தன்னலமில்லாத கலைத்தொப்பி மிகச்சிறந்த கட்டிடக்கலை ஆலோசகர். ஒன்றை வடிவமைப்பது குறித்து பலரையும் வருத்தினாலும் இறுதியில் சில்வர் ஜூப்லி நாயகன் என்னமோ, சில்மிஷ பொன்மனச்செம்மல் போல கலைத்தொப்பி கும்பாதான். கும்பா பேசுவதை மிக கூர்ந்த காதுகளைக்கொண்ட ஏறத்தாழ நாயின் செவித்திறன் நுட்பம் கொண்டவர்கள் கேட்க முடியும். அப்படி ஒரு சினிமா கிசுகிசுவைப்போல மிக அருகே முகம் வைத்து பேசுவார். திடீரென உடல் குலுங்கும். என்னவென்று பார்த்தால் அட காமெடிப்பா.. சிரிக்கவேண்டும். நீங்கள் புரிந்துகொண்டு சிரிக்கும்போது கும்பா ஆழ்ந்து உலக சமாதானத்தைக்குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இப்ப உங்க முகம் எப்படியிருக்கும் ஐய்யோ! என்ன மாதிரிதான?
தொக்கூ சித்தர் மாற்றிய தொண்டு நிறுவனம் பற்றிய சந்தேகத்தை கும்பாவிடம் கேட்க முயன்றபோது, அவர் கூறிய பதில் இதுதான். ‘’ செய் அல்லது செத்து மடியணும் புரியுதாய்யா, அப்படி வேல செய்யணும். நம்ம லட்சியத்துக்காக பலர் சாவலாம், ஏன்னா அது அப்படித்தான். எல்லா கேள்விக்கும் இங்க பதிலில்ல. சித்தனோ, நானோ இங்க பெருசா பணம் சம்பாதிக்க போறதில்ல. சோறு இல்லாம சித்தன் ஏ இப்படி சுத்தணும்? நல்ல வேலக்கி போயிருக்கலாமில்ல? சோறு இல்லாம, டிரஸ் கூட இல்லாம பரதேசி மாரி சுத்திட்டிருக்கான். அவங்க அம்மாவுக்கு கேன்சரு, தெரியுமா ஒனக்கு, ஆனா, அவங்களோட அவனிருக்கல, ஏன்….? மத்தவங்க எப்படியோ, ஆனா, நாம ஒத்துமையா இருக்கணும். பள்ளிக்கூடத்த நல்ல முறயில கட்டமைக்கலாம். கொட்டாய் போட்டு வேல ஆரம்பிக்கணும். பிற்கால சந்ததிக்கு நம் பரிசு இதுதான். சித்தன் ஏதாவது வீடு வாங்கீட்டானா, பணம் சேத்தி? பவாவாடீஸ்க்கு எந்த ஒரு வெளம்பரமும் தேவையில்ல, அவங்க பெரிய ஆளுங்க, அவங்ககிட்ட இல்லாததா? ‘’ இந்தப்பேச்சுக்கிடையில் தலை சுத்திப்போவது போல 360 டிகிரியில் ஒரு பார்வை. அப்போது உங்கள் பார்வை சிந்தனை எல்லாமே கிறங்கிப்போன நிலையில் நீங்கள் எதனையும் நம்புகிற அடிமை நிலைக்கு வந்துவிடுவீர்கள். இதனை நைல் நதி அருகே கியாமிஸ் நகரில் பிறந்த அபாதடீஸ் எனும் துறவி உளவியலின் தத்துவ விளக்கம் எனும் நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
‘’அர்ப்பணிப்போட தற்கொலை செஞ்சுக்கிற மனநிலை கொண்ட ஆட்கள்தான் நமக்குத்தேவை. அப்படிப்பட்டவுங்கதா பள்ளியைக்கட்ட முடியும். ஏறத்தாழ தற்கொலைப்படை மாதிரி. தொக்கூ சித்தர் அப்படி பண்ணுனாருன்னா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். 90% தொக்கூ நண்பர்கள் தன்னோட பணம்னு கவலைப்படாம செலவழிச்சு உருவாக்கினதுதான் இது. பவாவாடீஸ் பத்தி போடாம இருக்கறதுமானல அவங்களுக்கு எந்தப்பிரச்சனையும் வரப்போறது இல்ல. இத இருட்டடிப்பா நெனைக்க வேண்டியது இல்ல. தொக்கூ சித்தர் பண்ணுனதுக்கு ஏதோ வேற காரணம் இருக்கும். நம்பிக்கை இழக்காதீங்க. பாத்துக்கலாம். செரியா ‘’என்று இரண்டாவது சிகரெட்டை பிடித்தபடி, ‘அடையாளங்கறதுல நாம எப்பவுமே சிக்க கூடாது’ என்றவர் ஆழமாக புகையை இழுத்து விட்டதின் வளையத்தில் எனது வாழ்கையே சுருளாகி மறைந்தது போல இருந்தது. புதைகுழிக்குள்ள ரெண்டு காலையும் சேத்தி வச்சுட்டம்போலயே என்று உள்ளே நோக்கியாவின் நான்கு வகை அலாரங்களும் ஒன்றுபோல அலறின.
ஜே.கேயின் இரண்டு சொற்பொழிவை ஐந்து நிமிட இடைவேளை கூட இல்லாமல் கேட்டால் எப்படி இருக்கும்? பிரேக் விடலாமே என்று கூட கேட்டுவிட உள்நாக்கு துடித்தது. இன்னொரு சிகரெட் ஆர்டர் செய்தார் பொதுநல கலைத்தொப்பி. இன்னொன்னா, ஒரு சிகரெட்டுக்கே ஒரு மணிநேரத்துக்கும் மேலாயிருச்சே, இன்னொன்னு போனா மாரத்தான் உரையில்ல நடத்துவாப்பல, வயிற்றில் நீராவி எஞ்சினின் பயணம் போகும் சத்தம் கேட்டது. சிகரெட்டோடு, பிஸ்கட்டையும் வாங்கி எனக்கு கொடுத்துவிட்டு, மிகத்தீவிரமான பாவனையோடு சாலையைப்பார்த்தார். அடுத்த பூதம் கிளம்புவது இப்படித்தான். பிறகு என்னைப்பார்த்தார். அப்புறம் 360 டிகிரி பார்வை; டீக்கடை பித்தளை பாய்லர், டம்ளர், அதில் உட்காரும் ஈ, டீ ஆற்றும்போது அதில் பெருகி வரும் நுரை, கடைக்கு வரும் ஆட்களின் பெருவிரல் நகம் முதல் உச்சந்தலை முடி வரை ஒரு அலசல், சாலை, தொப்பியை சரியாக பொருத்துவது, என் சட்டையின் பட்டனைப்பார்த்து விட்டு பேச ஆரம்பித்தார்.
‘’ ரொம்ப காம்ளக்சா யோசிக்காதீங்க, அது ரொம்ப சிக்கலாயிரும். அதிக படிப்பு, அதிக இளைப்பு. யோசிக்கறதும் அப்படித்தான். அது நமக்கு வேண்டாம். நீங்க இத எங்கிட்ட கேட்டீங்க, பரவால்ல, நா கிளியர் பண்ணீர்றன்’’ என்றவர் இருத்தலிலிருந்து இருப்பிற்கு ஒரு பின்நவீனத்துவ காலனிய, மற்றும் சர்லியலிச அம்சங்கள் நொதிக்கும் உரையை நிகழ்த்தினார். எதிரிலிருப்பவரை அடியோடு ஒன்றுமில்லாமல் செய்துவிடும், அடுத்தமுறை யோசிக்கவே கூடாது என்று தோன்றும் உலகப்புகழ்பெறக்கூடிய உள்ளூர் உரை அது.
குறிப்பு:
எதிரிலிருப்பவரை வசீகரிக்க வைக்கும் கண்களைக்கொண்டவர் கலைத்தொப்பி. அதோடு பேசும் வார்த்தைகளும் மென்மையாக கடுமையாக குத்தும் வகையில் பேசுவார். தன்னை எதிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாதது போலத்தெரிந்தாலும், மற்றவர்களை மிக மலினமாக மனதில் எண்ணுபவர் என்பதை தொக்கூ அமைப்பில் இருந்து தன் உழைப்பை, தன் பணத்தை ஏன் தன்னையே அர்ப்பணித்து இன்று விலகி நின்று அமைதியாக வாழும் பல நண்பர்கள் அறிவார்கள். ஆனாலும் கூட பலரிடமும் சித்தனைப்போல அதிக எதிர்ப்புகளை கலைத்தொப்பி சந்திக்கவில்லை என்பதற்கான காரணம் எளியதுதான். நேரடியான அவரது பேச்சுக்கள், சிந்தனைகளை ஆயில்ய அகோரி உட்பட உள்ளது உள்ளபடியே சந்திக்கவேயில்லை என்பதுதான் காரணம். கலைத்தொப்பி தன்னை ஒருவர் சந்திக்கவரும் முன்னே ஆராய்ச்சி புகைப்படம் உள்ளிட்ட சாம்பிராணி கூட்டம் அவர் பற்றிய ஒரு குறும்படத்தை வெகு நறுமணத்தோடு காட்டுவார்கள்.
அன்பிற்காக இரக்கிற கூட்டத்திற்கு அவர்கள் எதிர்பார்க்கும் ஒருவரின் சிறிய புன்னகை கூட அவர்களை வீழ்த்திவிடும் என்பதுதான் இதிலுள்ள தந்திரம். கலைத்தொப்பிக்கு சூடம் காட்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கும் வேப்பிலை அடிக்கும் மகராசர்களே, பாவ மண்ணில் பிறந்த மகான்களே, என்னையொத்த அடிமைகளை பரிசுத்தமாக்கும் கர்த்தா பரிசுதன்களே, ஒன்றே ஒன்றை கூறுங்கள். இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஒரு அமைப்பை விட்டு முன்பு அர்ப்பணிப்போடு பணிசெய்த பலரும் ஏன் விலகிப்போனார்கள் என்ற உண்மையை மனம் திறந்து உங்களால் பேச முடியுமா?
பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்த கலைத்தொப்பி உண்மையில் கர்த்தரின் புறத்தூய்மையை விட அகத்தூய்மை முக்கியம் என்று உணர்ந்துதான் அம்மதத்தினை பின்பற்றுகிறாரா? அன்பை உலகத்திற்கானது என்று வரித்துக்கொண்டு நம்பிக்கையும், அன்பும் கொண்டு துதிக்கும் ஒருவனின் பிராத்தனைக்கு இறைவனுக்கு கேட்கும் என்று நம்புகிறேன். அன்பே உலகத்திற்கானது என்று கூறும் மரியாளின் மகனது வழிகாட்டுதலை பெற தடையாய் நிற்பது அனைத்தையும் வெறுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அகங்காரத்தொப்பிதான். இறைவனின் அன்பை காண கண்களை மறைக்கும் அகங்கார அழுக்கை நீக்கினால்தானே எளியவர்களின் மனம் புரியும். அவர்களிடம் இருக்கும் இறைவனும் தெரியும். நம்மிடம் உள்ள இறைவனைப்பற்றி நமக்கும் தெரியும்.