தொக்கூ புகைப்படம் வீட்டிற்கு வந்த பிறகு இரவு விழித்திருப்பது என்பது மெல்ல பழக்கமாகிவிட்டது என்று வின்சென்ட் கூறிக்கொண்டிருந்தார். புகைப்படம் நேரம் பார்த்து வேலை செய்பவர் அல்ல. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவர் எந்த மனக் கோளாறுகளுக்கும் உட்படவில்லை என்பதுதான்.
ஸமீரா கணினியில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தபோது, புகைப்படம் பேச ஆரம்பித்தார்.
‘’இங்க பாருடா, இந்த போட்டாவல்லா சித்தர் கிட்ட காட்டீராத எனக்கு வேணுமுடா புரியுதா?‘’
‘’ தங்களுக்கு வேணும்னா எடுத்துக்கிட்டு நன்றினு அவரு பேர போட்டுர்றோமுன்னு சொல்றாங்க, வேற என்ன? ’’ என்று சற்று மிதப்புடன் பேசிவிட்டார் வின்சென்ட்.
கிளஸ்டர் குண்டு வெடித்தது. ‘’ நன்றினு போட்டா போட்டோ எடுத்தவனோட வயிறு பசிக்காது. அப்படித்தானடா?’’ உடனே வின்சென்ட் அமைப்பைலிருந்தால் தன் டப்பா இடுப்பில் நிற்காது என்று தனித்தே நிற்க முயற்சித்தார்.
‘’ஏண்டா நீங்கல்லா போட்டோவை ஆயிரம் குறை சொல்லுவீங்க, ஆனா பணம் மட்டும் தர மாட்டீங்க #@******’’ என்று புகைப்படம் சுமார் அரைமணிநேரத்திற்குமேல் வின்சென்டை ஒட்டுமொத்தமாக தனக்கு பணம் தராதவர்களாக நினைத்து கிளறி கிளறி வறுத்தெடுத்தார்.
வின்சென்ட் தணிந்த குரலில் ‘’ எங்கிட்ட பணமிருந்தா புக்குக்கு உங்க படம் தேவைப்பட்டா பணம் கொடுத்து வாங்கிக்குவங்க. ஆனா இப்ப இருக்கறவங்கிட்ட பணமிருக்கற மாதிரி தெரியிலயே பேரத்தான போடணும். வேறென்ன போடறது? என்று கூறியபின், புகைப்படம் சிறிதுநேரம் எதுவுமே பேசவில்லை.
‘’ நா மூணுவேள நல்லா சாப்பட்றவன் தெரியுமா? இன்னைக்கு என்னமோ இவ்வளவு டிரையா இருக்குது? அப்படி கூட சாப்பட்றதுக்கு வழியில்லாம போயிருச்சேன்னு அப்படிபேசிட்டேன். எல்லாமே இயலாமதான, வேறென்ன? யாருகிட்டயாவது கொட்டித்தான ஆவணும்‘’ என்றபடி சிறியதாய் கசப்புவழிய புன்னகைத்துவிட்டு போய்விட்டார்.
குப்பைத்தொட்டிபோல பலவும் வின்சென்டிற்கு மேலே காற்றில் பரப்பதுபோல இருந்தது. இந்த இயலாமையிலிருந்து மனதை மீட்க நானென்ன செய்துவிட முடியும்? நாம் பசிக்கு புதிதானவனல்ல ஆனால் புகைப்படம் தவிக்கிறார் என்று நினைத்துக்கொண்டார் வின்சென்ட். கங்காணி .சி கடலூர் அங்கிருந்து வேதாரண்யம் போய் பின் அங்கிருந்து எங்காவது போய்க்கொண்டிருப்பார். என்னாகுமோ என்று நினைத்தபடியே மலையை எட்டி பார்த்தபடி இருந்தார் வின்சென்ட்.