3
அம்மையாருக்கு முந்திய காலம்
சிவன் பற்றிய குறிப்பு எதுவும் தொல்காப்பியத்தில் இல்லாததால் அத்தெய்வம் சிந்து வெளியிலிருந்து வந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அத்துடன் வேதத்தின் ருத்திரனின் தாக்கமும் அதில் ஏற்பட்டு அந்த இரண்டு அம்சங்களின் சேர்க்கையான முக்கண்ணன் வழிபாடு சங்க காலத்தில் நிலவியது. ஆனால் சங்க நூல்களில் இக் கடவுள் சிறப்பிடம் பெறவில்லை.
இறைவன் ஆலங்காட்டில் ஆடுவதாக முதலில் குறிப்பிடுபவர் அம்மையாரே. அம்மையாருக்கு முந்திய நூல்களில் அத்தகைய குறிப்பு இல்லை. கடவுள் ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பதாகக் கூறும் திருமுருகாற்றுப்படையும் கலித்தொகையும் அம்மையாருக்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஈசனுக்கு இந்த ஆலமரத் தொடர்பு எப்படி ஏற்பட்டது?
சுடலை மாடன் என்பது தமிழ்நாட்டில் வணங்கப்படும் தொல் பழம் தெய்வங்களில் ஒன்று. சைவம் எழுச்சி பெற்ற சோழ மண்டலத்தில் இதன் வழிபாடு அருகி விட்டது. ஆனால் தென் மாவட்டங்களில் இன்றும் அது தொடர்கிறது. இத்தெய்வத்தின் கோவிலைச் சுற்றி ஆலமரங்கள் காணப்படுவது வழக்கம் என்று தொல் பழம் தெய்வங்களைப் பற்றி ஆய்ந்த முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார். மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவர், மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில் குளித்து, எலும்புகளை அணிந்து கொண்டு ஊருக்குள் திரும்பி வருவது என்று அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில், கபாலம் ஏந்தி இருத்தல், ஆலமரத்தடியமர்தல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை மாடனிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சங்க காலத்தில் முக்கண்ணன் வழிபாடு இருந்தும் அதனுடன் சுடலை பற்றிய குறிப்பு இல்லாததால், சங்க காலத்துக்குப் பின்னரே சுடலை மாடனின் தாக்கம் முக்கண்ணன் வழிபாட்டில் ஏற்பட்டது எனக் கொள்ள முடியும்.
காரைக்கால் அம்மையார் தான் முதன் முதலாகச் சிவன் சுடுகாட்டில் நடனமாடுவதாகக் கூறுகிறார். அவர் காலத்தில் சிவன் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் உயர் நிலையில் வைக்கப்படுவதைக் காண்கிறோம். சிவனுக்காகப் பாமாலை சூட்டிய முதல் புலவர், முதல் சிவனடியார் அம்மையாரே.
இறைவனுக்கு அம்மையார் வழங்கும் பெயர்கள்
அடிகள், அழகன், அந்தணன், அட்ட மூர்த்தி, அண்டத்தான், அண்டவாணன், அண்ணல், அப்பன், அம்மான், அமரர் பிரான், அரவப் புயங்கன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், உம்பர் கோன் தானத்தான், எந்தை, எம்மான், எரியாடி, கங்கை மணவாளன், கண்ணாளன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், சீராளன், செஞ்சடையான், செம்மேனிப் பேராளன், ஞானத்தான், தழல் வண்ணன், தன்னோடே ஒப்பான், நம்பன், நன்றுடையான், நனையாச் சடைமுடி, நுதற்கண்ணான், நெய்யாடி, பரமன், பிரான், புண்ணியன், பெரியான், பெருமான், மணிமிடற்றான், மாயன், மைத்தமர்ந்த கண்டத்தான், வானத்தான், வானோர் பெருமான், விண்ணோன், விமலன், வெண்ணீற்றன், வேதியன் முதலிய பல பெயர்களைப் பயன்படுத்தி அம்மையார் இறைவனைப் போற்றுகிறார்.
ஆலமரத்தடியில் அமர்ந்த நிலையைக் குறிப்பிடும் பெயரையும், பிற்காலத்தில் பெருவழக்காகிய சிவன் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இறைவனின் தோற்றச் சிறப்புகள்
இறைவன் சிவந்த சடை உடையவன். அதில் பிறை நிலவையும் கொன்றை, எருக்கு, வன்னி மலர்களையும் சூடி இருக்கிறான். கங்கை ஆறும் அங்கே தங்கி உள்ளது. நெற்றியில் ஒரு கண்ணைப் பெற்றிருக்கிறான். அவனது மிடறு நஞ்சு உண்டதால் கறுத்துள்ளது. எட்டுத் தோள்களை உடையவன். தலையிலும் மார்பிலும் இடையிலும் பாம்புகளே அணிகலன். மார்பில் நூலும், ஏனக் கொம்பும், மண்டை ஓட்டு மாலையும், எலும்புகளும் அணிந்திருக்கிறான். உடல் பவளம் போல் சிவந்த மேனியாக உள்ளது. அதில் முழுவதும் நீறு அணிந்துள்ளான். அவனது இடது புறத்தில் நீலக்குழல் கொண்ட மலைமகள் பாகம் பிரியாதவளாக இருக்கிறாள். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறான். கையில் தீ ஏந்தி உள்ளான். ஆனேறு அவனது வாகனமாக உள்ளது. கால்களில் கழலும் சிலம்பும் அணிந்துள்ளான். வேறு பொன் அணிகள் அணியவில்லை. அவனது அடிகள் செந்தாமரை போல் உள்ளன. அவனது இருப்பிடம் சுடுகாடு. அங்கு அவன் பேய்க் கணங்களுடன் நடனமாடிக்கொண்டு இருக்கிறான். கையில் கபாலம் ஏந்தி ஊர் ஊராகப் பலி ஏற்றுத் திரிகிறான்.
திருமாலும் சிவனும்
தற்போது வழக்கில் இல்லாத, திருமால் பற்றிய, ஒரு கருத்தை அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஒருபால் உலகளந்த மாலவனாம், மற்றை
ஒருபால் உமையவளாம் (அற்புதத்திருவந்தாதி-41)
…………………………செங்கண்
திருமாலைப் பங்குடையான் (அ-52)
ஓருருவாய் நின்னோடு உழிதருவான்- நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் (அ-54)
…………………………………………………பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ (அ-59)
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் (அ-3)
இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று சம்பந்தரும், மாலோர் பாகம் திகழ்ந்தான் என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர். இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப்பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சிவனை விட மூத்தவர் திருமால். இவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வணங்கப்பட்டு வந்தவர். புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் தொடர்புபடுத்தியதை அம்மையாரின் பாடல்களிலிருந்து அறிகிறோம்.
சங்க காலத்தின் முற்பகுதியில் தோன்றிய நூல்களில் சிவன் முருகனின் தந்தையாகக் கூறப்படவில்லை. பிற்பகுதியில் தோன்றிய கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றில் மட்டும் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை ஒப்பிடுக.
இறைவனின் செயல்களும் கோலங்களும்
முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, அரக்கன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராத வேடம் பூண்டது. அடி முடி தேடிய மால் அயனுக்கு அறிய முடியாதபடி நின்றது, காலனைக் காலால் உதைத்தது, காமனை எரித்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் நடனமாடியது என்று சிவனின் பல திருவிளையாடல்களையும் கோலங்களையும் அம்மையார் குறிப்பிடுகிறார்.
தேவாரக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
சிவனுடைய தோற்றத்தில் அம்மையார் குறிப்பிடாத பல அம்சங்கள் தேவாரக் காலத்தில் சேர்ந்து விட்டிருப்பதைக் காண்கிறோம்.
அம்மையாரின் பெம்மான் காலாலும் கண்ணாலுமே பகைவர்களை அழித்தவன். முப்புரம் எரிக்க அவனுக்குத் தேவைப்பட்டது ஓரம்பு தான். வில்லைக் கூட அவன் கையில் ஏந்தி இருக்கவில்லை. ஆனால் தேவாரக் காலத்தில் அவனிடம் சூலம், மழு ஆகிய ஆயுதங்கள் விளங்குவதைக் காண்கிறோம். பல பகைவர்களை வென்றதன் அடையாளமாகத் தேவாரக் காலத்தில் கொக்கிறகு, ஆமை ஓடு ஆகிய வெற்றிச் சின்னங்கள் அவனிடத்தே விளங்குகின்றன.
இறைவன் புலித்தோலும் மான் தோலும் அணிந்திருப்பதாக அம்மையார் சொல்ல, தேவாரக் காலத்தில் கோவணம் அணிந்தவனாகவும், நக்கனாகவும் கூறப்பட்டுள்ளான். கையில் மான் ஏந்தியவனாகவும் காணப்படுகிறான். பொன்னாரம் மற்றொன்று பூண் என்று அம்மையார் வேண்டியதற்கிணங்கப் பிற்காலத்தில் அவனிடத்தில் தோடு, குழை ஆகிய அணிகளும் விளங்குகின்றன.
அம்மையாரால் கூறப்படாத தக்கன் கதை தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பிரமன் தலையைச் சிவன் கொய்தது பற்றிய புராணக் கதையும் அம்மையாருக்குப் பின்னரே எழுந்திருக்க வேண்டும்.
சிவன் இராவணனை மலையின் கீழ் அடர்த்து பாதத் தனி விரலால் செற்றதாக அம்மையார் கூறுகிறார். ஆனால் கைலாயம் என்ற பெயரை ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடாததால், சிவனைக் கைலாயத்தில் உறைபவராகச் சொல்லும் வழக்கும் அம்மையார் காலத்துக்குப் பின்னரே தோன்றி இருக்கக் கூடும்.
தேவாரக் காலத்தில் இறைவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்க்கு அறம் உரைத்தது கூறப்படுகிறது. இதுவும் அம்மையாருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.
அம்மையாரின் இறைவன் உமை காண ஆடுகிறான். தேவாரக் காலத்தில் இறைவன் காளி காண ஆடுகிறான்.
இறைவனுக்கு அம்மையார் சூட்டும் நாமாலை
இறைவனே தொல்லுலகுக்கு ஆதி. அவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான். அழிப்பதும் அவனே. அவன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பறுப்பது, மெய்ப்பொருளை நோக்க வைப்பது. அவனே மூவேழுலகங்கள் ஆவான். அரி அரன் அயன் என்ற மும்மூர்த்தியும் அவனே.
இறைவன் மிகப் பெரியவன். அவனது அடி பெயர்ந்தால் பாதாளம் உடையும். முடி நகர்ந்தால் அண்டத்தின் உச்சி உடையும். கைகள் அசைந்தால் வான் திசைகள் உடையும். மாலும் அயனும் கூட அவனை அறிய முடியவில்லை. தேவர்கள் மலர் தூவி அவனை வழிபட்டும் அவனது அடி பொருந்த முடியவில்லை. பிறர் அறியலாகாப் பெருமையன் அவன்.
அவனைச் சார்ந்த பொருள்களும் பெருமை மிக்கதாக ஆகிவிடுகின்றன. அவனது முடி மேல் உள்ள நிலா பகலிலும் ஒளி தந்து சூரியனுக்கு மாற்றாக விளங்குகிறது. இறைவன் கையில் இருக்கும் கபாலம் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதிருக்க, பேதைப் பெண்கள் பாத்திரத்தின் பெருமையை அறியாமல் இட்ட பலியால் நிறைகிறது. அவனது ஏறு நடக்கில் பூமி நடுங்கும், கண் விழித்துப் பார்த்தால் எழும் தீயால் திசைகள் வேகும், கதறினால் உலகம் முழுவதும் கதி காணாது கலங்கும். பாம்பு மதி போன்ற பகைப் பொருள்களும் அவனிடத்தே பகை நீங்கிப் பொருந்தும்.
அறிவானாகவும், அறிவிப்பானாகவும், அறிவாகவும், அறிகின்ற மெய்ப் பொருளாகவும், ஐம்பூதங்களாகவும், இருசுடராகவும், இயமானனாகவும் (உயிர்களாகவும்) ஆன அட்ட மூர்த்தி. ஞான வடிவானவன். பிறர் அவனை உணர்வினால் மட்டுமே உணர முடியும். அவனை உள்ளத்தால் உள்ளுவாரை வினைகள் அணுகா.
இவ்வளவு பெருமைகளுக்குரியவனாக இருந்தும் தன் பெருமையை அறியாதவன் போல் எளிவந்த தன்மையனாக உள்ளான். உமையின் ஊடலைத் தவிர்ப்பான் வேண்டி அவள் பாதம் பணிவான். அன்பர்களுக்கு எளியன். அவனை அன்பென்னும் போர்வையால் போர்த்தி நெஞ்சினுள் மறைத்து வைக்க முடியும். அவன் அன்பர் நெஞ்சத்தான். காதலாற் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுவான்.
பேய்க் கோலம் ஒன்று தான் அவனுடைய வடிவம் என்பது அல்ல. அவனை எக்கோலத்திலும் உருவகம் செய்து கொள்ளலாம். எவ்வுருவிலும் வழிபடலாம். அவனைக் குறித்து எத்தகைய தவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர் விருப்பப்படி அந்தந்தக் கோலத்தில் வந்து அருள் புரிபவன் அவன். எந்த முறைப்படி வழிபட்டாலும் ஈடுபாட்டுடன் சிந்தித்தால் தான் அடைய முடியும். அவனை அடைய வேறு குறுக்கு வழிகள் கிடையாது.
அடியார்கள் மேல் துயரம் வந்தால் அதை மாற்றுவான். அவனைப் பல நாள் நாமாலையும் பூமாலையும் சூட்டிப் பணிந்து இரந்தால், எந்த உலகத்தை வேண்டினாலும் கொடுப்பான், எத்தகைய மேல் நிலையிலும் கொண்டு வைப்பான். துன்பமாகிய இருள் நம்மை வருத்தாது. தொழுவார் இடர் கண்டு வாளா இரான் அவன். தனிப் பெருங்கருணை கொண்ட அருட் பெரும் சோதி.
ஆனால் இவனைப் பொருளுணர மாட்டாதார் இவனை இகழ்வர், பேய் என்பர். அவன் சார்ந்தார்க்குப் பொற்கொழுந்து, சாராதார்க்குத் தீக்கொழுந்து.