இந்த நூல் நான் இலக்கிய வகையைச்சேர்ந்தது. அதாவது தனது வாழ்க்கைச்சம்பவங்களை தொடர்புபடுத்தி எழுதுவதுபோலவே செல்லும் தன்னை எழுதுதல் குறுங்கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.
ஒருவரின் வாழ்வில் நிகழும் அரசியல் தொடர்பான விஷயங்களையும், லட்சியங்களை உறுதியான தொனியில் எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இரு வேறுபட்ட நபர்களிடையே நடப்பதாக அமையும் காபி..காரம்.. கச்சேரி வாழ்வியல் நன்னெறித் தொடர் கூறுகிறது.
நேரடியாக எதனையும் கூறாமல் ஒரு கதை உரையாடல் வழியே குறிப்பிட்ட சிலரின் குணங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சில கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. சில மனிதர்களின் விட்டேத்தியான போக்கு பற்றிய விவரணையாக மதுபானக்கடை கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பிட்ட லட்சியவாதம் பேசும் மனிதர்களின் மறுபக்கத்தை காட்டும்விதமாக கலைத்தொப்பியின் தொடரும் விவரணைகள் உள்ளன.
ஏறத்தாழ மிக துயரமான கட்டுரைகளை இதில் வாசிக்க இடமில்லை. கொண்டாட்டமான தன்மை முன்னிலும் இதில் அதிகம். தினகரன் வெள்ளிமலர் கே.என்.சிவராமன், ஐந்து ரூபாய் டைம்பாஸ் ஆர்.சரண் ஆகியோர்களின் எழுத்தின் அதிதீவிர ரசிகரான லாய்ட்டர் லூனின் பங்களிப்பில், வேறெப்படி இந்த நூல் அமையும்? பல கட்டுரைகள் பல விஷயங்களை கடுமையான பரிகாசத்தொனியோடு பேசிச்செல்கிறது குறிப்பாக சோம்பானக்குறிப்பின் கடைசி பிராக்கெட்டில் உள்ள குறிப்பு. வங்க எழுத்தாளர்களை குறிப்பாக பந்தோபாத்தியாய வகைகளை விரும்பிபடிக்கும் ஜேம்ஸ் எழுதிய கட்டுரைகள் அந்த சாயல் கொண்டதாக இருக்கக்கூடும். பலபெயர்களை புனைந்துதான் எழுதுவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு எழுதுபவர் இவர். வாசியுங்கள். நன்றி!
சார்லி ட்ராம்ப்