ஒவ்வொரு முறையும் கலைத்தொப்பிக்காரரின் வீட்டு வாசலில் மனதில் கடும் அழுத்தத்துடன் நின்றிருக்கிறேன். அவரது வாசல் கதவு எப்போதுமே சாத்தப்பட்டிருக்கும். நாற்காலிகள் வெளியே காலியாக கிடக்கும். உள்ளே அவர் பேசிக்கொண்டிருப்பார். நான் உடனே தயக்கம் மேலிட சிறிது நேரம் பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பிவிடுவேன்.
பச்சையம்மன் கோவிலினருகே உள்ள இரு பாலச்சுவர்களில் ஒன்றில் அமர்ந்து மழை வருவது போலான வானத்தை பார்த்தவாறே இருப்பேன். இதயம் அருகே இல்லாத போது எவ்வளவு சத்தமாக பேசவேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சாபம் இருப்பதாக நினைக்கிறேன். கலைத்தொப்பியை எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தன்னை மற்றவரிடமிருந்து தனித்துக்காட்ட தொப்பி அணிகிறார். சித்தர் போல, அர்ப்பணிப்பு என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலே அதற்கானவற்றை அவர் திட்டமிட்டு கூட செய்யலாம் இல்லையா? அவர் மனதில் எதையோ அழுத்தமாக கொண்டிருக்கிறார். ஆனால் அது என்னவென முழுக்க கண்டறிய முடியவில்லை.
ஒருவரின் சிந்தனை வழியே சமூகத்திற்கான சிந்தனை உருவாகிறது. பின்னாளில் அது ஒரு குழுவான செயல்பாடாக மாறுகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பு பிறகு தன்னைக்காப்பாற்றுவதற்காக தனிப்பட்ட மனிதர்களை தியாகம் செய்யத்தயாராகிறது. அது இன்றுவரை நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். தன்னலமில்லாது செயல்பாட்டை கொண்டுசெல்ல தலையில் தொப்பி அணிவது மட்டும் போதாது. அதைத்தாண்டிய விசாலமான மனதை நாம் பெறுவது என்பது அனுபவங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பெறலாம்.