கங்காணியார் தினமும் சாப்பிட்டுவிட்டு ஷேர் ஆட்டோவில் ஏறி ரமணாஸ்ரமம் சென்று பலமுறை ரமணரை வலம்வந்துவிட்டு அங்கிருந்து டிசைனர் தோழர் பங்கரண்ணா வீட்டுக்குப்போவார். உப்பேறி வேர்வைத்தடங்கள் பதிந்துபோன சட்டையின் நிறம் என்னவென்று யாருமே சொல்லமுடியாதபடி மாறிய சட்டையும், பழுப்பிலிருந்து மஞ்சளாகி கொண்டிருக்கும் வேட்டியையும் ரோஸ் நிற பையையும் தூக்கிக்கொண்டு கிரிவலப்பாதையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு பரதேசிதான் என்றால் அது நிச்சயம் கங்காணிச்சித்தன்தான்.
வயிற்றில் பசி இரைச்சலோடும், எதுவும் நிச்சயமில்லாத கணங்களைக்கொண்ட வாழ்விலும் கங்காணியினால் ஒரு குரங்கு தன் குட்டியை சுமந்து செல்வதை, சாமியார் குளிப்பதை, உடமை பற்றிய பயமின்றி ஒருவர் உறங்குவதையும், குழந்தைகளைப் பார்த்தால் புன்சிரிப்பு கொள்வதும், ரசிப்பதும், சிரிப்பதையும் பார்த்து எனக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரே சமயத்தில் ஏற்பட்டது.
‘’ புகார் சொல்றவங்களுக்கு அது புதுசா இருக்குண்டா, ஆனா தெனந்தெனம் அப்பா குடிச்சிட்டு வர்றது, அம்மா போட்டு அடிக்கறது, பொருள் வாங்கறக்கு கடஞ்சொல்றதுன்னு நெறயா அவமானங்கள பாத்தாச்சுப்பா, சரி அத வுடுடா ’’
இப்படித்தான் முடியும் அவரைப்பற்றி ஏதேனும் கேட்டால். அடுத்து அச்சில் இருக்கும் புத்தகங்கள், நூல் அறிமுகங்கள், புதிய செய்திகள், நான் செய்யவேண்டிய வேலைகள் என பட்டியலிட்டு கூறுவார். இதில் பாதி கனவா என்று கூட ஆகாயம் வரை காரியங்களை அடுக்குவார். கங்காணிச்சித்தனுக்கு என்றே திட்டமிட்டு ஒருவன் அதிக நேரம் உழைக்கும் பேட்டரியைக் கண்டுபிடிக்கவேண்டும்; எந்த நேரத்திலும் ஏதோ ஒரு அடிமை கைபேசியில் அழைத்துக்கொண்டேயிருப்பான். பத்து நிமிஷன்டா தம்பி என்று பேசத்தொடங்கும் க.சி பின் தொடரும் ஒரு சிறு இடைவேளையில் ‘’ செரி தம்பி அந்த ட்ரான்ஸ்லேஷனை முடிச்சிறு என்ன? ‘’ என்று வேட்டிக்குள் லட்சுமி வெடியை வீசிஎறிந்துவிட்டு தலையை குனிந்து அப்படியே கேட்டைத்தாண்டி சென்றுவிடுவார். அவரின் தலையைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். ‘’ இந்த மாரி ஆளுகவெல்லாம் இல்லீனா இந்த சமுதாயம் என்னதானப்பா ஆகிறது?’’ என்று பழனிச்சாமியின் மனக்குரல் கேட்டது.