தங்கமீன்கள் அப்படி இப்படி என்று பல்வேறு கருத்துக்கள் கிளம்பியிருக்கின்றன. படத்தினை சீர்குலைக்க பகடன் உள்ளிட்ட பல ஊடகங்களும், கூளமாதாரி எழுத்தாளர் முதற்கொண்டு போட்டி போட்டனர். ஆனால் படம் எப்படியோ வாய்மொழி விளம்பரத்தால் காப்பாற்றப்பட்டுவிட்டது. தேசிய விருதும் பெற்றுவிட்டது. இப்போது எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள் இந்த வெகுஜன சினிமா விசுவாசி விமர்சகர்கள்.
பிம்பங்களை எப்படியும் புரிந்துகொள்ளமுடியும் என்பதுதான் திரைப்படத்தின் பலமும், பலவீனமும். தங்கமீன்கள் படத்தின் திரைமொழி குறித்து பேசும் திரைவிமர்சகர்கள் ஏன் தளபதி படத்தின் மேன்மைகள் குறித்து ஏதும் கவலைப்படாமல் மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள். தங்கள் இதழுக்கு பேட்டி கிடைக்காது, புகைப்படங்கள் கிடைக்காது என்றா?
எவ்வளவு இமாலய விஷயங்களைக் குறியீடாக கொண்ட படங்களை ஒருவன் இயக்கினாலும், படம் பார்ப்பவனின் அனுபவம் பொருத்தே அதிலுள்ள விஷயங்கள் உள்வாங்கிக்கொள்ளப்படுகின்றன. அதுதான் நிதர்சனம். என்னதான் விமர்சனம் எழுதினாலும், அது எழுதுபவனின் அனுபவத்தை பொறுத்த கருத்து மட்டுமே. அனைவருக்கும் பொருந்தும், பொருத்தமான கருத்து ஒன்றை உருவாக்க முடியாது.
தங்கமீன்களாகிவிடுவது குறித்து கல்யாணி செல்லம்மாவிடம் ஏன் அப்படிக்கூறுகிறான் என்று கேட்கிறார்கள். பதில் இப்படியும் கொள்ளலாம்.
எந்த குழந்தையும் தன் கஷ்டங்களை அறிய தகப்பன் நிச்சயம் விரும்புவதில்லை. இன்றும் எத்தனை பேர் தன் சிரமங்களை தங்கள் குழந்தைகளிடம் பகிர்கிறார்கள்? விமர்சிப்பவர்கள் தர்க்கமாக குழந்தைகளிடம் ஏன் அதனைக்கூறக்கூடாது என்று கேட்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஏன் சிறுவயதில் அவமானங்களை, துயரங்களை பயிற்றுவிக்கவேண்டுமா என்ன? அவள் தன் கனவு உலகத்தில்,ஏன் சில ஆண்டுகளாவது வாழக்கூடாது? அவள் வாழ்க்கை அவள் தேர்வில் அமைவது நல்லதுதானே! செல்லம்மா எதுவுமே அறியாதவள் அல்ல. பள்ளிப்பாடங்களில் சுமாராக இருக்கலாம். எல்லாவற்றையும் தன்போக்கில் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்கிறாள். இந்த சமூகத்தில் கேள்வி கேட்பவரை யாருக்கு பிடிக்கிறது? உடனே உட்காரவைத்துவிடுகிறோம். தவிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம்.
தங்கமீன்கள் தன் பெண்ணை விரும்பும் வறிய தகப்பனின் கையாலாகத்தனத்தை, பணமில்லாத தரித்திரத்தை பேசுகிறது. அதோடு கற்ற அறிவுஜீவிகள் முன்முடிவுகளோடு செல்லம்மாவை அணுகி, முட்டாள் என்று அவளது தாத்தா உள்பட முடிவிற்கு வர, 12 வது படித்த கல்யாணி அவளுக்கு ஏற்றவிதத்தில் வன்முறையே இல்லாமல் பாடம் கற்றுத்தருகிறான் என்பதுதான் இங்கே முக்கியமானது. செல்லம்மா மீது அனைவரும் அவளின் மீதான சமூகத்தின் பார்வை, விமர்சனத்தை கண்டு தாய் உள்பட கோபமுறும்போது கல்யாணி அவளை பரிவாக அணுகுகிறான். நிகரற்ற அன்பு அனைத்தையும் ஏற்கிறது. யாரையும் புறக்கணிப்பதில்லை. பொருட்களின் வழியேதான் ஒருவரின் அன்பு கவனிக்கப்படுகிறது என்ற நிர்பந்த உலகத்தில் ஒரு விளம்பரத்தில் காட்டும் நாய் ஒன்று செல்லம்மாவின் கவனம் ஈர்க்கிறது. அப்பாவிடம் அதை வாங்கிவர கூறுகிறாள்.
குழந்தைகளின் உலகம் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ஏன் தற்போதைய நமது வாழ்க்கை பாலைபோல சுடுகிறது, தகிக்கிறது. ஏனெனில் அனைத்தையும் அடக்கிக்கொள்கிறோம், ஆச்சர்யப்படுதலை தவிர்த்துவிட்டோம். நிகழும் அனைத்தும் சாதாரணம்போல சலனமில்லாத கண்களால் பார்த்து பழகுகிறோம். நமது உறவுகள், ஆசிரியர்கள் தங்களது குறுகிய, சூனியமான அறிவால் நமக்கு பழக்குவது அதைத்தானே?
செல்லம்மாவிற்கு பெரிய பொருட்கள் தேவையில்லை. அவளின் பின்னாளைய வாழ்வில் தன் தந்தையின் வெப்பம் மிகுந்த உள்ளங்கைச்சூடு தன் முதுகில் இருப்பதை என்றும் நினைத்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னில் நினைவுகள் மூலம் நிரம்பி வழியும் தகப்பனை பின்னாளில் நன்றியாக நினைத்துக்கொள்வாள். அதோடு. அவன் சைக்கிளை, தங்க மீன்களை, தன்னை தகப்பன் எப்படி சூடுதாங்காமல் தன் கால்களில் அவள் கால்களை தாங்கிக்கொண்டான் என்று உணருவாள். அதற்கான வாய்ப்பை கல்யாணி தன் வாழ்வில் வழங்கினான் என்று ஏற்படும் குற்றவுணர்வுகள்தான் இந்த விமர்சகர்களை குறுகுறுக்க வைக்கிறதோ என்னமோ?