இந்தக்குறிப்புகள் 1967 ல் சென்னை தி.நகர் விஸ்வநாதச்செட்டியார் & சன்ஸ் நிறுவனத்தினரால் பதிப்பிக்கப்பட்ட தமிழக தொன்மை பானங்கள் எனும் காளியப்பதாஸ் என்பவரால் எழுதப்பட்ட நூலினைத்தழுவி, இக்காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது.
வேலமரத்துப்பட்டை அரைக்கிலோ.
வெல்லம் ஐந்து கிலோ.
நீர் ஒரு குடம்.
காடித்தண்ணீர் (முன்பு வெல்லம், பட்டை, ஊறிய பழையது) காடித்தண்ணீர் இல்லாதபோது, கள்ளினை கலந்துகொள்ளவேண்டும்.
காடித்தண்ணீர் அல்லது கள் கலந்த வேலம்பட்டையோடு ஊறப்போடும் தண்ணீரை 5 அல்லது 6 நாட்கள் கழித்து நன்றாக விளையும் சத்தம் கேட்டவுடன், அதனை எடுத்து தீயில் வைக்கவேண்டும்.
நெருப்புமூட்டும் முன் ஊறல்பானையின் மேல் ஒரு பானையை வைத்து அதன் கீழ்ப்பகுதியை துளையிட்டு, சிறு பானைத்துண்டுகளாக மூன்று துண்டு வைத்து துளையை அடைத்துவிடவேண்டும். இதன்மேல் சோமபானம் நீராவித்துளியாக பெருகி சொட்டுவதை சேமிக்க ஒரு பாத்திரத்தை வைக்கவேண்டும். இந்த பானையின் மேலே இன்னொரு பானையில் சாதாரண நீரை (குளிர்ந்தது) ஊற்றி வைக்கவேண்டும். இந்த மூன்று பானைகளையும் சிறு இடைவெளி கூட இல்லாமல் துணியினால் நன்றாக கட்டிவிடவேண்டும்.
ஊறல் பானையில் உள்ள ரசத்திற்கு ஏற்ப மேற்பானையில் 5 முறை தண்ணீர் ஊற்றவேண்டி வரலாம். அதற்குமேல் தண்ணீர் ஊற்றினால் சோமபானத்தின் தன்மை நீர்போல காரம் குறைந்து போய்விடும். ஐந்து 180 மி.லி பாட்டில்கள் சுத்தமான வேதிப்பொருட்கள் கலக்காத சோமபானம் இம்முறையில் கிடைக்கும். ஊறல் பானையில் உள்ள மீதியுள்ள ரசம் போன்ற நீர் சேமிக்கப்பட்டால், அடுத்தமுறை, சோம்பானத்தினை தயாரிக்க உதவும் காடித்தண்ணீராகும். எனவே முழுக்க நெருப்பில் காய்ச்சி அனைத்தையும் சுண்டவிட்டுவிடக்கூடாது. இரண்டாவது பானையின் பாத்திரத்தில் சேர்ந்திருக்கும் நீரே குடிக்கவேண்டிய பானமாகும்.
இது பற்றி, அத்தொழிலை முன்பு தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருந்த தொண்ணூற்று இரண்டு வயது பழனியம்மாள் கூறுவதாவது, ‘’ இது எங்க முன்னோர், மூத்தவங்க செஞ்ச தொழில்தான். பானத்துல எந்த வேதிப்பொருளும் சேர்க்கமாட்டோம். குடிக்கிறவங்க கொடுக்கிற காசுக்கு சரியான பொருள தரோணுங்கறது எங்க நெனப்பா இருந்துது. அப்பறம் பிராந்திக்கடைக்காரனுவ, சொந்தக்காரனுவ பொறாமை, ஏவாரப்போட்டியினால சம்பாரிச்ச பணத்த எல்லாம் ஜெயிலுக்குள்ள போன பயன, தம்பி பயன சாமீனு எடுக்க கோர்ட்டு, கேசுன்னு அலஞ்சே எல்லாமே போயிருச்சு. பணத்த மண்ணுல போட்டு ஏதாவது பண்ணியிருந்தா எங்க நெலம வேற மாதிரி இருந்திருக்குந்தே. நம்மளுக்கு வாழறக்கு யாரு புத்தி சொல்ல இருந்தா தம்பி?, கோளு சொல்லிக் கெடுக்கறதுன்னாத்தே இங்கே போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க. நம்மு கைய நம்போணுங்க, அதுதே எப்பவுமே நெஜம், நம்மள காப்பாத்தறதும் அதுதே, அந்தத் தொழிலு பண்ணுன பலபேர பலிகேட்டிருச்சு, சாபமான தொழிலுனு அத வுட்டுட்டோம். அதோட போலீசுக்காரங்கிட்ட வாங்கின அடியெல்லா கொஞ்சநஞ்சமில்ல சாமி! ஒவ்வொண்ணையும் நாமளா அடிபட்டு தெரிஞ்சுகிட்டு சரி செய்யும்போது, காலம் ஓடீருச்சுய்யா. இன்னைக்கு நா நிம்மதியா இருக்கறன்னா, அந்த விஷயத்த எல்லா வுட்டுட்டனாலதே..’’ என வலியோடு சிரிக்கிறார் பழனியம்மாள்; பெருகும் நினைவுகளினால் கண்களில் அதனையும் மீறி வழிகிறது கண்ணீர்.
(இக்குறுங்கட்டுரை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே. இவை கோமாளிமேடையின் ஒட்டுமொத்த குரல் அல்ல, இதன் எதிர்வினைகளுக்கு நாங்கள் சர்வநிச்சயமாக பொறுப்பில்லை, எங்களது நோக்கத்தை இக்கருத்துக்கள் பிரதிபலிப்பதல்ல என நைஸாக கழன்று கொள்வோம் என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்)