கூழாங்கல்லின் வீட்டிற்கு ஓசூரார் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் லட்சியவாதம் பேசும் கடுமையான மனநிலைக்கொதிப்பு கொண்ட இளகிய மனதுக்காரர் இவர். கோபம் வந்துவிட்டால், தக்காளி சட்னிதாண்டா என்று வார்த்தை மட்டுமல்ல அடி உதையிலும் முன்னணியில் நிற்பவர் இவர். சமையற்கலைஞர் என்பது இங்கு குறிப்பிடவேண்டியது முக்கியமானது.
கடுமையான மனப்பிறழ்வு ஏற்படும் அளவு பல நிகழ்ச்சிகள் நடந்தும் அதை சமாளித்து உயிரோடு அவர் இருப்பதே பெரிய விஷயம்தான். அவருடைய சிந்தனைகளில் குறிப்பிட்ட அளவு ஆர்வம் உண்டென்றாலும் எது முடிகிற இடம் கடும் வன்முறையாக, பெரும் திணிப்பாக மாறி விடும் சூழலில் என்ன செய்வது?
எனக்கு ஓசூராரைப்பிடிக்கும் என்பதை அவரும் உணர்ந்திருப்பார். அவரிடம் இருக்கும் துணிச்சல் இன்றுவரையும் என்னிடம் இல்லை. இது முக்கியமான காரணம். மற்றபடி மிக தீர்க்கமாக எல்லோரையும் பெரும் விவாதத்திற்கு இழுக்கும் தீவிரத்தன்மை எப்போதும் அவரிடம் உண்டு. சிகரெட் புகை இழுத்து இழுத்து போட்டிருக்கும் குர்தாவினுள் உடல் மெல்ல சுருங்கி வருவது போல் இருந்தது.
தன் லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு ஓசூரார் கிளம்பிவிட்டார். அதன் முன்தினம் இரவு மது அருந்தியிருந்தார். ஓசூராருக்கு மதுவும், சிகரெட்டும் அமைந்துவிட்டது. அப்படித்தான் இருக்கும் ஒன்றும் சொல்ல முடியாது.