"

கங்காணிச்சித்தரின் நண்பரான தற்போது நாங்கள் எங்கள் வீடுபோல பாவிக்கும் வீட்டிற்கு உண்மையான வாடகைதாரர் பேசும் பேச்சுக்கள் டணால், டிங்கு, டணால் என்றிருக்கிறது. காலையில் சர்க்கரை போட்ட பன்னுக்கு பதில் சாண்ட்விச் உப்பு பன்னை வாங்கி வந்து தின்ற க.சித்தருக்கு மூன்றுமுறை தர்மபுரி,சுறா’ வகையறா படங்களைப் பார்த்தால் ஏற்படும் தலைச்சுற்றலும், மிரட்சியும் ஏற்பட்டிருக்கிறது.

அருகிலிருந்த எழுத்தோலை எப்படி நித்தியானந்திலிருந்து எழுவது என்று யோசித்தபடி எழலாமா, புரளலாமா என்று வாழும்கலை சத்திய வகுப்பை மேற்கொண்டபடி கடும் சிந்தனை வயத்திலிருந்தார்.

சமையலுக்கு எல்லோரும் வெங்காயம் அரிவோம். ஆனால் அங்கிருந்த சித்தரின் நண்பரும், நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் இருபக்க ஒழுக்க சாசனம் படிப்பவருமான பாண்டு சாமிகள் பச்சை மிளகாயை சுமார் இருபது மட்டுமே அரிந்து, தக்காளி வேணுமா? தாமே கேள்வி கேட்டபடி இருந்தார். சித்தர் கண்ணிலே சைகை செய்ய எழுத்தோலை மிகச்சரியாக அதைப்பெற்று சிரித்தார். கர்ம சிரத்தையோடு பச்சை மிளகாயை எடுத்து சட்டியில் இட்டு வணக்கத்தொடங்கினார் பாண்டு சாமிகள். கண்கள் வெளியே வந்துவிடும்போல முழித்தார் க.சித்தர்.

பன்ன எடுங்க உத்தரவிட்ட பாண்டுவிற்கு எழுபது வயதிருக்கும். கூந்தல் வழிந்து தோள்பட்டையில் இறங்கி வீழ்ந்து கிடந்தது. அறுவை சிகிச்சை தடங்கள் உடலில் தாறுமாறாக இருந்தது. வயிற்றில், முழங்கையில் என உடலை அசைக்கும் எல்லா இடங்களிலும் இருந்தன தடயங்கள்.

நேராக கரண்டியில் சிவப்பாக எடுத்துக்கொண்டிருந்ததை கண்ட சித்தர் அழகுபார்வதி அழைக்க, அடடா என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். சிக்கியது நானும், அண்ணையன் எழுத்தோலையும்தான். கரண்டியில் தெரிந்தது மிளகாய்தான்.எப்படிப்பார்த்தாலும் ஒரு வார பேதிக்கான மருந்து என்பதை உணர்ந்துகொண்டேன்.

‘’ஷேரிங் முக்கியம் தம்பி, பன்ன எடுங்க, சும்மா சின்னதா ஒரு காரம் வேண்டாமா, கையக்காட்டுங்க என்று வலுக்கட்டாயமாக மிளகாய் பிரட்டலை கையில் பன் வழியே தந்துவிட முயற்சித்தார் பாண்டு சாமிகள்.

ஆகா அடுத்த நித்தியானந்த ஆசனங்கள் நமக்கு கழிவறையில்தான் என்பதை அறிந்த எழுத்தோலையின் முகத்தில் அவர் வாழ்நாளின் அதிகபட்ச பயத்தை அந்த கணத்தில் சந்தித்தேன்.

‘’ இல்லீங்கய்யா, வேண்டாம். வேண்டாம். நீங்களே சாப்புடுங்க ‘’ என்று அவர் பேசினாரா, பயத்தில் கத்தினாரா என்று எனக்கு வித்தியாசமே தெரியவில்லை.

ஏதாவது பேசினால் மிளகாய் பொரியலோடு, ஒரு மணிநேர அனுபவ பகிர்தல் நிச்சயம் என்பதை உணர்ந்தவனாக எழுத்தோலையோடு வாயை மூடி பேசிக்கொண்டிருந்தேன்.

எனக்கு இதுபோன்ற பேரிடர் மேலாண்மை தருணங்களில் வயிற்றினுள்ளே டிஸ்கவரியின் சிறப்பு ஒளிபரப்பு தொடங்கிவிடும். கரகரவென வயிற்றில் ஏதோ சட்டியில் பொரிவது போன்ற சத்தங்கள் கேட்டது.

உப்பும், மாவின் புளிப்பும் உச்சமாக திட்டத்தில் பருப்பு பொடியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் ‘’ சாப்பிடுங்க தம்பி ’’ என்ற அவரின் குரலில் தெரியாமல் கண்ணிவெடியில் காலை வைக்கிறோம் என்று தெரியாமல் காலையல்ல வாயை வைத்துவிட்டேன். இன்று கழிவறைக்கு செல்வது நான்கு காட்சிகளைத்தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போது கூட பாண்டு சாமிகள் முன்னே அமர்ந்து மிளகாய் பொரியலை தின்றபடி, மிளகாயில் அடுத்து என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதாக பட்டது. அடுத்து மிளகாய் சாம்பார், மிளகாய் பாயாசம் என்று கூட அடுத்தடுத்த ஆபத்துகள் வரலாம் என மனம் உச்சரிக்க, கழிவறைக்கு சென்றேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book