‘’தம்பி, நெட்டுல அந்தப்புத்தகத்த.. அதே ஃப்ரீ ப்ரம் ஸ்கூல போட்டுட்டயாமா? மதர் இந்தியாக்காரனுவ கதறு கதறுன்னு கதறுறான். என்னதாண்டா பண்ணுன. நெட்ல போட்டா எங்கிட்ட சொல்லவேண்டாமாடா.. உம்பாட்டுக்கு வர்றே.. போறே.. டேய், நீயெல்லாம் நெறயா படிச்சவண்டா. நான்லா சாதாரண பலவீனமானவன்டா.. என்ன ஏண்டா நிராகரிக்கற.. வலிக்குதுடா… டேய்.. எனக்கு எத்தன பிரச்சன இருக்குது தெரியுமா? எத்தனைல சிக்கிட்டு கஷ்டப்படறேன் தெரியுமா?’’ சித்தர் கைபேசியில் கதறுகதறுவென கதறி படபடவென அள்ளித்தெளித்தார் வார்த்தைகளை.
‘’தேசியம் வந்தாரு, பேசறக்குப்போனன். அவ்வளவுதே!’’
‘’ அவரையும் கூட்டிட்டு டீ குடிக்க போயிருக்கலாமே ஏங்கூப்புடல?’
‘’………………………………………………………………………………’’
‘’ஸ்டாலுக்குப்போனன், நீங்க இல்ல நானென்ன பண்றது?’’
‘’போன் பண்ணியிருக்கலாமுல்ல?’’
போனை அவர் வைத்துவிட்டார். இதே கேள்வியை ஏன் நான் கேட்டிருக்க கூடாது? கேட்டிருந்தால் என்ன சமாளிப்பு வந்திருக்கும் என்று ஸமீரா பொரிந்தார். பின் அவர் எங்கோ நூலகம் போனபின் அவரது டயரியை எடுத்து படித்துப்பார்த்தேன்.
எனக்குத்தெரியும். அனுமதி கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்று. என் உழைப்பை ஒரு குழு தனது சுயநலத்திற்கு எதற்கு பயன்படுத்தவேண்டும். என் எழுத்து மனிதர்கள் அனைவருக்குமானது.
தொக்கூவின் கோடிங் அறிவுஜீவியிடம் இதுபற்றி கூறிவிட்டே செய்தேன். அவர் பொதுநலப்போராளியிடம் கூறாததற்கு நானா பொறுப்பு.
ஐயா, சித்தரே, ஒரு ரூபாய்க்கும் உங்களை நம்பி இருக்கும் நான் உங்களை நிராகரிப்பதா? எப்படி முடியும்? விடுவீர்களா? உங்களைத்தாண்டி ஒருவன் வந்துவிடத்தான் முடியுமா? கலைத்தொப்பியின் அகங்காரத்தினால் 45 கி.மீ மேல் நெடுஞ்சாலையில் ஜவ்வாது மலையிலிருந்து நடந்து வந்தேனே யாரால்? எனது பெற்றோர் குடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு என்னை தவிக்கவிட்ட பொதுநல நல்லுள்ளங்கள் பற்றி நான் என்ன சொல்வது? நிராகரித்துவிட்டீர்கள் என்று தங்களது பதத்தையே நானும் இங்கு பயன்படுத்தலாமா? கலைத்தொப்பியி தங்களிடம் என்னை மன்னித்துவிடு என்று என்னிடம் சொல்லச் சொல்லி நாடகமாடியதைப்பற்றி கைபேசியில் கதை போல கேட்கும் நீங்கள் அவரென்ன எனக்கு இழைத்தார் என்று கேட்க ஒரு நொடி கூட தயாராக இல்லை ஏன்? நேர்மையாக பேசவேண்டும் இல்லையா அதுதானே ஐயா சுந்தர ராமசாமி கூறிய எழுத்தோடு இணைந்த எழுத்தாளனின் அறம், அந்தக்கவிதை, அந்த மேற்கோள் இதெல்லாம் யாரை ஏமாற்றப் பயன்படுத்துகிறீர்கள்?
அர்ப்பணிப்பு, சேவை, லட்சியம், இருத்தல், இருப்பு எல்லாமே ஏதோ கலைத்தொப்பிக்கோ உங்களுக்கோ மட்டுமானதல்ல. இந்த பரந்துவிரிந்த தேசத்தில் எந்த ஊடகத்தின் வெளிச்சமும் இல்லாமல் பலரும் அவ்வாறு இருந்திருக்கிறார்கள். விமர்சனங்கள் இல்லாத அமைப்பு எப்படி வளரமுடியும்? எந்தக்கேள்வியும் கேட்காமல் பணியவேண்டுமென பாசிஸத்தன்மையோடு நீங்களும், கலைத்தொப்பியும் நினைக்கலாம். சில மனப்பிறழ்வு கொண்ட கூட்டம் வேண்டுமானால் அதைச் செய்யலாம். நான் ஏன் அதைப் பின்பற்றவேண்டும்? சுதந்திரமான சிந்தனையில்தான் நன்மை பிறக்க முடியும். மற்ற சக மனிதர்களுக்கும் உதவ முடியும் என்று நம்புகிறேன். உறுதியாக கூறுவது ஒன்றே ஒன்றுதான. அகங்காரம் இருக்கும் இடத்தில் அன்பு சர்வ நிச்சயம் இருக்காது. இருக்க முடியாது. புத்தகங்களை சர்வ நிச்சயமாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. இணையத்தில் மின்னூல் நண்பர்களுக்கு கொடுத்தது கொடுத்ததுதான்.
உங்களுக்கு பெரிய அளவில் நண்பர்கள், பிரபலங்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம். உங்களுக்கு பல நுட்பமான திறன்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது. விளைவு வன்மம் வளருகிறது.
எங்கு குரூரங்கள், வன்முறைகள், போர்கள் நடைபெறுகின்றனவோ அங்கு பின்னாட்களில் கலை உயிர்த்தெழுந்து உன்னத இடத்தை அடையும் என்பார்கள். கவிஒளியின் உள்ளத்தில் நிகழ்வதென்னவோ? பராபரமே அறியும்?
பழங்குடிச்சிறுவன் விஜியிடம் கூறினேன் ‘’நா ரொம்பநாளு இங்க இருக்கமாட்டேன் ’’ என்று கூறி இரண்டு நாட்களுக்குள் நான் நிராகரிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு தன்னலமில்லாத கலைத்தொப்பியால் வெளியேற்றப்பட்டேன்.
லக்ஷ்மிபதியும் வெகுநாட்கள் உங்களோடு இருக்கமாட்டார். விரைவில் அவர் தன்னை விடுவித்துக்கொள்ள அண்ணாமலையார் அருள்புரிய வேண்டுகிறேன். பலதும் வெடிக்க சமயம் பார்த்திருக்கிறது அவ்வளவுதான்.
நான் தொடர்ந்து ஒரு இடத்தில் ஒரே வேலையை செய்துகொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் நீங்கள் கொடுத்தவற்றை விட மதிப்பானவற்றை உருவாக்கி தந்திருக்கிறேன். மனிதர்களை விட பெரிதாக தாங்கள் மதிக்கும் பணத்தையும் கூறவிரும்புகிறேன். பள்ளிக்கு வெளியே வானம் பால் ஒரு உயிர்க்கொல்லி என்ற இருநூல்களுக்கும் நீங்கள் தமிழில் மொழிபெயர்த்ததற்காக நிச்சயம் பணம் தரப்போவதில்லை. மறுபதிப்பு என்று சென்றுகொண்டே இருக்கப்போகும் இந்நூல்களில் பள்ளிக்கு வெளியே வானம் புத்தகம் பற்றி நீங்கள் கவலைப்படுவது லாபத்தில் ஏற்படும் நஷ்டம் என்பது யாருக்குத்தான் தெரியாது. மின்னூல் பெரிய வெற்றி பெற்ற வடிவம் என்று கூற முடியாது. ஆனால் இது காலத்திற்கான வடிவம் என்பதை நான் மறுக்கவில்லை. காலத்தோடு பயணம் செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. பேப்பர் பேக் எடிஷனும் நன்றாகவே பள்ளிக்கு வெளியே வானம் விற்கும் அதன் உள்ளடக்கம் அப்படி. அதோடு தங்களின் வியாபாரப்புத்தி எப்படியும் லாபம் பார்க்க உழைக்கும். உங்களுடைய முகம் பார்த்துப் பேச எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தன்னலமில்லாத பொதுநல உள்ளங்களுக்கு எப்படியோ நானறியேன். கற்றதும் பெற்றதும் பயனுள்ளதுதான். எதைப்பற்றியும் புகார் சொல்ல என்ன இருக்கிறது? நன்றி!
நானோர் பரதேசி
நல்லோர் கால்தூசி