"

பேப்பர் பையன் எப்போது ஸமீராவிடம் பேசினாலும், ஸமீரா முன்பு என்றோ உளறி வைத்தோ எந்த புத்தகத்திலோ கடன் வாங்கி சொற்களை கூறி அப்பப்பா.. அடடடா கூறுவது அவருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிடுகிறது. அவனோடு பேசுவதற்கு அவர் பெரும் பிரயத்தனங்களோடு தனக்கு இல்லாத நம்பிக்கைகளையெல்லாம் திரட்டி சுயமுன்னேற்ற பேருரைகளை இரண்டு மூன்று மணிநேரத்திற்கு நிகழ்த்திவிடுகிறார். அவற்றை புத்தகமாக போட்டால் என்ன என்று கேட்டபோது, சீரகத்தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். வேறு கேள்விகள் நம்மிடம் என்ன இருக்கப்போகிறது?

அவனுக்கு அண்மைய நிகழ்வுகள் எதுவும் உவப்பானதில்லை என்று ஸமீரா நினைக்க பல நிகழ்ச்சிகள் காரணமாக உள்ளன. முதலாவது, அவனது தங்கையை காதலிக்கும் பையன் வீட்டார் கல்யாணத்திற்கு அவசரப்படுத்துகிறார்கள். பே.பையனுக்கு கல்யாணச்செலவுகளை தாங்கும் சக்தியில்லை. இன்னும் வேலையும் நிச்சயமாகவில்லை. ஸமீராவிற்கு இந்த பொறுப்புகள் குறித்து பெரும் மனவிலக்கம் ஏற்பட்டுள்ளதை எங்கள் பத்திரிகை உளவுப்பிரிவு கண்டறிந்துள்ளது. பாருங்கள். இந்த மாலையில் எங்கேயிருப்பார் தெரியுமா? கூழாங்கல் வீட்டினருகில் பச்சையம்மன் கோயில் பாலத்திட்டில் உட்கார்ந்து காட்டை பார்த்துக்கொண்டு இருப்பார். வானத்தை பார்த்து புலம்புவார். எதுவரை போலீஸ்காரர்கள் வந்து பொடனியில் போடும்வரை மட்டுமே.

இதுவரையிலுமான அனைத்து பிரச்சனைகள் சிக்கல்களை அவனேதான் தீர்த்துக்கொண்டிருக்கிறான். இப்போதும், அவனுடையதை அவன்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும் என ஸமீரா ஜே.கேயையும் மிஞ்சிய அறிவுரைகளை அள்ளிவிட்டார். எனக்கு ஸமீரா பேசுவது கனவில் ஏதோ வானத்தில் குரல் கேட்பது போல் விளங்குவதே இல்லை. ஆனால் குடிபோதையில் இருப்பவன், ரெண்டு பொண்டாட்டி கட்டினவன் என்று சிக்கல், சிரமம், கஷ்டம், கந்தக ரசாயனம் பூசுபவன் முதற்கொண்டு இந்த ஆளிடமே யோசனை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவரோ, கெடச்சிது சான்ஸ், அள்ளிவுட்றா பழனிச்சாமி என்று பேசுபேசுஎன பேசுகிறார்.

–     உள்ளூர் அசல் செய்திக்குறிப்பு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book