சித்தர் ஏதோ கொள்ளையடிக்கும் என்ஜிஓ ஒன்றுக்கு இதழ் தயாரிக்கும் பணிகளை செய்துவரச்செய்தார். இதழின்பெயர் ‘கூனகம்’ ஆசிரியர் குழுவில் நமது திருப்பெயர் சேர்த்தியே ஆகவேண்டும் என்று சித்தர் கூறியபோது தெரிந்துவிட்டது. ஒரு பைசா இந்தாளு தரமாட்டான் என்று.
ரமணாஸ்ரமம் வளாகத்தில் கண்ணெரிய சிரமப்பட்டு, பகல் வெளிச்சத்தில் செய்த வேலை வெற்றியடைந்தது. க.சித்தர் இரவு எதுவும் சாப்பிடவில்லை. முகம் மலர்ச்சி சிறிதும் குறையாமல் வேலை செய்கிறார். சமுதாயப்பணி அல்லவா?
நேத்து பாண்டு ஐயா உன்னப்பத்தி பிராது குடுத்திருக்கிறார் என்று கூறிவிட்டு பஞ்சாயத்துக்கு சொம்பு தேடும் பாவனை சித்தரிடம் தென்பட்டது. என்னவாம் என்றேன். ‘’ நீ ஏதோ பணங்குடுக்கறக்கு தயங்கினியாமா நேத்து ஹோட்டல்ல ‘’
‘’ அவரு கேட்டாரு. ஒடனே தேடி குடுத்துட்டனே ‘’
‘’ பணத்த திருப்பிக்கேட்டயா? ’’
‘’ பணம் வேணுமா? இந்தா புடின்னாரு, இருந்தா குடுங்கன்னேன் ‘’
‘’ எதுக்கு அவருகிட்டப்போயி… தண்ணியடிச்சிட்டு என்ன போட்டு குமுறுக்கஞ்சி காச்சறாப்பல, வாயில நொர தள்ளிருச்சு தெரியுமாடா ஒனக்கு?’’
‘’அவரு என்ன நெனைக்கிறாருன்னு எனக்கென்ன தெரியும்?’’
‘’கவனமா பேசு, வயசானவரு பாத்துக்க’’
‘’எங்கிட்ட சொல்லச் சொல்லுங்க, எதுக்கு உங்ககிட்ட சொல்றாப்பல?’’
‘’விஷயம் தெரிஞ்சிருச்சில்ல ஒனக்கு அவ்வளவுதான வுடு’’ என்று அதுவரை அழைப்புகளை தவிர்த்தவர் மீண்டும் அழைப்புகளை ஏற்று சமூகப் பணிகளுக்கு திரும்பினார்.