"

இன்று என்னை பரதேசி என்று கூறி கடுமையாக வெறுக்கும் தம்பதி சமேத உறவொன்று அன்று படுக்கையில் தனியாக காய்ச்சலில் கிடந்தபோது கஞ்சியை வாயில் ஊட்டிவிட்டு, அதன் பின் அந்த நல்லுள்ளம் கூற கூற எழுதியது.

 

 

இறந்தவீடுகள் தொடக்கம்

பாழடைந்து பூட்டிக்கிடக்கின்ற

வீடுகளில் கோட்டான்கள்

கிசுகிசுக்கும்

வௌவால் எச்சங்களும் தவிர ஒரு நூற்றாண்டு

தலைமுறையின் மௌனம் வேரோடிக்கிடக்கிறது.

காரை பெயர்ந்து கரையான்கள்

அரிக்கப்பட்ட கதவுகளைத் தாண்டி

மேல்நோக்கி வளரும் கொடிகள்

உள்ளே தலைநீட்டிப் பார்க்கின்றன.

கனத்த மௌனம் அந்த வீடுகளை

கடக்கும் போதெல்லாம் மனதில் குவிகிறது.

யாருமற்ற தனிமை அறைகளில் வெப்பக்காற்று உள்நுழைந்து

வெளியேற முடியாது தவிக்கிறது

எல்லாம் தொலைத்துவிட்டதன்

எச்சமாய் உடைந்த சாளரங்கள்

தெருநோக்கி நீண்டிருக்கின்றன.

யாருமற்ற வீடுகளில் ஏதுமில்லை

என சொல்லிவிட முடியாது.

வாழ்ந்து கெட்டவர்களின் விம்மல்கள்

அங்கு மிச்சமிருக்கும்

இன்னும் காலம் காலமாய்….

  • – சுந்தரகுமாரன்

 

தற்கொலை வீடுகளின் முடிவு

விரிசல் எய்திய வீடுகளில்

உயிர்கள் உறைந்திருக்கும்

கவனியுங்கள்…

சுவடுகள் அழிந்த வீடுகள்

சுகதுக்கங்களை பத்திரப்படுத்தும்

காலத்தின் படிமங்கள்.

யாரும் கூறாமலே

பறவையின் எச்சத்தில்

மரம் வளர்க்கிறது

இறந்த வீடொன்று…

  • – ஷான் .ஜே

மருதாணி இரவுகள்

மாலைநேரம் மருதாணி மரம் தேடி

ஓடுவோம் இலை பறிக்க…

பக்குவங்கள் பலரும் கூற

ஆட்டுரலில் மனதின் இடிபடும் இலைகளில்

களிப்பு சாறாய் பெருகும்

சோறு தின்று விட்டு காத்திருக்க

குப்பி குப்பியாய் கைவிரல்களில்

பூச நாசியில் மணம் ஏற, குளிர் மனதில்

பரவும்.

நல்ல சிவப்பு அதிர்ஷ்டமாம்…

 

மாநகரத்தில் சிவப்பு ஏறியும் கைகளில்

இல்லவே இல்லை அப்பத்தா இட்ட

உயிர்ப்பின்

மருதாணி இரவின் நேசவாசனை

  • – சுந்தரகுமாரன்

 

 

 

 

கதை சொல்லட்டுமா?

கதை கேட்டறியா

குழந்தைகளின்

கனவுகளில் வருவதில்லை

தேவதைகள்

2

உள்ளார்ந்த துயரங்களையெல்லாம்

உதறி எறிந்துவிட்டால்

ஒன்றுமே இல்லாமல்

போய்விடுமென்கிற பயம்தான்

அப்படியே வைத்திருக்கிறது

ஆறாத காயங்கள் சிலவற்றையும்

 

 

 

 

 

என்ன செய்ய முடியும் நான்?

எனது நம்பிக்கைகளை உடைத்தெறிவது

குறித்து

ஒரு துளி வருத்தமில்லை

உன்னிடம்.

எனது புன்னகைக்கு

பின்னிருக்கும் வலி

ஒருபோதும் புரியப்போவதில்லை

உனக்கு.

  • – ஜோதி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book