"

திட்டமிட்டு கிளம்பும் பயணங்களை விட எதிர்பாராத பயணங்கள் நமக்குத்தருகிற எதனையும் ஒருவித பயம் படபடப்புடன் ஏற்கிறோம் இல்லையா, குஸ்கா அழைத்ததும் அப்படித்தான் நினைத்தேன். பேருந்து வர அரை மணிநேரத்திற்கும் அதிகமாகிவிட, வியர்வை சட்டை, கால்சட்டை என பயணித்து பாதங்கள் வழியே பயணித்தது.

குஸ்கா ஒரு டால்டா டப்பா போல எதுவுமே இல்லாததை புலம்பித்தள்ளிவிட்டு, பிறகு அசட்டுச்சிரிப்புடன் தெலுங்குப்படம் பற்றிப்பேசுவான். அல்லு அர்ஜூனை தெலுங்கிலும், தனுஷை தமிழிலும் பூஜை செய்பவன். பாடல்களில் காதல் தோல்விப்பாடல்களை பலருக்கும் போட்டுக்காட்டி கொல்வது புதுவகை பழிவாங்கல் முறைதானே! கூடவே இவரும் தன் காக்கா குரலால் பல சங்கதிகள், பல ஸ்வரங்களை மீட்ட, ஆரோகண, அவரோகண இசைக்கச்சேரி அந்த இடத்திலேயே தொடங்கும். கிழங்கு தின்ற நாயின் மூச்சிரைப்போடு பாடி, பாலகிருஷ்ணா வராத நடனத்தை வா வா என்பாரே அதுபோல பாட முடியாத பாட்டை பாடி பலரையும் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது அன்னாரது ஹாபி.

அவனது புதிய வண்டியான இரண்டாவது கைமாற்றல் அவெஞ்சரில் பயணம் செய்தோம். வண்டி தாழ்ந்தபடி அமைந்திருந்ததால் பல வண்டிகள் எங்களை விட உயரமாக இருந்தன. லாரிகள் அருகே செல்லும்போது, டயர்கள் நொடியில் என் தெய்வ பக்தியை உச்சத்திற்கு கொண்டு சென்றன. மைலேஜ் 25 கி.மீ கிடைக்கிறது என்றான் குஸ்கா. கைபேசி அழைப்புகள் நல்ல சாப்பாட்டினை ஆனந்தாஸில் சாப்பிட விடவில்லை. கடனை அவனின் அம்மா நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, பாதி சாப்பிட்டிலேயே எழுந்துவிட்டான். அங்கு சாப்பாடு எழுபத்தைந்து ரூபாய். க்ளைமேக்ஸை எட்டுவதில் நம்மை மிஞ்ச யார் உண்டு? அவனுடைய பாயாசத்தையும் நானேதான் எங்கடா பாயாசம் என்று தேடி குடித்தேன். ஏன் பாயாசம் குடிக்கவில்லை என்று அவனுடையதையும் குடித்துவிட்டுத்தான் கேட்டேன். குடிக்கும் முன் கேட்டால் நம்மையும் 20 நிமிட விளக்கம் கூறி மெலோடிராமா செய்து பாயாசத்தை குடிக்க விட மாட்டான். நம்மைப்போலவேதானே நமது நண்பனும். விளக்கம் சொல்லும்போது குடித்தால் ‘நான் முக்கியமா, பாயாசம் முக்கியமா’ என்பான். நிச்சயமா பாயாசம்தான் ஏன்னா சீக்கரம் குடிக்காட்டி கெட்டிரும்ல. சொல்லவா முடியும்?

விளக்கம் கேட்டதற்கே முழு பாயாசமும் செரிமானமாகிவிட்ட ஏப்பம் வந்துவிட்டது. குஸ்கா எப்படிப்பேசுவான் என்றால் நமக்கு தெரிந்த ஒன்றையே தான் புதிதாக கண்டுபிடித்தது போல பேசி அயர்ச்சி ஏற்படுத்துவான். இவனிடம் நண்பனாக இருக்க ஒரே ஒரு தகுதி போதும். அவன் எதைச்சொன்னாலும் காது கொடுத்து கேட்டால் போதும். அல்லது அப்படி நடியுங்கள் அது இன்னும் பிரமாதமாக இருக்கும்.

கோவை பயணம் விலையில்லாது கிடைக்கிறதே என்று போனால் இவன் ‘உளறுவதெல்லாம் லோலாயம்’ நிகழ்ச்சிக்கு டிரையல் ஷோ பார்த்தால் தாங்க முடியுமா?

கரகராஜ் என்று பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தோம். அவர் அசல் திருநீறைப்பூசினால் மாரியம்மன் கோயில் பூசாரிபோலவே இருப்பார். எப்போதும் இப்போதுதான் தூங்கி எழுந்தது போன்ற ஒரு மயக்கமான முகம். அவரிடம் நிலம் குறித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். நான் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணை அவதானித்துக்கொண்டிருந்தேன். அனாடமிபடி இங்கு இரு முயல்கள் விழித்திருக்கவேண்டுமே என்றால் அங்கு சமதளமாக இருந்தது. இடுப்பும், கழுத்தும் எந்த வேறுபாடும் கொள்ளாது இருந்ததைக்கண்டு அதிர்ச்சியானேன். நீலமும், பச்சையுமாக ஒன்றுடன் ஒன்று கலந்த மயில் தோகை நிறச்சுடிதார் கண்ணைவிட்டு போகிறதா என்ன? ஏத்த இறக்கமில்லாத கேஸ்சிலிண்டர் போல ஒரு பெண்ணப்பா! என்று சமுதாயத்திற்கான பெருமூச்சை வெளியிட்டுவிட்டு டூநட்ஸ் பேக்கரிக்கு கிளம்பினோம். அடுத்த கடமை காத்திருக்கிறது போகவேண்டாமா?

என்னுடைய பெயர் கொண்ட அந்தப்பேக்கரி சமையற்கலைஞரை அங்கு சந்தித்தேன். ச்சூ.. ச்சூ மணி அந்தாண்ட போ என்று அதட்ட முடியாது. அவரின் ஆகிருதியான பாடி அப்படி ஒரு விசாலம். சமைக்கறாரா, இல்ல இவரே சாப்புட்றாரா என்று டவுட்டு எனக்கு. மேலே விழுந்தால் மலை விழுந்து மங்கை சாவு நியூஸ் கள்ளக்காதல் பத்திரிக்கையில் கட்டம் கட்டி வந்திரும் பாஸூ. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் அவருக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதைக் கூறிவிட்டு, அது விரைவில் நடக்கப்போகிறதை பெருமையுடன் அறிவித்தார்.

தன் தம்பிக்கான வேலையையும் அங்கு உறுதி செய்துவிடவேண்டும் என ஓவைசி பிரதர்களின் பாசத்தையும் மிஞ்சினார் பேக்கரி மணி.

அதற்குள் குஸ்கா, ரெண்டு சமோசா, ரெண்டு டிராபிக்கோனாவை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு வந்தார். சமோசாவை வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு பேக்கரி மணியை லைட்டாக கவனித்து, முழு கவனத்தையும் அங்கே சமோசா கொடுத்த ஒரு ஒடுக்கு விழுந்த வெளிறிய நிறம் பெண்ணை அங்கம் அங்கமாக பொருத்தம் பார்த்துக்கொண்டிருந்தான் குஸ்கா . அதைக்கவனித்த பேக்கரி மணி என்னையும் அவனையும் கவனித்து உதட்டை 360 டிகிரியில் கடித்தார். பிறகு,

‘’டேய், குஸ்கா ரொம்ப துடிக்காத. ஆயிரம் னா வந்துருவா, வேணுமா என்ன?’’ கேட்க, பரவசம் பெற்ற குஸ்கா அருண் சமோசாவின் மீது அவ்வளவு மெதுவாக வலிக்குமோ என்று சாஸினைத்தடவினான். அப்படியே வாயில் வைத்து உழும்பித்திங்க ஆரம்பித்தான்.

குஸ்காவின் ஆர்வத்தை பார்த்த பேக்கரி மணி ‘’யோவ் அப்படியெல்லா ஆண்டவனயே நேரில் பாத்த மாரி எக்ஸ்பிரசன் குடுக்காத. எல்லாமே கீழ வீங்கிப்போன வேஸ்டுங்கதா, தெரியுமா?’’ ஆனால் குஸ்கா தனி கனவில் இருந்தார். அவர் பார்க்கும் பார்வையில் அந்த ரம்யா எனும் பெண்ணின் உடைகள் தீய்ந்துகூட போகலாம் என்று பயம் எனக்கு ஏற்படத்தொடங்கியது.

‘’டேய் ஏதாவது சாப்புட்றா, அவகிட்ட போய் ஏதாவது வாங்குவோம். எனக்கொண்ணும் பிரச்சனையில்ல’’ என்று எப்போதுமே கூறாத வார்த்தைகளையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான்.

பேக்கரி மணியின் தம்பிக்கு உள்ளே ஏதோ வேலை இருந்ததால் விரைவிலேயே உள்ளே போய்விட்டார். கவர்ச்சிகரமான ஆள் என்று கூறமுடியும். மலர்ச்சிகரமான ஆள் அவர்.

குஸ்கா வின் சோலார் தோழர்கள்தான் இந்த பேக்கரி மணி பிரதர்ஸ். பேக்கரி இவர்களுக்கு கொடுத்திருந்த அறைக்கு இரவு வந்து தங்குவது பின் கேமரா காலையில் ஆன் செய்வதற்கு முன் கிளம்பிவிடுவது குஸ்காவிற்கு பழக்கமாகியிருந்தது.

கோவையிலிருந்து தடதடக்கும் சத்தி பயணம், பின் அங்கிருந்து கோபி பயணம். கோபியிலிருந்து தன்னாசிபாளையம் அருகேயுள்ள நிலம் ஒன்றிற்கு பயணித்தோம். அந்த நில உரிமையாளரான திருமணம் ஆகாத கவுண்டர் ஒருவரோடு சென்றோம். 12 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறவர் என்று நம்பவே முடியாது. இருக்கின்ற சொத்திற்கு ஏற்பக்கூட வீடு இல்லை. பழைய டி.வி.எஸ் சாம்ப் வைத்திருந்தார். அதில் கோபிக்குவரவே ஒரு மணிநேரம் ஆகும்.

நிலம் பார்க்கப்போனபோது, அந்த வண்டியும் போடா வெண்ணைகளா, விட்ருங்கடா என்னை என்று பஞ்சராகி நின்றுவிட்டது. 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் பரப்பில் கிரானைட் கல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா உறவின் முறைகள். யார் நிலத்தை வாங்க முயற்சித்தாலும் பல தடைகள், இடைஞ்சல்கள் செய்து தடுத்து நிறுத்திவிடுகிறார்களாம். மனம் பொருமிப்பேசினார் கவுண்டர். திட சித்தமாக ஒன்றை செய்கிறவர் போல தெரியவில்லை. பல விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது போல. தவிப்பாய் இருந்தார்.

எதிர்காற்று முகத்தில் அடிக்க காதில் ஜிவ் வென காற்று புக கண்ணில் நீர் வழிய செய்த மோட்டார் சைக்கிள் பயணம் இது.

இப்பயணத்தில் சந்தித்த மனிதர்கள் குறைவுதான் என்றாலும் சூழலும், மண்ணும் பலதரப்பட்டவை. பயணத்திற்கு உடல்நலம் மிக முக்கியம். கம்மங்கூழ், கேப்பை என்று குடிப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது என் பரிந்துரை. தண்ணீர் உடலுக்கு ஒத்துவரவில்லை என்றால் அது பெரும்பிரச்சனையை ஏற்படுத்தும்.

டூநட் பேக்கரியில் தின்ற பர்கர், சாண்ட்விட்ச்களில் கோழிக்கறி கலந்திருக்கிறது என்று குஸ்கா சொல்லித்தான் எனக்கு தெரியும். அந்தளவு மசாலா,சேர்மானங்கள் இருந்தன. அதை அவன் நான் தின்று செரித்த அடுத்தநாள் சொன்னான். நான் சொல்லவில்லை, நமது நண்பர்கள் எப்படி இருப்பார்கள் என்று. அது அப்படித்தான்.

நீலநிறச்சட்டை முழுக்க உப்பு படர்ந்துவிட்டது. தலைமுடி முழுக்க வறண்டுவிட்டது. பயணத்தில் அதிகம் நீர் குடிக்காததனால் உஷ்ணவாதம் அதிகமாகிவிட்டது. உணவையும், நீரையும் சரியாக செய்துகொண்டால் எந்தப்பயணமும் வெற்றியே.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book