"

கேள்வியும் பதிலும் அவரே.

தொகுப்பு: ஸ்மால் சில்லி

திரைப்படம் குறித்த தங்களது விமர்சனங்கள் அரச பரம்பரை, ஆண்டன் செகாவ், போன்றோரால் கடும் கண்டனங்களைப் பெறுகிறதே?

இது இயல்பாகவே நடைபெறக்கூடிய ஒன்றுதான். பெயர்கள் மட்டும் மாறும். எனது எழுத்துக்களும் கருத்துக்களும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின என்பது உண்மைதான். நான் மறுக்கவில்லை. பிம்பம் காண்பவருக்கு பல வாய்ப்புகளை, திறப்புகளை வழங்குகிறது. நான் எப்படி அதைப்புரிந்து கொண்டேன் என்று மட்டும் நான் தெரிவித்தேன். அவர்களின் அனுபவம் சார்ந்து வேறுவிதமாக காட்சியளிக்கலாம். நான் கண்டதை நீ காணவில்லை ஏன் என்பது சரியான வாதம் அல்ல. பகிர்தல் வேறு. குயுக்தியாக தன் புத்தியை மேலே உயர்த்திக்காட்டுவது வேறு.

மகாபாரதத்தை முன்வைத்து ஜெயமோகன் முப்பது நாவல்வரிசை வெளியிடுகிறார் எப்படி சாத்தியம் இது?

நம் முன்னோர்களின் அளப்பரிய கற்பனை சக்தியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவை இன்றும் மீள எழுத எழுத்தாளர்களுக்கு பல வாசல்களை திறந்துவைத்துள்ளது. உக்கிரமான எண்ணங்களை மனதில் பீறிட வைக்கும் எழுத்து ஜெவினுடையது. ஜெவின் நூல்களை ஆழமாக உணர்ந்து கற்க வேண்டியதாகவே நான் கருதுகிறேன். பல அடையாளக்குறியீடுகளை களைந்துவிட்டு அவரது எழுத்தை படிக்கும் விசால மனம் நமக்கு வேண்டும். சுஜாதா படிப்பவர்களுக்கு ஜெ கசக்கத்தான் செய்வார்.

கடும் பரிகாசத்தொனியோடு புலிகேசி திரைவிமர்சனம் செய்கிறாரே. ஆபத்தில்லையா இது?

பணம் செலவழித்து படம் பார்ப்பவனுக்கு அதை எழுத மறுப்பு ஏன்? ஆர்.எம் போன்றோர் தூங்க தியேட்டர் செல்கிறார்கள். புலிகேசி படத்தின் எண்டு கார்ட் வரை ஏதோ தொலைத்துவிட்டதைப்போல் தேடுகிறார். எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. படம் நஷ்டமடைய இன்று சூழல் இல்லை. இங்கு எவ்வித புரிதலும் இல்லாமல் அனைத்து குப்பைகளும் வெற்றியடைகின்றன.

கட்டுரை மொழிபெயர்ப்பு ஏன் செய்கிறீர்கள்? சிறுகதை எழுதியவரல்லவா?

நான் எதற்கு தாராபுரத்தார் போல எழுதி குவிக்கவேண்டும்? அவரும் புத்திசாலித்தனமாக விகடனுக்கு எழுதி பணம் பெறுகிறார். அதுபோலத்தான் கட்டுரை மொழிபெயர்ப்பும். கங்காணிச்சித்தன் பணம் தருகிறார். செய்கிறேன். இதில் சொல்ல ஏதுமில்லை. நான் எழுதிய புத்தகம் என்று என் கட்டுரையை காட்டினாலே யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள் என் தாய் உட்பட. தரமான சில விஷயங்களை செய்தாலே போதும்.

 

 

கதைகள் படித்ததில் தங்களுக்கு பிடித்த நூல் ஒன்றையும் எழுத்தாளர் ஒருவரையும் கூறுங்கள்.

அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகளுக்கு நான் அடிமை. எள்ளலும் , அங்கதமும் கூடிய எழுத்து அவருடையது. புன்சிரிப்பில்லாமல் அவரது கதைகளை படிக்கவே முடியாது. அறிதலை நிகழ்த்துகிற இவர் தமிழின் சொத்து என்றே கூறுவேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book