கால்கள் நாவலுக்காக அபிலாஷ் சந்திரன் யுவபுரஷ்கார் விருதினை வென்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்ருதாவில் அழகிய சிங்கரின் எதையாவது சொல்லட்டுமா என்ற தொடருக்குப்பின் படிப்பது அபிலாஷின் அறிந்தும் அறியாமலும் தொடர்தான். பிறகு ராம் முரளியின் ஆங்கில திரைப்பட இயக்குநர்கள் குறித்த தமிழ் மொழிபெயர்ப்பை வாசிப்பேன்.
அபிலாஷின் எழுத்துக்கள் தனியாக எந்த புத்தகமாக அவருடையதை வாசித்தது இல்லை என்றாலும், அம்ருதாவை தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன. அவை இயல்பானதாக, ஆழமானதாக இருக்கின்றன. வசீகரித்து சொல்லுக்குள் சிக்கவைக்கின்ற தன்மையை அவை மாறாது கொண்டிருக்கின்றன என்பேன். வேலை கிடைக்காது இருக்கும் மனநிலை குறித்து எழுதிய கட்டுரையை என்றுமே மறக்க முடியாது. விதைக்க காத்திருக்கும், விதையை எதிர்ப்பார்த்திருக்கும் நிலம் போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்.
மிக அந்தரங்கமாக மனதோடு உரையாடும் கட்டுரைகள் இவை என்பேன். புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் இரா. நடராஜன் அவர்களும் விருது பெற்றிருக்கிறார். ஆனால் அவரோடு விருது பெற்ற அபிலாஷ் பற்றி ஒரு வரி அவர்களின் இதழில் எழுதவில்லை. இதுதான் அவர்களின் நேர்மையான வழிமுறையா என்ன? அவர்களும் குழு வாதத்தில் சிக்கிவிட்டார்கள் போல. காலம் அப்படி வேறு என்ன சொல்வது?