நூல்வெளியீட்டு விழாக்களில் துதிகள் எப்போதும் இருக்கும் என்பதால் நான்போகவே மாட்டேன். ஆனால் சென்னிமலை சுற்றுவட்டாரப் பேச்சுக்களை வாழ்கையாக நம்முன் வைக்கும் எழுத்தாளர் வா.மு. கோமு புதிதாகதொடங்கியிருக்கும் நடுகல் பதிப்பகத்தின் நான்கு புத்தகங்கள் வெளியீட்டில் நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், லக்ஷ்மி சரவணக்குமார் எனப்பலரும் கலந்துகொண்டார்கள். களப்பணி புரட்சிக்காரர் அழைத்த காரணத்தால் விழாவிற்குப் போனேன். விழாவிற்கு முன்னே சிறிதாக லிக்யூட் பலரும் அருந்தியிருந்தார்கள். விழா முடிந்துவிட்டபின், குறையாக விடக்கூடாதே என்று மீண்டும் டாஸ்மாக் சரணம் கச்சாமி என்று கிளம்பிவிட்டார்கள். தீவிரப்புரட்சி, கூத்தன், வா.மு. கோமு, செல்லமுத்து குப்புசாமி நடைபோடத்தொடங்கியிருந்தனர். சைட்டிஷ் தின்னும் என்னைப்போன்ற சைவப்பட்சிகளுக்கு அங்கே என்ன வேலை? தம்பி நீங்க கெளம்புங்க என்றார் தீவிரப்புரட்சி.
முருகேச பாண்டியன் பேசியது நன்றாக இருந்தது. தோள்மேல் கையைப்போட்டுக்கொண்டு பேசுவார்களே அதுபோல, இயல்பானதாக இருந்தது. பெருமாள் முருகன் இதோ திருச்செங்கோடு பஸ் கிளம்பிவிடும் … இதோ போய்விடும் என்று பயமுறுத்தியிருப்பார்கள் போல. படபடப்புடனே பேசினார். லக்ஷ்மி சரவணக்குமாருக்கு குக்கூ இயக்குநர் மீது ஏக கடுப்பு. நறுக்கென குத்திக்காட்டிப்பேசி அதையும் ஆமாங்க என்று நியாயப்படுத்தி நண்பர்களிடம் பேசினார்.
செல்லமுத்து குப்புசாமி எழுதிய இரவல் காதலி எனும் நாவல் ஒன்றை நான் வாசித்திருக்கிறேன். எப்படி புத்தகத்தை விற்பனை செய்வது என்று ரகசியத்தைக்கூறினார். உண்மையிலே இனி எழுதுபவர்களுக்கு நிச்சயம் பயன்படும் வழிமுறைகள்தான். அவர் பாவம், திக்கித்திக்கிப்பேசி தடுமாறிப்போய்விட்டார். கரட்டுப்புலிக்கு கடும் கோவம் வந்துவிட்டது. எட்டிப்பிடித்து அடக்கி வைத்தேன். புத்தகம் எப்படியிருக்குமோ, ஆனால் தேநீர் நன்றாக இருந்தது.
தஞ்சை ப்ரகாஷின் கள்ளம் நாவல் பற்றி அவரது நண்பர் ஒருவர் பேசினார். சிறந்த பேச்சாக அந்த நாளில் அதனையும், முருகேச பாண்டியன் பேசியதையும் எடுத்துக்கொள்ள முடியும். இறுதியாக, வா.மு. கோமு தான் பார்த்துவந்த வேலைகளையெல்லாம் கூறி, அதை எப்படி விட்டு விலகி வந்தேன் என்று கூறி தான் முதலில் சிரித்து பின் மற்றவர்களை சிரிக்கவைத்தார்.