இரவில் கிருஷ்ணன் வைத்த வீடு எனும் கல்யாணி எழுதிய சிறுகதைத் தொகுப்பைப் படித்து நெக்குருகி நெகிழ்ந்து கிடந்தபோது, சிவா. சிவா என்று ஒரு குரல் வெளியில் இரைந்தது. தாழை நீக்கியதும், கருப்பாய் தாடி கொண்ட உருவம் வேகமாய் உள்ளே ஏகியதும் ‘சிவா இல்ல’ என்று கேட்டவாறே உள்ளே சென்று படுக்க இடம் தேடியது. ‘’இங்க படுங்க’’ நான் போர்வையை எடுத்தவாறு கூறுவதற்குள்ளாகவே புத்தகக் கட்டுக்கள் கொண்ட அறையின் தரையில் சரிந்துவிழுந்த தொப் சத்தம் காதில் கேட்டுவிட்டது.
யார் இது? அந்தாளு பாட்டுக்கு உள்ளே வந்து படுத்துக்கிட்டான்? சித்தனோட ஆத்மார்த்த நட்பு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, ‘’ கிரிவலம் போவணும் பாஸூ, நேரமே எழுப்பி விடுங்க’’ என்று அவரின் குரல் கேட்டது. அறை முழுக்க ஏதோ நெடியடித்து நிறைவதாக பட்டது. மதுபானத்தின் நீக்கமற நிறையும் வெம்மையான நெடி.
அறையில் எரிந்த மெழுகுவர்த்தியினை அணைத்துவைத்துவிட்டு, இருள்சூழ் அறையாக்கி படுத்தேன். வந்தவரின் பெயர் கூட தெரியவில்லையே என்று லேட்டரல் திங்கிங் அப்போதுதான் உதயமானது. ஆள் பார்க்க சித்தனின் நட்பு என்று அர்த்தம் கொள்ளுமளவு உடையும், பழக்கமும், சிந்தனையும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு பேபி டால் சன்னிலியோனைத் துணைக்கழைத்துக்கொண்டு உறங்க எண்ணினேன். நான்சி பிரைடேவின் எழுத்து, இன்னும் பல பெண்களை கைபிடித்து இழுத்து மூன்றாவது காலை முட்டுக்கொடுத்து தூங்கிப்போனேன்.
உறக்கம் கலைந்து எழுந்தபோது, தொட்டாலே அழுக்கு ஒட்டி சொறிசிரங்கு வந்துவிடும் வல்லிய வாய்ப்புகள் பல இருக்கும் துண்டினைக் கட்டியபடி நின்ற மதுபானக்கடையைப்பார்த்து, ‘’ ஏங்ணா கெளம்பறீங்களா?’’ என்றேன்.
‘’ தம்பி இங்க கரண்டு எப்ப வரும்?’’
‘’யாருக்குங்ணா தெரியும், நா வந்ததிலிருந்தே கரண்டு இல்லீங்களே!’’
‘’ செரி தம்பி, நா கிரிவலம் போறன், நீ ரூமுலதான இருப்பே, வந்தர்றேன் எங்காலும் வெளியே போயிராத. பேக்கு உள்ளே இருக்குது’’
வேகமாக கிளம்பியவர் கதவின் மேல் மோதி வெளியேறினார். எனக்கோ பெரும் சந்தேகம். கிரிவலத்திற்கா இவ்வளவு வேகம்? இவ்வளவு வெறி? குறையக்குறைய ஏற்றிக்கொள்ள போவது போலத்தோன்றியது.
கிரிவலத்திற்கு ஐந்துமணி நேரம் ஆகும் என்று வாழும் மெய்ஞானி பாண்டு சித்தர் வாழும் உதாரணமாக உணர்த்திக் கொண்டிருந்தார். ஆனால் மதுபானமன்னன் ஆறுமணிக்கு காலில் நெருப்பு பறக்க கதவருகே வந்து நின்றபடி’’ சிவா, சிவா’’ என்று ஒலமிட்டார். கதவு தாழ் வைக்காமலேதான் இருந்தது.
‘’ ஏங்ணா இவ்வளவு நேரம்?’’
‘’ அங்கங்க ரெஸ்ட் எடுத்துட்டு நடந்தன்ல அதான் லேட்டாயிருச்சு என்று சட்டையைக் கழற்றி டேபிளில் வைத்துவிட்டு மயிரடர்ந்த உடம்பை தரைக்கு கொடுத்து படுத்துவிட்டார். ‘’ ஒருமணி நேரங்கழிச்சு எழுப்பி வுடப்பா’’ என்றார்.
எனக்கு எப்போதுமே சில மிதப்பு குணங்கள் உண்டு. எனக்க அம்மை உட்பட பலரும் லொள்ளு புடிச்ச நாயி என்று எரிச்சலாக கூறுவார்கள்.
உண்மை கலந்த நாட்குறிப்புகள் படித்துக்கொண்டிருந்தேன். ‘’ தம்பி பசிக்குது, எங்கிட்ட காசில்ல, வடபோண்டா கீது சாப்பிட்டு நா கெளம்பறேன் ’’ என்றவரை நிதானமாக பார்த்தேன். எந்தப்பொறுப்புக்கும் உட்படாத கண்கள், தன் நம்பிக்கையை தெரிவித்தன. எதையும் சமாளிக்கும் அவரின் தைரியத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
தயங்காது பணமில்லை என்று சாப்பிட பணம் கேட்கும் தைரியம்.நெஞ்சுத்தினவு. உரம். அலட்சியமான குரல். எனக்கு சாத்தியமாக என்று நினைத்தேன்.ம்ஹூம்!!!
எனக்கு பெரும் சங்கடம் தோன்றியது. கங்காணிச்சித்தன் தந்த பணம் இது. எனக்கு மட்டுமான பணம் இல்லை. ஆயிரம் ரூபாய் இருந்தது. வடை சாப்பிடுவதற்கு என்னிடம் பணம் கேட்பவர் எப்படி ஊருக்கு கிளம்ப பணம் கொண்டிருப்பார்? என்று ஐயம் தோன்றியது.
‘’ எஞ் சொந்த ஊரு நாகர்கோயிலு, சென்னைல படம் ஒண்ணு எடுத்துட்டிருக்கேன். நிலம், நீர், காற்று அப்பிடின்னு பேரு. மதுபானக்கடைன்னு ஒரு படம் வந்தது தெரியுமா? அதுல நான் கதையும், திரைக்கதையும் எழுதியிருந்தேன். அந்தப்படத்திற்கும் அவருக்கும் ஒரே சம்பந்தம் படத்தில் வரும் பாத்திரம் போலவே அவரும் சரக்கு பிரியர் என்பதுதான்.
‘’ சென்னைல ஒரு பிரச்சன, அதான் புரொடியூசர் கிட்ட கூட சொல்லாம வந்துட்டேன். எனக்கு ஊரு சுத்தறன்னா ரொம்ப புடிக்கும். என்று சிரித்துக்கொண்டே சொல்பவரை என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பமாக பார்த்தேன்.
‘’ ஒரு 110 ரூபா வேணும். சிவாட்ட சொல்லீற்றன். பணத்த கொடுத்தீங்கண்ணா ஊரு போயி சேந்துருவேன். போனும் கூட அவசரத்துல எடுத்துட்டு வரல. 110 ரூபா போதும்’’ என்று மந்திரம் போல கூறியவரை திகைப்பாக பார்த்தேன். எனக்கும் அவருக்கும் அரைமணிநேரம் கூட பழக்கம் இல்லை. பணம் கேட்கிறார். திரும்பித்தருதல் என்பதெல்லாம் தேவைப்படாது என்று எவ்வளவு நம்பிக்கை. சரியான ********தான் போல.
கங்காணியை அழைத்து விஷயத்தைக்கூற, 150 ரூபாய் கொடு என்றார். எனக்கு ஆள் எப்படியும் குடித்துவிட்டு மூத்திரச்சந்தில்தான கிடப்பாரோ என்று தோன்றியது. சரி சாப்பிடுவோம் என்று கடைக்கு போனால் தள்ளுவண்டிக்காரர் இல்லை. லாரிக்காரர்கள் மட்டும் அதிகம் உணவருந்தும் ஆவி பறக்கும் ஓட்டல் கடையில் சென்றால் ஒரு தோசையை நிம்மதியாக பிய்த்து திங்க முடியாத சூடு. (ஹோட்டல் பேரு தீபமாம், அதுக்காக உக்கார சேரு கீழ கூடவா சூடா இருக்கும்) எவன் குறைவாக தின்கிறானோ அவன்தான் நிச்சயம் சாப்பிடுவதற்கு பணம் கொடுப்பான் இல்லையா, அதுவேதான் நிகழ்ந்தது.
ஆயிரம் ரூபாயை சில்லரை மாற்ற பேருந்து நிலையத்தை தீர்மானித்தேன். என்னிடமிருந்த பணத்தை எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே இருந்தார் மதுபான மன்னன். பின் மதுபானக்கடையில் சில்லரை மாற்றிக்கொடுத்துவிட்டு ‘’இதல்லா பிராக்டிகல் நாலேஜூ’’ என்று ஏகத்திற்கும் பெருமை அடித்துக்கொண்டார். அது இருந்து இவர் என்ன சாதித்துவிட்டார் என்று கடும்கோபம் எழுந்தது. ‘’ 200 ரூபாயா குடு. பஸ்ல போறக்கு பத்தாது. அப்பறம் ஒரு பத்து ரூவா சில்லரையா குடு. நூறு ரூபாயா குடுத்தா கண்டக்டரு திட்டுவான்’’ என்று 210 ரூபாய் வாங்கிக்கொண்டார் மதுபான மன்னன்.
சாப்பிட்டதில் அவர்கணக்கு 25 ரூபாயாக ஆகி இருந்தது. பிறகு குடிபோதையில் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறப்போய் இறங்கினார். ‘’ஒரு குவார்டர் அடிச்சிட்டுப் போவமா, ஒரு மாதிரி இருக்கு’’ ஒரு கெட்டவார்த்தை என் மனதில் சுருதி பிசகாது ஆவேசமாக எழுந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘’ ஒரு 50 ரூபா கூட குடுத்திரு என்ன சொல்றே’’ என்று மேலே அடுக்கிக்கொண்டே போனவரை வேண்டாம் என்று சொல்லி வந்தேன். செலவு வைக்க கடுமையாக யோசித்தபடியே வந்தார். மோரு குடிக்கலாமா என்று கேட்டபடி, கிங்ஸ் ஒன்று வாங்கி ஒரு வாய் புகை, ஒரு வாய் மோர் என்று குடித்தார். ஏதாவது பேசித்தொலைக்க வேண்டி நம்மாழ்வார் பற்றி ஏகலைவன் பத்திரிகையில் எழுதியிருப்பதைச் அப்போதா சொல்லித்தொலைக்க வேண்டும்?
அப்படியா என்று புகைத்தபடி கேட்டவர், ‘’ புத்தகத்த வாங்கணுமே என்னன்னு பாக்க வேண்டாமா?’’ என்றவரை திகிலோடு பார்த்தேன். மோருக்கும், சிகரெட்டுக்கும் பணம் பதினாலு ரூபாய் கொடுத்துவிட்டு, இதற்கு ஒரு தந்திரம் செய்தார். ‘’எங்கிட்ட சில்லற இல்லை.உங்கிட்ட இருக்கில்ல. நீயே கொடுத்தறயா?’’ என்று அந்தப்புறமாய் திருப்பிக்கொண்டார்.
மதுபான மன்னன் பேருந்தில் ஏறி உட்கார்ந்தபின் நான் கணக்கு போட்டுப்பார்த்தபின் காந்தியின் அனாமத்தான வரா கணக்காக 250 ரூபாய் ஆகியிருந்தது.