ஸ்காலின் போனில் அழைத்து முச்சந்தியில் எம்ஆர்எப் டயர்க்கடையருகே நிற்கச்சொன்னார். என்னடா இது என்று அங்கே போய் நின்றால் யாருமில்லை. சாலைகளெங்கும் மனிதர்கள். சாமி கும்பிட அவ்வளவு கூட்டம். வெள்ளை தேநீர்சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் தளர்ந்த நடையோடு வந்தார். பெயர் திருநாவுக்கரசராம். விழுப்புரம் என்றார். பெயரை முதலில் சரியாக கவனிக்கவில்லை.
விவசாயம் செய்துகொண்டு வக்கீல் வேலையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தோடு விழுப்புரத்தில் இருக்கிறார் இவர். தொக்கூவை பார்க்க பெரும் ஆர்வம் மூண்டது அதனால் அப்படியே இங்கே வந்தேன் என்று கூறினார். அவருடன் வந்தவருக்கு பாயை விரித்துப்போட அவர் உறக்கமே பாக்கியமப்பா என கண்ணயர்ந்துவிட்டார். தொக்கூ பற்றிய பல்வேறு விளக்கங்களை கேட்டார் என்றாலும் அவர் கண்களில் இருந்த எந்த ஒரு நம்பிக்கைக்கான விஷயத்தையும் நான் பார்க்கவில்லை. வழக்குரைஞரின் எப்போதைக்குமான சந்தேகம் அவரது மனதிலும் இருக்கிறதோ என்னமோ?
புத்தகங்களை பார்த்துவிட்டு பணம் தந்தா வாங்கிப்பீங்களா? என்றார். புத்தகமாகவோ, பொருளாகவோ கொடுத்தால் சிக்கலில்லை என்றேன். பிறகு தொலைபேசி எண்கள் கேட்டுக்குறித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஏதோ ஒரு நம்பிக்கையின்மை அவர் முகத்தில் தலைகாட்டியது. அது முதலிலேயே தெரிந்தது. சரி, போனாப்போகட்டும் தொக்கூ எனக்கு பிடிக்கும் என்றார். அது பற்றிய அறிமுகத்தை எனது ஊரில் ஏற்படுத்துவேன் என்றார். கிளம்புகிறேன் என்றபோது சொல்ல எனக்கு எதுவும் இருக்கவில்லை. சித்தன் புத்தகத்த கொடுத்துட்ட பணத்த வாங்கியிருக்கலாண்டா.. ஆ..ண்டா என்றார். சரிதான்.