பெரியெழுத்து சிற்றிதழில்…
தாங்கள் கடுமையாக படைப்பை விமர்சிக்கும் கொங்கு சந்நிதானம் விருது வாங்கியிருக்கிறார் கவனித்தீரா?
ஸமீரா போன்ற புள்ளை பூச்சிகள் வேண்டுமானால் அவரது படைப்பை பகவத்கீதை போல வாசித்து பயபக்தி கொள்ளலாம். அவர் படைப்புகள் சில நன்றாக இருந்தாலும் பொழுதுபோக்கு கதைகளை விட்டுவிட்டு கவனம் வைத்து நிறைவாக கதைகளை குறைவாக எழுதலாம். இல்லையென்றால் இன்று இரண்டு, நேற்று இரண்டு என்ற வருங்காலத்தொகுப்பிற்கு கதைகளை சேர்க்கலாம் எந்த வித விளைவுகளும் இல்லாமலே. அதுவே அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஐயா விருது பற்றி…
இடைமறித்து.. அதை வாங்கி என் கக்கத்தில் வைத்து வருகிற போகிறவரையெல்லாம் மிரட்சிக்குட்படுத்துவதா? அது ஒரு பைத்தியக்காரத்தனம். எழுத்து என்பது பாராட்டுக்கோ, விருதுக்கானதோ உறுதியாக எழுதப்படுவதல்ல. விருது இன்று தாம்பூலப்பை போல ஆகிவிட்டது. அனைவரும் வாங்கிக்கொள்ளலாம்.சோளக்கருது கூட பருவத்தில்தான் கிடைக்கிறது. ஆனால் விருதுவழங்குவது இப்போது யாருக்கு பொழுதுபோக்கு கிடைக்கிறதோ அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கொங்கு சந்நிதானம் உங்களது கருத்திற்கு சங்கடம் தெரிவித்தாராமே?
உண்மைகள் அப்படித்தானிருக்கும். பொய் மிகுந்த மகிழ்ச்சி தரும்படியானதாக இருக்கும். அந்த திரையும் ஒரு நாள் கழன்றுவிழும். அவரது உதவியையோ, சிபாரிசோ, அன்பளிப்பு பெறவோ எதையும் முயற்சித்து அவரின் நட்பை பயன்படுத்தாதபோது எதற்கு பயப்படவேண்டும்? அவரின் மீதான மரியாதை எப்போதும் எனக்குண்டு. இல்லாதுபோகும்போது நான் அவருக்கு கடிதங்கள் எழுத என்ன அவசியம் வந்தது?
பிஎன்ஒய் பன்னாடு தன் பிள்ளை திரையில் ஜொலிப்பான் என்று ஆரூடம் பார்த்தாராமே?
பலருக்கும் பலவிதமான ஆசைகள், நிறைவேறாத பேராசைகள். தன் மனதில், புத்தியில் இருப்பதைப்பேசுகிறவர்கள், செயல்படுத்துகிறவர்கள் பிரச்சனையில்லை. தால் ஏரியில் பயணம்போனாலும், இவர்கள் காவிரி ஆற்றினை நினைத்துக்கொண்டிருப்பார்கள். அழுகிப்போன மனங்கள். இவர்கள் புத்தி என்பது எப்போதும் அடுத்த நுகர்வை நோக்கி திருப்தியுறாமல் ஒவ்வொன்றுக்கும் யாரைப் பயன்படுத்துவது என்று அலைந்துகொண்டிருக்கும்.
ஆயில்ய அகோரியின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒவ்வொருவரைப்பற்றி கருத்து கூறுவதே மோசமான ஒன்று. அதுதான் நம் வேலையா என்ன? அவருடைய வாழ்வை அவர் அனுபவித்து வாழ்கிறார். சிறு சொல் கூட பெரும் காயத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் அவரிடத்தில் உண்டு. தனக்கான ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் வரை இப்படித்தான். பலதையும் அவர் எழுதலாம். ஆணவம், அகங்காரம் என்பார். இந்த உலகத்தில் கால் பதித்திருக்கும்வரை அவையெல்லாம் தேவைதான் என்பேன்.
பிஎன்ஒய் பன்னாடு உதவி இயக்குநர்களிடம் பழகி வருகிறாரே என்னவாக இருக்கலாம்?
அடுத்த பலியாடு அதுதான் என்று நினைக்கிறேன். தனக்கான லாபம் இல்லாத இடத்தில் பன்னாடு இருக்காது. தனக்கு பயன்படும் என்று தோன்றும் யாரையும் விலைகொடுத்து வாங்க இன்று பணம் இருக்கிறது. எழுதுகிற ரொமான்டிக் குப்பைகள் மூலம் யாரையும் எளிதில் இழிவுபடுத்துகிற அழுகிப்போன மனம்தான் அது.
இந்தியன் போலீஸ் அரசியல் விமர்சனங்களில் பொறிபறக்கிறது? பார்த்தீர்களா?
நம் வாழ்வு அதனுடன்தானே பின்னிப்பிணைந்திருக்கிறது. அவர் விருப்பப் பட்ட வாழ்வினை அமைத்துக்கொள்ள சூழல் அமைந்திருக்கிறது. தனக்குப்பிடித்த படங்களைப் பார்க்கிறார். பிடித்த பாடல்களைக்கேட்கிறார். எந்த வேலை செய்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதானே முக்கியம்.
கைக்கட்சி ஆர். எம் தன் எழுத்துக்களை கைவிட்டுவிட்டாரே?
அதற்குத்தான் ஸமீரா போன்ற புள்ளை பூச்சிகள் இருக்கின்றனவே. அவர்கள் அவர் எழுத்தை இந்த நூற்றாண்டின் உன்னத எழுத்து என்று பேசிவருகிறார்கள். அப்புறமென்ன அந்த புலிட்சரை நம்ம பழனியப்பங்கடையில் அடிச்சு தொப்பம்பட்டி கூட்டத்தில இந்த மூணுகரைவேட்டிக்கு கொடுத்துவிடலாம். மனுசன்தான் புள்ளிவிவரத்த காலயிலிருந்தே மனப்பாடம் பண்றாப்பலயே. ஊக்கப்படுத்தி உசுப்பேத்த வேண்டாமா! கொடுத்துவிட்ருவோம். எப்பவாவது யாராவது பையன் ஏதோ ஒரு புள்ளய ஓடிப்போய் கல்யாணம் பண்ணனும்னா கைகாரர வுட்டா வேற யாரு நமக்கு சிக்குவா. அப்ப கடன கழிச்சிரலாம். தெலுங்குல பிரம்மானந்தம்னா தமிழுக்கு நம்ம ஆர்.எம். வாட் எ ஐடியா சார்ஜி.
தீவிரப்புரட்சி தன் எழுத்துக்களை மட்டும் வெளியிட ஏதோ பதிப்பகம் தொடங்குகிறாராமே?
அவர் முடிவு. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. அவரது கதைகள் எந்த தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்பட வேறு வழி என்ன இருக்கிறது? அற்புத சொல்மொழியை தன் உழைப்பில் பெற்றிருக்கிறார். அதில் ஒரு சொல்லை எடுத்துவிட்டாலும், வாக்கியமே செயலிழந்துவிடும். அப்படி ஒரு கட்டமைப்பு.
ஸமீராவின் நண்பர் சொட்டவாலக்குட்டி எழுதிய ஒரு சோறு கதையைப் படித்தீரா?
நான் ஸமீராவின் எழுத்துக்களையே முழுக்க வாசிக்கவில்லை. கதை என்பது அனுபவங்கள் கொண்டு நெய்யப்படுவது. அது தொடர்ந்து திருத்தங்களினால் செம்மை செய்யப்படவேண்டும்.
இலக்கிய நோக்கம்தான் என்ன?
விருதுகள் நிச்சயம் அல்ல. தன்போக்கில் தன்னியல்பாக உருவாக்கிக்கொள்கிறது. அவ்வளவுதான். மக்கா இது ஒன்றும் வரையறை கிடையாது. எதற்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று கிடையாது.