"

கையில் ஏந்துகின்ற நொடியிலிருந்து தேநீர்க்கோப்பைகள் நம்மை உரையாட வைக்கும் வசீகரம் பெற்றிருக்கின்றன. அவை தீர்ந்து விடும் கடைசி நேரம் வரை நம்மை வினோத மனநிலையில் சஞ்சரிக்க வைக்கிறது இல்லையா? தேநீரின் சுவையே கடைசி துளி சர்க்கரை நாக்கின் சுவைமொட்டுக்களில் இனிப்பாக கசிந்து உள்ளிறங்கும் பொழுதுதான்.

யாரு இந்த கும்சா?

இதுபோலத்தான் ‘பன்டிவி’ போகனை சந்தித்ததும் நிகழ்ந்தது. அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கும்சாவைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் அவரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவவேண்டும். அப்படி சிறந்தவர்களாகயிருந்தால் மட்டும்தான் அவர்களை அவர் நண்பராக, நட்பாக வைத்துக்கொள்ள சம்மதிப்பார். இன்றுவரையிலும் அவரின் உறவுகள் பொருளாதாரம், இலக்கியம், ஈய இரும்பு உள்ளிட்ட இதரவற்றிற்கு என தனித்தனியாக ஒரு கூட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களாக தன் மனதில் வைத்திருக்கிறார். அவர்களை எந்த சமயத்திற்கு எப்படி பயன்படுத்தவேண்டுமென்று அவரே அறிவார்.

இயக்குநர் ‘பன்டிவி’ போகன்

இயக்குநராக பன்டிவியில் பணிபுரிந்து தற்போது திரைப்படம் எடுக்க முழுமுயற்சியாக முயலும் ஒரு நாளைய வஸ்தாது இயக்குநர் இவர் என்று அவரும் நம்புவதால் நானும் நம்பவேண்டிய கட்டாயம் உண்டாகிவிட்டது. சாத்தூர் காபிக்கடைக்கு அவர் வருவதாக கூறியதால் அந்நேரத்திற்கு நான் எந்த வரங்களும் பெறவேண்டியில்லாததால், உடனே கும்சாவோடு கிளம்பினேன். சிரித்தமாதிரி முகத்தை கண்டிருப்பீர்கள். ஆனால் எப்போதுமே அப்படியிருக்கும் ஒரு முகத்தை பார்க்கவேண்டுமெனில் மயிலாப்பூர் பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாத்தூர் காபிக்கடைக்குத்தான் வரவேண்டும். தூங்கும்போது கூட சிரித்தபடியாக இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன். நல்லதுதான். அங்கு நின்றபோதுதான் ‘பன்’ போகன் தோளில் பையோடு மிகவும் பதற்றமான உடல்மொழியோடு வந்து சேர்ந்தார். இதோ கோபப்பட்டுவிடுவேன் என்று கூறிவிடும் அளவு உணர்ச்சி பொங்கிய நிலையில் அவரின் முகபாவங்கள், உடல்மொழி இருந்தன.

கும்சாவிற்கு புகழைச் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசையிருந்தாலும், தற்போது தன் மூன்று வேளை உணவை கேஎப்சியில் சாப்பிடும் அளவு கணிசமாக பணம் ஊதியமாக பெறுவதால், தூக்கம் வர கதைகளைப் படிப்பதோடு சரி, மற்றபடி மன்மத சஞ்சீவி தளங்களை தேடியபடி கைபேசியில் அலைவதுதான் அவருக்கு மிகப்பிடித்தமானது.

 

 

 

சீஃப்ரூட் இயக்கத்தில் ஒரு வன்கொடுமை

அப்போது ‘ஸ்ட்ரெய்ட் ஸ்டேண்ட்அப்’ என்ற கடல்பழம் இயக்கிய அதிபயங்கர படம் வந்திருந்தது. கும்சா ஏதோ தண்டனையைத் எனக்குத்தர எண்ணியிருப்பார் போல அழைத்து சென்றுவிட்டார். கூடவே நாட்டிற்கு நல்லபடம் பண்ண நினைக்கும் து.இ ஒருவர் தன் இளம் மனைவியோடு வேறு. இயக்குநர் கடல்பழத்தின் படத்தைப்பார்த்து சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் அதிர்ச்சியாகி விட்டன. படத்தின் வசனங்களுக்கிடையே நாமே ஏதோவொன்று பேசி ஒப்பேற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை.

எங்கள் படம்பார்த்த அனுபவத்தைக்கேட்ட பன்போகன் கடுமையாக சீற்றம் கொண்டு ‘’ பாத்தீங்களா கும்சா கடல்பழம் பண்ணுனத, குப்பை சார் படம் ஒண்ணுமில்ல. ஊழல், ஊழல்ங்கிறான் அதுதாம் பிரச்சனையா என்ன இப்ப? ’’ நிதர்சனம். எனக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது.

கும்சா உணர்ச்சி பீறிடும் நிலைகளை சுலபமாக சமாளிப்பார். மெல்லிய சிரிப்பால் பதில் கூறாது தேநீரை உறிஞ்சினார். கண்களை சுருக்கி விரித்தபடி இன்று இதைவிட மோசமான பொழுது அமையாதுபோல என்று யோசித்தார்.

‘’ அண்ணா எனக்கென்னமோ கடல்பழம் மைக்கிலே நேரடியாக நம்மோட பேசறமாரி இருக்குது. உங்களுக்கு எப்படி?’’ என்றேன். சுனாமியை தேங்காய்ஒலை எப்படி தடுக்கமுடியும்! தன் நண்பனான கும்சாவிற்கு மண்டை கொள்ளாத அளவு சினிமா அறிவை தேநீர் முடிவதற்குள்ளாக புகட்டிவிட பன்போகன் காலம் நிர்ணயித்ததுதான் அபாயமாகிவிட்டது. காதில் நுரை தள்ளிவிட்டது கும்சாவிற்கு.

‘’ நீங்க சொல்லுங்க கும்சா, நாஞ் சொல்றது பொய்யா? ’’ என்றவரை எதுவும் புரியாமல் கடைவீதியில் சென்ற ஒரு பெண்ணின் புட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கும்சா ‘’ இயக்குநரு நெறயா விஷயம் சொல்றாருங்க, படம் ஓடீரும் ‘’ என்று போகிற போக்கில் சொல்ல, பன்மோகன் மூக்கு விடைத்துவிட்டது.

‘’ கும்சா என்ன நீங்க கார்ப்பரேட்டாயிட்டீங்களே தல ஒரு மயிரும் அந்தாளு செய்யுல. 22 கோடி ரூபாய் செலவு எவ்வளவு வரும் சொல்லுங்க பாப்போம்? ‘’

கும்சா மிகச்சிக்கலான கட்டத்தில் என்னைப்பார்ப்பார். விரைவீக்கம் வந்தவன் சிறுநீர் போக பழனிமலை ஆண்டவனிடம் கூட வேண்டிக்கொள்ளப் போவான் இல்லையா?

‘’ நஷ்டமெல்லா ஆவாதுங்க, சம்பாரிக்கறக்கு சினிமாவுல பல வழி இருக்குது ‘’ கேள்வியும் பதிலுமாக பன்மோகனே கூறிவிட்டு, ஆகா இங்க ஒரு கேரக்டர் என்று என்னைப்பார்த்தார். ‘’ ஆமா படத்துல உங்களுக்கு என்ன புடிக்கல அதச்சொல்லுங்க ‘’

கும்சாவின் கோப்பை வேகமாக காலியாகிக்கொண்டிருக்கிறதை உணர்ந்தேன்.

‘’ ஐ.டி பீல்டே வேலைக்காக மீசையை வழிச்சுக்கற ஆளுக. அதே சமரசம்தான? அப்பறமா டி.வி மூலமா பெரிய புரட்சி பண்ணமுடியும்னு சொல்ல முடியாது. அரசாங்கம் நெனச்சா என்ன வேணுனா பண்ணமுடியும். செயற்கைகோளு மூலமாத்தான டிவி ஒளிபரப்பாவுது. அத நிறுத்தீர முடியாதா என்ன? ஊழல் பத்தி எடுத்த இந்தப்படம் விளக்குமாறு கட்சிக்கு வேணா உதவலாம். அதத் தாண்டி பல பிரச்சனைகள் இருக்கற நமக்கு பெரிசா ஒண்ணும் இல்ல ’’

தன்னை விட அதிகமாக பேசும் ஒருவனைக்கண்ட பன்போகன் திகைத்தபடி ‘’ நீங்க நெறயா படிக்கறீங்க, அதான் ‘’ என்று பிரச்சனையின் ஆணிவேரைப்பிடித்துவிட்ட திருப்தியோடு சிரித்தார். தன்பேச்சை கேள்விகளில்லாமல் கேட்கும் ஒருவரை விரும்புகிறாரோ என்னவோ என்று சந்தேகமாக இருந்தது. கும்சாவிற்கு இருந்த முன்னிலையே அதை நிரூபித்தது.

செரிமானத்திற்கு தேநீர் நல்லதா?

அறுபத்து மூவர் திருவிழா சமயம்தான் அவர் வந்திருந்தது. கும்சா ஆத்தாடியோவ் என்று அமெரிக்காக்காரன் நிறுவனத்திற்கு வேகமாக கிளம்பிப்போக, நாங்கள் சிறிது நேரம் அறையில் பேசிக்கொண்டிருக்கும்போது தன் கதையைக்கூறட்டுமா என்றார். நான் யதார்த்தமாக ‘’ ஒரு டீ குடிப்போம். கத நல்லா செரிமானமாக வேண்டாமா? ஈஸியாக இருக்கும் ‘’ என்று கூற பன்மோகன் முகத்தில் எரிந்த பிலிப்ஸ் எல்இடி பீஸ் போனது அப்போதுதான். அப்புறம் கதை பற்றி பேசவேண்டுமோ! மனுசனப்பா அவன். சர்க்கரை பொங்கலை வாங்கித்தின்றபடியே மயிலை குளத்திலிருந்து லஸ் போய் பஸ்ஸில் அனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book