பேபிகுச்சியப்பன் இதைக்கேட்டார். இயல்பான ஒரு அங்கீகரிப்பு வேண்டி அலையும் மனிதர்கள்தாமே நாமும். சமாதானம் செய்துகொண்டு சமரசமான காட்சிகளினூடேதான் இயக்குநர் கனவுகளை செயல்படுத்திக்கொள்ள முடியும். இது யதார்த்தம்.
இடைவேளை திரையரங்கில் விட்டதும் நண்பர்கள் கேட்கிறார்கள் எப்படி இருந்தது படம்? இன்னும் படம்பார்த்து முடியவில்லை என்றேன். இடைவேளை என்பது வணிகத்திற்கான நிமிஷங்கள். படம் முழுமையும் பார்த்துவிட்டு பேசுவோம். அனுபவத்தை பகிர்தல் என்பது சரியாக இருக்கும்.
எழுத்து, பிம்பம் என இரண்டையும் சமரசமில்லாது ஒரு பகிர்தலாக நேர்மையாக கருத்துக்களை கூறக்கூட ஒரு பெரும் தயக்கம் நிலவுகிறது. நட்பு கெட்டுவிடும். நானும் இதுபோல சில நட்புகளை பரிகாச விமர்சனத்தினால் இழந்திருக்கிறேன். படைப்புகளின் வழியே படைப்பாளியை இனங்கண்டுகொள்ள முயற்சிக்கிறேன். இது சரியான பாதையா என்று தெரியவில்லை. இயல்பாக நடக்கிறதை ஏற்றுக்கொள்கிறேன்.
திணிக்க முயற்சிக்கும் வன்முறை உறவுகளை உடைத்துவிடும். நண்பர்கள் என்று எனது வீட்டுக்கு ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்களென பயமாகத்தான் இருக்கிறது. அவர்களிடம் மற்றவர்களிடம் தாக்குதலுக்குட்படும்போதெல்லாம் எதுக்கு உனக்கு இந்த வேல? நல்லாருக்குதுன்னு சொல்லீருடா என்கிறார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். அட வண்டுருட்டாம்பழங்களா! சூப்பர் சிங்கரு ஜட்ஜெல்லாம் அந்த வார்த்தய பல சீஸனுக்கு முன்னாடியே தாண்டிவந்துட்டாங்கடா! அப்டேட்டு வேணாமாடா என்று சொல்லி முடிக்கவில்லை. எனக்கருகில் அமர்ந்திருந்தவனின் கண்கள் கேப்டனைவிட சிவந்துகொண்டிருப்பதுபோல் பட்டது. கட்டுரைக்கு இதாம்பா ரெட்லைட். வண்டிய நிறுத்திக்குவோம்.