"

தொக்கூ என்ற அமைப்பில் பணி செய்ததாக கூறியதும், ஆயில்ய அகோரிக்கு உடலே தூக்கிவாரிப்போட்டது. வேண்டாம், அதிலிருந்து விலகிவிடு, இடுப்பில் இருக்கும் கோவணத்தை அடிக்கடி பார்த்துக்கொள் என்று பல மொழிகளில் பேசி, புரியாதவற்றிற்கு சப்டைடில் போட்டார். இந்தியன் போலீசோ, உயிரோட வந்தா பாத்துக்கலாம் என்று அக்மார்க் குளோசப் சிரிப்பை உதிர்த்தார். அன்றைய நிகழ்ச்சி நிகழும்வரை அந்த வார்தைகளுக்கு உயிர் இருக்கும் என்று நம்பவில்லை.

வைல்டு ஸ்கூல் தொடங்க 6 ஏக்கர் நிலம் பதினெட்டு லட்ச ரூபாய் பணத்திற்கு மிக நேர்மை, அர்ப்பணிப்பு, சேவை, மாற்றம் ஆகியவற்றை முழு உடலாக, ஆன்மாவாக கொண்டு வாழும் கலைத்தொப்பியின் பெயரில் வாங்கப்பட்டது. இல்லையென்றாலும் அவரே தன் சாம்பிராணிக்கூட்டத்தின் மூலம் சேர்த்திக்கொள்ள வற்புறுத்துவார். கலைத்தொப்பி தொக்கூவில் ஒண்டி வாழும் பரதேசி ஒருவனுக்கு தன் வீட்டு வாசலில் வைத்து ஒருமுறையும், பின் உணவகத்தில் ஒருமுறையும், உணவிட்டிருக்கிறதோடு, அவனுக்கு நூறு ரூபாயையும் வச்சுக்கோ என்று பெருந்தன்மையோடு ஈந்திருக்கிறார்.

தன்னலமில்லாத கலைத்தொப்பி இருத்தலிலிருந்து இருப்பிற்கு என தொடங்கும் பேருரையையிலிருந்து நம் சிந்தனையை மீட்க இரு வழிமுறைகளை கையாளவேண்டும் என அனுபவித்தவரான ஸமீரா நமக்கு ஒரு சில டிப்ஸ்களை கொடுக்கிறார். என்னவாம்?

சேரில் நம்மை உட்காரவைத்து அவர் பேசத்தொடங்கிவிட்டால், முக்காலியில் ஒருவரை உட்காரவைத்து அவர் உடலின் விதைகளை கீழே தணிக்கச்செய்து புவிஈர்ப்பு விசையோடு இணக்கமாக செய்து, சிறுசிறு கற்களை கரடுமுரடாக தேர்ந்தெடுத்தது, வைத்து கட்டிய சிறு கைக்குட்டைத்துணி அல்லது கோணிச்சாக்கு சிறியது வைத்து முக்காலியின் கீழே விதைகளை நோக்கி வேகமாக வலிவு கொண்டு விசிறினால் விதைகளை தணித்திருப்பவனுக்கு எப்படி ஒரு சுகானுபவம் கிடைக்கும்! அப்படித்தான் இருத்தலிலிருந்து இருப்பிற்கு சென்று அங்கிருந்து அடுத்ததாக இறப்பிற்கு நம்மை வழிநடத்தும் தற்கொலைக்குத்தூண்டும் கலைத்தொப்பியின் பேச்சும் மெல்ல இருத்தி இறுக்கும் என தன் டயரிக்குறிப்புகளில் நாளில்லாமல் எழுதி வைத்திருந்தார் தொக்கூ அமைப்பின் முன்னாள் பலியாடு ஒருவர்.

வேதனையைத்தணிக்க இரண்டு டம்ளர் நீரை சீரான இடைவெளியில் அருந்திவிட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தேங்காயை இருவேளை உண்டுவரவேண்டும் என்று கூறிய ஸமீராவிடம் எப்படி நீங்கள் இவ்வளவு சரியாக தேங்காய் மட்டும் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, சித்தன் கலைத்தொப்பியை சந்தித்துவிட்டு வருகிற எல்லாப்பொழுதுகளிலும் அவருக்கு மலம் குடலில் கட்டிக்கொள்ளும். உடனே என்னை தேங்காய் வாங்கிவரச் சொல்லுவார். அதைத்தின்று இருவேளை காற்றை மட்டும் உண்டு சமுதாயத்திற்கான அடுத்த உழைப்பு, பலிகொடுக்க பலியாடு தேடி அலைவதற்கான சக்தியை அதன்பின்னே பெற்று குதித்தெழுந்து கிளம்புவார் பங்கர் அண்ணா வீட்டிற்கு. எனக்கு அப்போதெல்லாம் தெரியாது அவர் கலைத்தொப்பியின் இருத்தலிலிருந்து இருப்பிற்கு, பிறகு இறப்பிற்கு வழிநடத்தும் பேருரையைக் கேட்டுத்தான் அவருக்கு மலம் கட்டி சாகும் நிலைக்குச்சென்று வருகிறார் என்று நான் அப்பேருரையை ஒருநாள் கேட்கும் வரையில் நம்பவில்லை. ஒரு விலையில்லா தேநீருக்காக உயிரை பணயம் வைத்து விளையாடிய விளையாட்டு அது என்றார் ஸமீரா.

ஆள் பிடிப்பது இதில் முக்கியமாக கூறப்படுகிறது. இதனை ஆராய்ச்சி புகைப்படம் விரிவாக உள்ளங்கை ரேகை போல விளக்குகிறார். ‘’ ஆள் பிடிக்கறது தொக்கூவுல ரொம்ப முக்கியமானது, ஏன்னா அப்பத்தான் நெறயா ஆட்கள வேல செய்யறக்கு காசில்லாம சேவைங்கற பேருல புடிக்க முடியும். கங்காணிச்சித்தனோட வேலதா இந்த ஆள் பிடிக்கறது. இதுக்கு தயாராவதுங்கறது சாமானியப்பட்டதில்ல. நெறயா கல்யாண்ஜியோட கவிதை படிக்கறது, ஞானக்கூத்தன், சு.ரா இவங்களயெல்லாம் விடாம படிக்கணும். குறிப்பாக தத்துவநூல்கள் ஓஷோவோடதெல்லாமே படிக்கணும். அப்பத்தா வேளாண் விஞ்ஞானி கூட்டத்தில பேச்ச கேட்கறவனல்லா கர்ச்சீப் கந்தலாகற அளவு அழுக வைக்கர முடியும். அந்தளவு நெகிழ்ச்சி பெருகறா மாதிரி அள்ளிவுட்றா பழனிச்சாமி காசா, பணமாங்கற மாதிரி பேசோணும். இந்த விஷயத்துல கங்காணிச்சித்தன் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் டிரினிட்டி, அம்பேத்கர் பிரிட்ஜ் உள்பட பல பல்கலைக்கழகங்கள், பாலங்கள், முட்டுச்சந்து, மூத்திரச்சந்து எல்லாத்துலயும் முதுகலைக்கு மூத்த கலை பட்டமெல்லாம் வாங்குனவரு. இதற்கு பல ஆதாரங்கள் யூடியூப் காணொளிகள்ல நீங்க பாக்கலாம்’’ என்று பல காணொளிகளைக்காட்டி, அந்த இணைய முகவரிகளைக் குறித்துக்கொள்கிறீர்களா என்று கேட்கிறார். நாம் மறுக்க, மறுக்க அவற்றை தாளில் குறித்துக்கொடுத்து, காணொளி ஒன்றை இயக்குகிறார். காணொளியில் ஒல்லியாக நவீனத்திருவள்ளுவர் போல இது மனிதன் தானா அல்லது எலும்புக்கூடா என்று சந்தேகப்படும்படி லோக்கல் ப்ரூஸ்லீ சீடன் போல ஒருவர் நின்று, பேசப்பேச அங்கிருக்கும் பலருக்கும் ஒரு குடம் ஆகும் அளவு கண்ணீர் தளும்பி வழிகிறது. அவரின் பேச்சைத்தாண்டி ஒரு தேம்பல் கேட்க, அது யாருக்கு என்றால் நமது ஆராய்ச்சி புகைப்படத்திற்குத்தான். கண்ணீர் பெருகி வழிய, நடிகர் பாண்டு போல ஆ… கத்தியபடி அழுகிறார். கண்ணீரைத்துடைக்க நாம் கொடுத்த கைக்குட்டையே காய ரெண்டு நாளாகும்படி நனைந்து நம்மிடம் வருகிறது.

‘’ இதெல்லாம் வேளாண் விஞ்ஞானி இருந்தவரைதான். இப்ப ஆள் புடிக்கிறது கஷ்டமாப்போச்சு. இப்பவும் ஆள்தேடி கடுக்காய் லேகியத்தோட கவிமனம் எங்கியோ வெளில போயிருக்குது. ஆள் எல்லாம் நல்லவர்தான். ஆனா என்ன வாங்கற பணத்துக்கு எந்த கணக்கும் இருக்காது, பலபேருக்கு முன்னேறுடா ராஸ்கல் அப்படீங்கறா மாதிரி ஏத்திவுட்டுறுவாரு, அவ்வளவுதா இறக்கிவுடறதுக்கு போலீசுதே வரணும்’’ என்று சிரிக்கிறார் ஆ.புகைப்படம். என்னங்க, சொல்றீங்க, ஏன் போலீஸ் வரணும்? என்று கேட்டால், ‘’பச்ச புள்ளயா இருக்கீங்களே ப்ரோ, அவந்தா என்ன பண்றதுன்னு தெரியாம சித்தரோட ‘ஏத்திவிடப்பா’ கோரஸ் பாட்டுல மாட்டி ஓவர் கான்பிடன்சுல் வாழ்க்கைக்கே ஒல வச்சுக்கிட்டு தூக்கு மாட்டிக்குவானே?, போலீசுலதான கயித்துல இருந்து பொணத்த இறக்கோணும்’’ ஞானச்சிரிப்பை உதிர்க்கிறார் ஆ.புகைப்படம்.

சரிங்க, முதல்ல இந்த அமைப்பில் பலர் இருந்தாங்களே அவங்க பாதிப்பேரை ஏன் சித்தனைத்தவிர யாரையும் காணவில்லையே? என நாம் கேட்க, அவர் கூறியது நம்மை தடுமாற, திகைக்க வைத்தது.

‘’ டீயைக்குடிச்சப்பறம் கப்ப என்ன கையிலயா வெச்சுருப்போம்?, தூக்கி கடாசீருமல்ல, அப்படித்தானுங்க, அவனுகள பயன்படுத்தியாச்சு தூக்கி வீசிப்புட்டாரு நம்ம சித்தரு.அப்பறம் யாராவது வர்றவங்க அவங்களப்பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கிட்டா தொக்கூவுக்கே கூ..கூ தே, அதனால வெளில விரட்டி வுட்டவங்க எல்லார்த்த பத்தியும் கண்ட மேனிக்கு ஒருத்தன்கிட்ட ஒருத்தன் பயங்கரமாக பேசி, மோசமானவங்கள காட்ட முயற்சி பண்ணுவாரு சித்தன். இல்லீனா அவரு இங்க இருக்க முடியுமா? ஆயில்ய அகோரி, பவீனுனு, வெரலாமானு பலருக்கு இத பண்ணியிருக்கறாரு, அரசியல்ல அண்ண மட்டும் இறங்கினா மத்தவனெல்ல வி.ஆர். எஸ் வாங்கிரோணும். சித்தர் எங்கயும் லேகியம் தின்னுட்டாவது பின்னி பொளப்பாப்பல, தெரியுமா என்ன ஜஸ்ட் அது மிஸ்ஸாயிருச்சு பட் அது லட்சியம் இன்னைக்கு பண்றது நிச்சயம் எப்படி ?‘’ என்று சித்தருக்கு பாலாபிஷேகம் பண்ணுகிறார் ஆ.புகைப்படம்.

நல்ல குணம் ஏதாவது சொல்லுங்களேன் என்றபோது, ‘’ என்ன கையில புத்தகம் ஏதாவது வச்சிருந்தா நிலக்கடல விக்கறவனுக்கு கூட என்ன ஏதுன்னு கேட்காம குடுத்துருவாரு, பணமும் அப்படித்தா, அது பொன்மனச்செம்மலோட டெக்னிக்தானப்பா. இப்ப சித்தரு பேண்ட் போட ஆரம்பிச்சிருக்கறாரு. எவனும் ஆபிசுக்குள்ள உடமாட்டீங்கறான். தோற்றம் ரொம்ம்ப முக்கியண்டா ஆ..ண்டா .. ஆ அப்படீன்னு சொன்னார்‘’ என்று அட்சரம் பிசகாமல் நடித்து காட்டுகிறார்.

அர்ப்பணிப்பு, சேவை ன்னு கிளம்புகிறவர்களை தயவு செய்து கேள்வி கேட்காமல் நம்பாதீர்கள். இன்னொன்று எதையும் இதுபோன்ற ஆட்கொல்லி தற்கொலைப்படை அமைப்புகளிடம் பணத்தை பொருளாக கொடுங்கள். முடிந்தவரை நல்ல புத்தகமாக. அதையும் கொடுக்கமாலிருப்பது அதி உத்தமம். இவர்களெல்லாம் உத்தம போர்வை வில்லன்கள். அப்படி கொடுத்தேதான் ஆகவேண்டும் எனும் சமூகசேவை வெறியா? உங்கள் அருகில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுங்கள். அது இவர்களை நம்புவதை விட எவ்வளவோ மேலானது. சிறிய சொல் ஒன்று, சேவை என்று கிளம்பியவர்களால் இந்த பூமி பட்டது போதும்.

உலகத்தை அழித்துவிடும் தீவிரத்தன்மையை கைவிடுங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள். தங்களின் கருணையை இரக்கத்தை தூண்ட இதுபோன்ற அமைப்புகள் எத்தனைபேரை வதைக்கின்றன என்பதை அறிவீர்களா நீங்கள்?

 

அறிவுஜீவி குண்டர்

ஏதோ பார்க்க நகர முனிசிபலில் டஸ்ட் டில்லர் ஓட்டுகிறார் போல என்று நினைத்துக்கொண்டாலும், அதில் பாதி சரி. 360 டிகிரியில் ஒரு குப்பையைக் கண்டறிந்து, அதை அகற்றுவதில் முனைந்து இருக்கும் எம்சிஏ பட்டதாரி இவர். பருமனில் கல்யாண கேட்டரிங் எடுத்து செய்பவர் போல நினைக்கவைத்தாலும், சமையலும் நன்றாகவே செய்யக்கூடியவர். தொக்கூ அமைப்பின் இணையவழி, சமூக இணையதளவழி விளம்பரம் செய்யும் அறிவுஜீவி குண்டர் இவர்தான். முகத்தில் பூனை ஏறி தூங்கினாலும் இவருக்கு தெரியாத அளவு தூங்குவார். இருக்கின்ற இடத்தில் அனைத்தையும் செய்ய ஆசையுண்டு. எண்ணமும் அதுதான். நிறைய ஆங்கில நூல்களை வாசிப்பார். பல அறிவியல், அரசியல் கருத்தரங்குகளில் முகம்கோணாது கலந்துகொள்ளுபவர். கம்யூட்டர் கோடிங் எழுதும் பணியில் இருந்தவர். ஓஷோ எழுதியதை ஆங்கிலத்திலும், தமிழும் வாசித்துவிட்டு அதுபற்றி விவாதிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

தன்னைப்பற்றி பலரிடமும் நேரங்காலம் தெரியாமல் பேசுவதில் பெரும் விருப்பம் உண்டு. ஏதாவது, பேசி அந்த இறுக்கமான இடத்தில் சிரிப்பு சிக்கிமுக்கி வேலைகளை செய்வது இவர்தான். மனித புல்டோசர்போல எதையும் தூக்குவது, எறிவது என்றால் அவ்வளவு பிரியம். வேகம் அந்த வண்டியைப்போலத்தான். கனம் அதிகம் அல்லவா?

நீள்முடிச்சித்தன்

சிறிது அபாயகரமான எதிலும் தலையிடும் போக்கு கொண்ட மனிதர் இவர். பேச்சு ஒரு மாதிரியாக இருக்கும். தனக்கு தெரியாதது உலகிலேயே இல்லை, இனிமேல்தான் பிறக்கவேண்டும் என்பது போல பேசுவார். அல்லது மிரட்டுவார் இரண்டுமே ஒன்றுதான். உலகத்திற்கே யோசனை சொல்லும் அங்கிள் சாம் வேலைதான் இவருடையது. உப்பு பற்றி பிரச்சாரம் செய்ய உலகத்திலேயே இவரைப்போல ஒரு சித்தவைத்திய சிகாமணியைப் பார்க்கமுடியாது. இவர் சமையல் செய்தார் என்றால் யாருக்குமே மலம் குடலில் கட்டாது. எல்லோருக்குமே காரக்குழம்பு வைத்து அதன் மூலமே விளக்கெண்ணெய் உபயோகம் குறைத்து வயிற்றைக்கழுவும் புதிய மலமிளக்கி முறைக்கு காப்புரிமை வாங்க முயற்சித்துவருகிறார். இவரிடம் யோசனைகேட்டால் ஹிட்லரின் குடிப்பிறப்போ என்று சந்தேகம் கொள்ளுமளவு தன் சிந்தனைகளை அள்ளிக்கொட்டி நம்மை ஆப்பையில் தூக்கி ருசி பார்ப்பார். தொக்கூவின் செய்தித்தொடர்பாளர் என தன்னைத்தானே ஆழமாக நம்புகிற ஆகிருதி இவர். சித்தனின் கொத்தடிமைகளில் வல்லிய அடிமை சித்த மருத்துவர் இவர்தான் என்று கூறும்போதே, பேச்சு காரணமாக சிறு குடலில் உருவாகும் வாயுவை அமுக்க ஒரு மூலிகை இருக்கிறது என கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டில் இறங்கிவிடுவார். எது குறித்தும் இருபத்தாறு பக்க கோட்பாடுகளை கூறுவார். தான் மட்டுமே பேசவேண்டும் என்று மற்றவர்கள் கேட்டால்போதும் என்று நினைக்கும் காருண்ய கனி இவர். சமையல் அடிமை என்பதால் யாரும் எதையும் கூறுவதில்லை. ஏதாவது சொன்னால் சோற்றில் விஷம் வைத்துவிடுவாரே!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book