குக்கூவிற்கு எதையும் அறியும் திறமை உள்ளது. அகோரி, போலீஸ் இருவரின் பேச்சு தன் பழையகாலத்தை பற்றியதாகத்தான் இருக்கும் என்று கண்டறிந்தபின் இரண்டு மூன்று நாட்கள் அதைப்பற்றி பேசி ஏதாவது தகவல்களை அவரது சிஷ்யன் போல கொக்கி போட முயன்றார். ஆனால் ஸமீரா எதுவுமே பேசவில்லை.
குக்கூ தாம்பூலப்பை கொடுக்க திருச்சி சென்றிருக்கிறார். துவைத்த வேட்டியில் ஒன்றைக்கட்டிக்கொண்டு ஓடியவர் இன்னும் வேட்டியைத்துவைத்திருக்க மாட்டார் என்பது ஆவேசகருமாரியம்மன் தலைமேல் ஆணையாக உண்மை. வாடகைப்பணம் தருவதற்கு காலை 10 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து வந்துவிடுகிறார் வீட்டு முதலாளியான முன்னாள் பொதுப்பணித்துறை. வாடகை எங்களிடம் கேட்க மட்டும்தான் வாயே திறக்க அனுமதி உண்டு. அவர் சம்சாரம்தான் அங்கே ஸ்டெபிலைசரை கருக்கும் ஹைவோல்டேஜ் உயர்மின்னழுத்தக்கம்பி மின்சாரம். அம்மணி பேச ஆரம்பித்தால் அண்ணாமலையாரே திருவண்ணாமலையிலிருந்து வேறு தலத்துக்கு போய்விடுவார் என்றால் பாருங்களேன். என் காதின் பொங்குமுடிகள் கூட கருகி உதிர்ந்துவிட்டன என்றால் பாருங்க பாஸ்… அம்புட்டு பேச்சும் அத்தன கோவமப்பா! ஆட்டோ வால்யூம் வேலை செய்யாதது அவர்கள் வீட்டு டிவியில் மட்டுமல்ல என்று அந்த குந்தாணி வாயிலும்தான் என்று கங்காணிச்சித்தன் சொன்னார்.
தினமும் காலையில் 11 மணிக்கு விழா நாள் பட்டிமன்றம் போல மாறாமல் தொடங்கும் அம்மணியின் ஒப்பாரிப்பாட்டு பக்கத்து வீட்டு பெண்ணிடம். விருபாக்ஷி குகையில் தியானம் செய்பவர்களுக்கே வேப்பிலை பூசை நடத்தியதுபோல் இருக்கும்.
தன் இரு மகள்களின் போக்கு குறித்து பேச ஆரம்பித்தால்… என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என லட்சுமியே கூறினால் தான் நிற்கும்போல.