்கப்பட்டேன். அவர் கண்ணாடியை தூங்கும் போது கூட அணிந்து நான்சி பிரைடே கனவுகளை பார்ப்பவர் போல தோன்றியது.
அறையில் நுழைந்ததிலிருந்து, பத்து மணி வரை ஃப்ரீயாக இருங்க பாஸ், ஃப்ரீயா இருங்க பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு அவர் சொல்லுவது ஒன்றும் புரியவில்லை. ஒரு அறை அதோடு இணைந்த பாத்ரூம்,கழிவறை அவ்வளவுதான். ஒருவர் புழங்குவதற்கு மிக ஏற்றது.
மேன்ஷன் என்பதை அப்போதுதான் பார்க்கிறேன். முழுக்க பயமுறுத்தல்களினால்தான் மேன்ஷன் நடத்தப்படுகிறது போல. வெளி நபர்களுக்குத்தடா, யாரையும் நம்பாதீர்கள், சொந்தப்பூட்டு அறைக்குப்போட்டுக்கொள்ளுங்கள் என்பது சிறிய உதாரணங்கள். ஜெயமோகனின் எழுத்துக்கள் போல இவை மிக நீண்டவை. இது ஏதோ போபியாவினால் வரும் பிரச்சனை என்று நினைக்கிறேன்.
நித்தியானந்தம் உறங்கிப்போனபின், சர்வ ஆனந்தமாக உறங்கிப்போனேன். எழுந்தபோது, பின்ஒய் பன்னாடு ‘’சீக்கரமாக கீழ வா’’ என்றழைத்தார். முகம் கழுவி கிளம்புவதற்குள் இரு அழைப்புகள். பின்ஒய்தான். கீழே போனதும் தேநீர்கடை மாரத்தான் கொடி காட்டாமல் தொடங்கியது. அரைக்கிலோமீட்டருக்கும் மேலே போனது.
‘’சிம்ஹா,கருணா, கார்த்திக் சுப்புராஜ் எல்லாமே இங்கதா நின்னு டீக்குடிச்சாங்க’’ என்று பெருமையாக கூறினார் பின்ஒய்.
சிறிது, நேரத்தில் அவரது வீடு இருந்த தெருவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தோம்.
‘’ஏதாவது புதுசா எழுதினியா?’’
‘’இல்ல கொழந்தைய பாத்துக்கறக்கே நேரஞ்செரியா இருக்குது என்ன பண்றது?’’ என்றார் பிஎன்ஒய்.
‘’நீ எதுக்கு ஆண்டன் செகாவுக்கு லெட்டரெல்லாம் எழுதறே? அந்தாளு பொலம்பு பொலம்புன்னு பொலம்பறாப்பல அப்பிடி என்னதாண்டா எழுதுனே?’’
‘’அவரு வேணா நா எழுதறதே கண்ட உதவி இயக்குநர்கிட்ட காட்டலாம். ஆனா நா அப்பிடியில்ல, இது தனிப்பட்டது. அதுபத்தி என்கிட்ட கேட்காத’’
‘’நா பண்ணுனதவிட ஒவ்வொருத்தனும் அவன்னோட ப்ரெண்டுக்கு என்னென்ன பண்றானுக தெரியுமா?’’ என்று நான் பேச,
உடனே சுதாரித்த பிஎன்ஒய், ‘’யாரு, ப்ரெண்டு என்னோட ப்ரெண்ஸ் எல்லோருமே எங்கூடத்தான இருக்காங்க?’’
நிச்சயம் கேட்டிருக்க ஒரு உந்துதல் எனக்கு ஏற்பட்டது எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று.
பிஎன்ஒய்யை பொறுத்தவரை பிரச்சனையைப் பார்த்துவிட்டால் ஒரே ஓட்டம்தான். நின்று பார்ப்பதெல்லாம் கிடையாது.
‘’செரி, தம்பிய நா பாத்துக்கிட்டாத்தே அவ சமைக்க முடியும். வரட்டுமா?’’ என்று கைபேசியை உற்றுப்பார்த்தவாறு கிளம்பினார்.
அறைக்குப்போனால் கதவு தாளிடப்பட்டிருந்தது. வெளியே வந்து நின்றபோது, நித்தியானந்தம் பளிச்சிடும் கண்ணாடியோடு வந்திறங்கினார். புட்டத்தை பார் டான்ஸர் போல ஆட்டியபடி மிக நாசுக்காக வந்து படியில் ஏறினார். நான் பின்தொடர்ந்தான்.
‘’தம்பி, முகமது எப்ப வருவான்னு உங்கண்ணன் சொன்னாரா? நாளைக்கு காலையில ரூமுக்கு ஒருத்தர் வந்துருவாரு, அதுக்குள்ள நீ கெளம்பற மாரி பாத்துக்க, ஏன்னா ஓனரு ஒரு டைப்பான ஆளு. வள்ளுன்னு வுழுவான் ‘’ சிறிது இடைவெளி விட்டு, ‘தப்பா நெனச்சுக்காத நெலம அப்படி’ என்றார் நித்தி.
என் நிலைமையும் எதையும் ஏற்க மறுக்க என்று எந்த வாய்ப்புமில்லாது இருந்தது. பிஎன்ஒய்க்கு அழைத்து இதைச்சொன்னதும், அறைக்கு வந்தார். நான்கு நாட்கள் மலம் கழிக்காதவன் போல இருந்தது அவர் முகம்.
முகமதுக்கு அழைத்தார். பன்டிவி போகனுக்கு அழைத்தார். இன்ன பிற முயற்சிகளையும் செய்தார். வெகு பதட்டமாக ஏதோ என்னிடம் சொல்ல முயற்சித்தார். மிஷன் இம்பாஸிபிள் ஆகியபோது சாலையில் ஒரத்தில் இருந்த மூடிய கடை அருகே உட்கார்ந்திருந்தேன்.
பெரும் தோல்வியோடு , அவரது மனைவியின் அனுமதி பெற்று வீட்டு மொட்டை மாடியில் அமரவைத்துவிட்டு கிளம்பிவிட்டார். போர்வைகளை கொண்டு வந்து தந்தார். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு தூங்கினேன். இரவு ஒரு மணி இருக்கும். மழைக்காற்று வேகமாக அடித்து கனமான துளிகள் தன் எடையினை பூமிக்கு தந்த இரவது. துணிகள், பேக் எடுத்துக்கொண்டு படிக்கட்டுகளுக்கிடையில் இடைவெளியில் உட்கார்ந்துகொண்டேன். பிஎன்ஒய் ‘’ உள்ளவந்துபடு. அவதா என்ன எழுப்பிவுட்டு அனுப்பி வெச்சா’’ என்றார். ‘’ரொம்ப சந்தோஷம் நீ அப்படியே போய் படு. நா அப்படியே தூங்கிட்டு காலயில கெளம்பீர்றன்’’ என்று கூறிவிட, அவர் கிளம்பிவிட்டார். மழை நீர் அப்படியே பெருகி வந்து என்போர்வையை நனைத்தது. மின்னல் இடி சமயங்களில் உடல் என்னை மீறி அதிர்ந்தடங்கியது. சிறிது நேரம்தான். எழுந்து மணி பார்த்தால் 5 மணி. பிஎன்ஒய்க்கு அழைப்பு ஒன்றை கொடுத்துவிட்டு போர்வைகளை மடித்துவைத்துவிட்டு, சீப்பு எடுத்து தலையை சீவிவிட்டுகொண்டு கிளம்பினேன். கேட்டிலிருந்து வெளியே சென்றபோது, பிஎன்ஒய் வேகமாக கதவைத்திறந்து திருதிருவென முழித்தபடி வெளியே வந்தார்.
மழைநீர் ஆங்காங்கே வட்டுவட்டாய் தேங்கியிருந்தது. பின் மெதுவாக தேநீர் அருந்தியபின் 12ஜி பேருந்தைப்பிடிக்க நிறுத்தம் தேடி நடந்தேன். தேங்கிநின்ற மழைநீரிடம் இருந்து அதிக நேரம் தப்பிக்க முடியவில்லை. அடைந்துகிடந்த மழைநீரில் கால்கள் கணுக்காலைத்தாண்டியும் நனைந்துவிட்டன. நிறுத்தத்தில் பொறியியல் மாணவர்கள் பலரும் நின்றிருந்தனர். ஒருவரிடம் பஸ் நிற்குமிடத்தைக் கேட்க, 12 ஜியினைப்பிடித்து, ஆழ்வார்பேட்டை இறங்கினேன். எத்திராஜ் திருமண மண்டபத்தைக் கண்டறிந்து ஆட்டோ ஒட்டுநர்களிடம் விசாரித்து நியூ விஷன் பத்திரிகை அலுவலகத்தை அடைந்தபோது, எதையாவது எடுத்துட்டுபோய்டுவானோ என்று திகிலில் மிரட்சியோடு துண்டுதுண்டாக பேசினார் வாயில் காவலர் ஒருவர். பின் ஆயில்ய அகோரி பேசினார். இவரிடம் எதுபேசினாலும், இமயமலையோகி போல பேசுவார். முதிர்ச்சியான எல்லை ஒன்றில் தத்துவ விசாரம், வேத விசாரம் பேசலாமா என்று யோசிப்பவர். இவர் பற்றி தனியாக கட்டுரை ஒன்று எழுதக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரு சிறிய கடை ஒன்றில் நாலு இட்லியும், ஒரு வடையும் சாப்பிட்டேன். எட்டுபேர் நுழைந்தால் அந்தக்கடையில் யாரும் உள்ளே நுழைய முடியாது. அப்படி குகைபோல இருந்தது. சாம்கோ ஹோட்டல் அருகே இருந்த பயணிகள் நிழற்குடை அருகே அமர்ந்துகொண்டேன். வானம் பார்த்தேன். மேகங்கள் விலகுவதும் கூடுவதுமாக இருந்த பொழுதது. அப்போது காலைக்கான பரபரப்பு கூடவில்லை. மணி ஏழாகியிருந்தது. எனக்கு அப்போது சிரிப்பு பெருகி வழிந்தது. ஒரு இளம்பெண் வந்து நின்றபிறகுதான் அந்த நிறுத்தமே ஒளி பெற்றது. வண்டி ஓட்டுகிற ஒருவர் விடாமல் கடைக்கண்ணினால் கூட பார்த்துவிட்டுத்தான் சென்றார்கள். அவள் இடுப்பு வரை முழுக்க பின்னியிராத கூந்தல் காற்றில் பறந்தது. அவளைப்பார்க்காமல் ஒரு பார்வை கூட இல்லை என்பேன். பிறகு என்னருகில் வந்து நின்றுவிட்டு, முகம் சுளித்தபடி கீழேயே இறங்கிப்போனாள். ஒரு சட்டையும், பேண்ட்டும் மஞ்சள் நிறத்தோடு கீழே கிடந்தது. ஈக்கள் பெருகி மொய்த்தபடி இருந்தன. நிறுத்தத்தின் பின்புறம் குப்பைக்கிடங்கு இருந்தது. பள்ளி செல்கின்ற குழந்தைகளைப்பார்த்தவாறு இருந்தேன். கடுமையான மல நாற்றம் வர, நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே மலம் சிதறி கிடந்தது. பத்துமணிக்கு வேழன் சுப்பிரமணிக்கு அழைத்தேன். ‘’ஐயோ கடவுளே நான் 12 மணிக்கு மேலேதான் வருவேன். நீங்க 2 மணிக்கு மேல வாங்களேன் ப்ளீஸ்’’ என்றார்.
எனக்கு கடுமையான இயலாமை கோபம். ‘’ ஐயா,நா இங்க உக்காறதுக்கு கூட இடமில்ல கொஞ்சம் முன்னாடியே ஏதாவது வர முடியாதா? என்றேன். மீண்டும் ‘ஐயோ கடவுளே’ அழைப்பைத் துண்டித்து விட்டேன். நாகேஸ்வரராவ் பார்க் கிளம்ப திட்டமிருந்தது. பிஎன்ஒய் தந்த நூறு ரூபாய் மானியத்தில் ஒரு படம்ஒன்று வாங்கிக்கொண்டு ஊருக்குப்போக டிக்கெட் எடுக்க லஸ் கார்னர் கிளம்பினேன். பிறகு பார்க் வந்தால் பாதிப்பேரின் வீடே இதுதான் என்று தெரிந்தது. பலபேர் இருந்தார்கள். எனக்கோ மலம் கழிக்க அவசரமாக இருந்தது. பிஎன்ஒய் அனைத்திற்கும் இயங்கும் ஒரு எந்திரம் போல. அவரிடம் என்ன சொல்வது?
பார்க்கில் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டு வந்த ஒருவரை ‘’அண்ணா, இங்க பாத்ரூம் எங்க இருக்குது?’’ என்று கேட்க, ‘’நேரா போயி ரைட் எடுப்பா ’’ என்று கூறியபடி, குச்சியை சுழற்றியபடி சென்றார்.
வயிற்றில் ஏதோ மூன்றாம் உலகப்போருக்கான காலாட்படை உதைந்து கொடுத்து போவது போல தோன்றியது. வயிற்றைப்பிடித்துக்கொண்டு கழிவறையைத்தேடி சென்றால் எனக்கு முன்னமே ஒருத்தர் துண்டுபோட்டு நின்றிருந்தார். ‘’பாருய்யா,உள்ள போனான் இன்னும் காணாம், ஆராய்ச்சி ஏதோ பண்றார் போல’’ என்று பேசினார் அந்த ஆசாமி.
தண்ணீருக்கான அலைச்சலில் 1880 ல் யாரோ ஒரு பிரபுவுக்காக செய்த அடிபம்பு ஒன்றில்தான் தண்ணீர் அடித்து குடிக்க வேண்டுமாம். இரண்டுமுறை அழுத்தியபின் மூன்றாவது தடவை அழுத்தும்போது தண்ணீர் வரவில்லை கைபிடி வந்துவிட்டது. அதுவாச்சும் வந்துதே என்று எனக்கு ஒரு சந்தோஷம். குடிபோதை குஷியால் ஒருவர் அதற்கு தேற்றம்,நிரூபணம் எல்லாம் தந்தார்.
வேழன்சுப்பை சந்தித்தபோது, அவர் இடது சாரி மார்க்சியர் என்று தெரிந்துகொண்டேன். அவரின் வார்த்தைகள் அவ்வளவு நம்பிக்கை தரவில்லை. நல்ல ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்தார். பணம் வேணுமா ? என்று கேட்டார். சட்டைக்கு பாரமிருந்தா கொடுங்களேன் என்று கேட்டிருப்பேன். இருந்தாலும் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவருடைய கருத்துக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சாதி பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு என்னை அழைத்திருக்கிறார் எப்படி எனது வீடு மயிலாப்பூரில் இருப்பதாக குறிப்பிட்டி இருந்ததால். பின் சில பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்து, சென்ட்ரலுக்கு பஸ் பிடித்தேன். அங்கு ஒரு பெண்ணை சிநேகித்தேன். ரொம்ப ஆசைப்படக்கூடாது. அவருக்கு என் அம்மா வயது. சொந்த ஊர் கோவை. ஆனால் இப்போது வியாபாரம் செய்வது குஜராத்தில். போடிபற்றி பெருமிதமாகப்பேசினார். ஆனால் மின்சாரம் எப்போதும் கிடைக்கிறது என்றார் கூடவே கட்டணம் இங்கே இருப்பதை விட அதிகம்தான் என்று ஒத்துக்கொண்டார். ரயில் வந்தவுடன் ஏறி இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிரில் நான்கு இளம்பெண்கள் எனலாமா பள்ளிச்சிறுமிகள் என்று கூறலாமா வந்து அமர்ந்தார்கள். இரவு வெகுநேரம் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டுமே வந்தார்கள். வானமே கூரையாகக் கொண்ட பலர் சென்னையில் இருப்பதை அறிய வைத்தது இந்த பயணம்தான். யாரும் வாழ்க்கை முழுவதும் யாருக்கும் ஒத்தாசை செய்யமுடியாது என்று புரிந்துக்கொள்ள உதவியது இப்பயணம். மனிதர்களிடம் நிறைய பழகவேண்டும். இது தன்னியல்பாக பயணத்தில் உருவாகும். நிர்பந்தத்தில் நமது மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாமே அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். ‘வாழ்க்கை அழகானது என்று சொல்லமுடியவில்லை. தன் போக்கில் இயல்பானது’ என்று ஆர்.எம்மின் வார்த்தைகளில் கூறலாம். வீடு, நிழல், பாதுகாப்பு குறித்தெல்லாம் நாம் இவை ஏதும் சரிவர அமையாத பாதுக்காப்பே இல்லாத ஆபத்தான தருணத்தில் காத்திரமாக உணர்கிறோம். இது மன உளைச்சலை இன்னும் அதிகமாக்குகிறது. எத்தனை மனிதர்கள் உறங்குகிறார்கள் பூங்காக்களில். அமர சாலை ஓரங்களில் இருக்கைகளும், கழிவறைகளும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இந்த தேசத்தில் கோயில்கள் மட்டும்தான் அவசியப்படாத இடங்களிலும் ஆக்கிரமித்து எழுகின்றன.