கையைக் கழுவிவிட்டு நீங்களாக போய் என்ன இருக்கிறது என்று கேட்கவேண்டும் என்று சொன்னாலும், நம் அம்மா போல இதுதான் சாப்பிடு என்று அதிகாரத்தோடு விற்காமல் கிடக்கும் பண்டத்தை தட்டில் போட்டுக்கொண்டு தண்ணீர் உட்பட எடுத்துக்கொண்டு மேசைக்கு வரவேண்டும். வீட்டில் இதைத்தானேப்பா செய்வீர்கள்?
சாம்பார் இல்லையென்றாலும் அப்படியே சாப்பிட்டுவிடுங்கள். உணவகத்து சிப்பந்தி நம் அம்மா போல ஒருவேலை முடிந்தது என்று உணவகத்தை கழுவிட சிறிது நேரம் ஆனாலும் தொடங்கிவிடுவார்.
உணவகத்து உரிமையாளரின் குழந்தை உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் டம்ளர் நீரை எடுத்து விளையாடும், கையில் அள்ளி தெளிக்கும். வீட்டில் உறவினர்களின் குழந்தைகள் வந்தால் இதெல்லாம் செய்யும்தானே?
தின்ற உணவின் மிச்சப்பணம் நாளைக்குத்தான் கிடைக்கும் நாளைக்கு இங்கே வரமாட்டீர்கள் என்று அவருக்கு அலாரம் அடித்திருக்கும். இதற்கு நீங்கள் கேயாஸ் தியரி படித்திருக்க அவசியமில்லை.
நாளடைவில் நீங்கள் தட்டில் இலைவைத்து சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு மற்றவர்களுக்கும் சிப்பந்தியாக உழைக்க நேரிடும். விடுங்க சகோ, வீட்டில் நாம் மற்றவர்களுக்கு உணவு பரிமாறுவது இல்லையா என்ன?
சரி, இந்த உணவகத்தில் போர்டில் என்ன போட்டிருந்தது தெரியுமா? வீட்டுமுறை உணவகம். போவோமா?