"

6

இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் இக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவில்கள் குறைவாக இருந்திருக்கக் கூடும். இருந்தவையும் மக்கள் நடமாட்டம் அற்று முட்புதர் மண்டி இருந்திருக்க வேண்டும். எனவே தான் பிற்காலத்தில் உழவாரப் பணி செய்து மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க வேண்டிய நிலை அப்பருக்கு ஏற்பட்டது. கண்ணுக்குப் புலனாகும் கந்து அல்லது லிங்கம் அல்லது வேறு உருவம் எதுவும் இல்லாமலே, சிவனைக் கருத்துருவாகவே அம்மையார் காட்டுகிறார்.

சங்க காலத்தில் தெய்வத்தை அதிட்டானிக்க ஆதாரமாகப் பயன்பட்ட பொருளைக் கந்து என்று அழைத்தனர். இது பொதுவாகக் கல் தூணாகவே இருந்தது. இதுவே பிற்காலத்தில் வளர்ந்து விக்கிரக வழிபாடாக மாறியது. அம்மையாரது காலத்தில் ஆடற்பெருமானை உலோகத்திலோ, கல்லிலோ சிற்பமாக வடித்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

தேவாரக் காலத்தில் சிவன் ஆன் ஐந்தால் (பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமயம்) அபிடேகம் செய்யப் பெறுபவனாகக் கூறப்படுகிறார். ஆனால் அம்மையார் சிவனை நெய்யாடி என்று வர்ணிப்பதிலிருந்து சிவனை அதிட்டானித்திருந்த கந்துக்குச் சங்க காலத்து நடுகற்களுக்குச் செய்தது போல் நெய் மட்டும் தடவும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. மலர் தூவி வழிபடும் வழக்கம் இருந்தது.

 உமையம்மை

இருவடிக்கண் ஏழை, உமையவள், குலப்பாவை, குலமங்கை, கொம்பு, கோல்வளை, சிலம்படியாள், செப்பேந்திளமுலையாள், பாகத்தாள், பெண், பொருப்பன்மகள், மலைப்பாவை, மலைமகள், மலைமங்கை, மலையான் மகள் எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் உமை இறைவனது பாகம் பிரியாமல் இருக்கிறாள். அவன் சுடலையில் ஆடும்போது மருண்டு நோக்குகிறாள். அவளைக் குறிப்பிடுகிறாரே தவிர அம்மையார் அவளை வணக்கத்திற்குரிய தெய்வமாகப் போற்றவில்லை. அம்மன் வழிபாடு குலோத்துங்கன் காலத்தில் தான் ஓங்கியது என்பதை வரலாறு கூறும்.

சிவகுமாரர்கள்

இன்று சிவகுமாரர்களாக வணங்கப்படும் கணபதி, முருகன் போன்ற தெய்வங்களையும் அம்மையார் குறிப்பிடவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.