"

3

2.சத்துணவகம்

சமீப காலமாக உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்க வேண்டாமா? என்கிற தொனியில் ஏராளமான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

ஹார்லிக்ஸ் என்றால் எப்போதும் அதன் உள்ளே இருக்கும் அதே கோதுமை தான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தப் பாட்டிலின் வடிவமைப்பு, உள்ளே உள்ள கோதுமையின் நிறம், வெளியே ஒட்டப்படும் ஸ்டிக்கர், சுவைக்குச் சேர்க்கப்படும் ஃப்ளேவர் என்று மாறி மாறி விளம்பரங்களில் கவர்ச்சியாகக் காட்டப்படுவதோடு கூடுதலாக ஒரு தகவலும் அதே விளம்பரத்தில் வரும். இப்போது 20 சதவிகிதம் அதிக அளவோடு என்கிற ரீதியில் மக்களை வந்து தாக்கிக் கொண்டே இருக்கிறது.

ஹார்லிக்ஸ் மட்டுமல்ல.

பூஸ்ட், போர்ன்விட்டா, மால்ட்டோவா என்று தொடங்கி ஏராளமான பானங்களுக்குத் தேவைப்படும் அந்தக் குருணைப் பொருட்களுக்கு இன்று சந்தையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு மருந்துக்கடையில் சென்று முன்னால் உள்ள அல்லது மேலே உள்ள கண்ணாடிக்குப் பின்னால் அந்த வரிசைகளைப் பாருங்கள். குறைந்தபட்சம் 20 விதவிதமான டப்பாக்கள் உங்களைச் சுண்டியிழுக்கும். எதை வாங்குவது? என்று யோசிக்க வைக்கும். காரணம் இன்றைய நடுத்தர வர்க்கத்திற்குத் தங்கள் குடும்பத்தினர் மேலுள்ள அக்கறை என்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஆனால் இதற்குப் பெயர் அக்கறை அல்ல. அவலம்.

பூஸ்ட்க்கு விளம்பரம் செய்த சச்சினும் சரி, ஹார்லிக்ஸ்க்கு ஒவ்வொரு சமயம் காட்டன் புடவைகள் கட்டிக்கொண்டு விளம்பரம் செய்யும் நடிகைகளும் கல்லா கட்டுவதற்காகப் பல லட்சக்கணக்கான திருவாளர் நடுத்தரவர்க்கம் தெரிந்தே ஏமாந்து கொண்டிருக்கும் கேணத்தனம் தான் இதற்குப் பின்னால் உள்ளது.

எங்கள் வீட்டில் இரட்டையர் பிறந்த போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இந்த மாவு சமாச்சாரங்களோ, மண்டையில் மிளகாய் அரைக்கும் கருமாந்திரங்களையோ வாங்கி விடவே கூடாது என்பதில் அக்கறையோடு செயல்பட்ட காரணத்தால் அவர்கள் இப்போது எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் கும்மாங்குத்துக்களை நான் கைப்புள்ள கணக்காக இலவசமாக வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.

அன்று அவர்கள் உண்ட இயற்கை சார்ந்த வீட்டில் சுயமாய்ச் செய்து கொடுத்த உணவுகளின் காரணத்தால் இன்று அவர்களின் ஒவ்வொரு அடியும் இடி போல என்னைத்தான் தாக்குகிறது. ஒல்லியான அளவான தேகத்தில் உறுதியான சதைப்பற்றில் எனக்கு நேருக்கு நேர் சவால் விடுகின்றார்கள்.

இடையிடையே ஆசைப்படுகின்றார்களே என்று ஒரு சில கருமாந்திரங்களை என் திட்டுக்களையும் மீறி மனைவி வாங்கிக் கொண்டு வந்தாலும் முறைத்துக் கொண்டு அமைதி காத்து விடுவேன்.

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் இருந்தாலும் எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது ஒரு தடவை ஒரு மருந்துக்கடையில் சத்துமாவு என்று போட்டிருந்த பாக்கெட்டை பார்த்து விபரம் கேட்ட போது குறிப்பிட்ட தானிய வகைகளைச் சேர்த்து மாவாக மாற்றியது என்றார்கள்.

கூழ் போலக் காய்ச்சி குடிக்கலாம் என்ற போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று வாங்கி வந்து முழுமையாக ஒரு வருடங்கள் முயற்சித்துப் பார்த்தோம். ஆனால் எனக்குத்தான் அது பயன் உள்ளதாக இருந்தது. காலை நேரத்தில் அவசரமாக ஓடும் எனக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு செல்ல வசதியாக இருந்தது.

ஆனால் அதில் உள்ள குறைபாடுகளை எனக்கு இனம் காணத் தெரியவில்லை. காலப்போக்கில் அதன் பலன் பூஜ்யமாக இருந்த காரணத்தால் அதையும் விட்டுவிட நேர்ந்தது.

பள்ளியில் இருந்து வருபவர்களைச் சில நாட்கள் கவனித்துப் பார்த்த போது அந்தத் தூக்க முடியாத புத்தக மூட்டைகளைப் புஸ் புஸ் என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க என்று வந்து சேர்வார்கள். நம் மேல் விழுவது போல வீட்டுக்குள் வருபவர்களை ஆரோக்கிய ரீதியாக மேலும் தயார் படுத்த வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். நமக்கும் அதே கதி தான்.

உண்ணும் உணவுக்கு அப்பாற்பட்டுத் தேவைப்படும் சத்துக்கள் என்பது உடம்பில் சக்கை போல இருப்பதால் அன்றாட உணவில் சில மாறுதல்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தேடுதல் வேட்டை துவங்கியது.

அன்று மக்கள் தொலைக்காட்சியில் அல்மா ஹெர்பல் குறித்து ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது திருப்பூரில் உள்ள அவர்கள் கடையில் உள்ள பொருட்களை ஆராயும் பொருட்டுச் சென்ற எனக்கு அந்தக் கடையின் உரிமையாளராக இருந்த பெண்மணி கவர்ந்து விட்டார்.

ஏறக்குறைய சமவயது உள்ளவர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பலவிதமான ஏமாற்றங்களையும், பொருள் இழப்புகளையும் தாண்டி அல்மா ஹெர்பல் என்று தமிழ்நாடு, மலேசியா என்று இயங்கும் ஒரு நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்கு உரிமை எடுத்துத் திருப்பூரில் தொடங்கியிருந்தார்.

தொடர்ச்சியாகக் குடும்பத்திற்குத் தேவைப்படும் உருப்படியான பல சமாச்சாரங்கள் கிடைக்க, விலையும் இயல்பானதாக இருக்க மாதம் ஒரு முறை அங்கே செல்லும் பழக்கம் உருவானது. அப்போது மனதில் இருந்த சத்து மாவு குறித்த எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்களின் நிறுவனமும் அதே போலச் சில வகையான சத்து மாவுகளைச் சந்தைப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொன்னார்கள்.

ஆனால் நான் அவர்களிடம் இதன் அடிப்படை விசயங்களை எனக்கு எழுதித்தர முடியுமா? என்று கேட்ட போது தயங்காமல் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.

இன்று சந்தையில் ஏராளமான சத்துமாவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவைகள்.

தமிழ்நாடு அரசாங்கம் கூடச் சத்து மாவு குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். அதையும் நண்பர் மூலம் கேட்டு வாங்கிப் பார்த்தோம். நிச்சயமாக நன்றாகவே உள்ளது, அதற்குப் பிறகு தனியாளாகப் போட்டியின்று அரசாங்க பிரதிநிதிகளின் செல்லப்பிள்ளையாக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரு பத்திரிக்கையில் படித்த போது அந்த மாவு குறித்த தரத்தில் பயம் வந்து விட்டது

நீங்கள் கடையில் வாங்கும் மாவு உள்ள பாட்டிலின் மேல் உள்ளே உள்ள காகிதத்தில் உள்ளே உள்ள மாவில் எந்தந்த பொருட்கள் எந்தந்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் குறித்து இருப்பார்கள்.

செயல்முறை விளக்கத்தையும் அத்துடன் கொடுப்பார்கள். ஆனால் நமக்குத் தேவைப்படும் உண்மையான தரம் அதில் இருக்குமா? நாளொன்றுக்கு லட்சக்கணக்கான கிலோ தயார் செய்யும் ஒரு நிறுவனத்தில் அதுவும் குறிப்பாக நமது நாட்டில் தரம் சார்ந்த அக்கறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி? கடந்த ஆறு மாதமாக வீட்டில் நாங்கள் செய்து கொண்டிருக்கும் இந்தச் சத்து மாவு விசயங்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

உடம்பில் அவசியம் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை இழந்து கொண்டிருப்பவர்களுக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது பயன்படக்கூடும். இது என்ன மாதிரியான பலன் தரும் என்று கேட்பவர்களுக்கு, ஒரு முறை செய்து குடித்துப் பாருங்கள் என்பது தான் என் பதிலாக இருக்கும்.

காரணம் திட்டமிட்ட பரிபூரண உணவு என்ற ஒரு வார்த்தை தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

முந்திரி 100 கிராம்

பாதாம் 100 கிராம்

பிஸ்தா 100 கிராம்

கோதுமை கால் கிலோ

ராகிக் கால் கிலோ

கம்பு கால் கிலோ

சோளம் கால் கிலோ

சிவப்பு அரிசி கால் கிலோ (கடைகளில் தனியாகக் கிடைக்கின்றது)

பாசிப்பயறு கால் கிலோ

நிலக்கடலை கால் கிலோ

பொட்டுக்கடலை கால் கிலோ

சிவப்புப் பீன்ஸ் கால் கிலோ

சோயா கால் கிலோ

நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் அளவில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளது என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கருப்பு பிடித்து விடக்கூடாது.

முந்திரி போன்றவற்றை லேசாக வறுத்தாலே போதுமானது. சோளம் போன்றவற்றைச் சற்று நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக உலர வைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கருகே உள்ள மாவுக்கென்று தனியாக அரைக்கும் எந்திரத்தில் சென்று மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவசர கதியில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து விடலாம் என்று யோசித்தால் அந்த அளவுக்கு மாவு போல வருமா? என்பது கேள்விக்குறியே.

நாங்கள் முயற்சித்துப் பார்த்தோம். சரியாக வரவில்லை.

ஆனால் மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்களிடம் போகும் முன் கூட்டம் இல்லாத சமயத்தில் சென்றால் தான் வசதியாக இருக்கும். அவர்கள் அவசர கதியில் போட்டுக் குருணையாகத் தந்து விடவும், ஏற்கனவே அரைத்த விசயங்களைச் சுத்தம் செய்யாமல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. பொறுமை அவசியம் தேவை.

மேலே சொன்ன அளவில் ஏறக்குறைய 450 ரூபாய் அளவுக்குச் செலவு வரும் (தற்போது சந்தையில் உள்ள எந்தப் பாட்டிலின் விலையை எடுத்துக் கொண்டாலும் இந்தத் தொகையில் இரண்டு பாட்டில்கள் தான் வாங்க முடியும். அந்த இரண்டு பாட்டிலின் உள்ளே உள்ள வஸ்துகள் அதிகபட்சம் மொத்தமாக 400 கிராம் இருக்கக்கூடும்.

காரணம் தற்போது சிப்ஸ் முதல் எந்தப் பொருளாக இருந்தால் அடைக்கப்பட்ட பையில் பாதிக் காற்றுப் பாதிப் பொருட்கள் என்கிற ரீதியில் தான் உள்ளது. ஏமாற நாம் தயாராக இருப்பதால் அவர்களை எந்த விதங்களில் குறை சொல்லவே முடியாது.)

இந்த மாவை நன்றாக உலர வைத்துத் தனியாகச் சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொண்டு விடவும். வீட்டில் காபி டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு அந்தச் சமயத்தில் இதைப் பருகலாம். காபி, டீ பைத்தியமாக இருந்த என்னை மாற்றிய பெருமைக்கு வீட்டில் உள்ள நிதி மந்திரிக்கு பத்ம வீபூஷன் விருது வழங்கலாம் என்று மனதில் வைத்துள்ளேன்.

ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

மாவு கட்டியாக இல்லாமல் கலக்கி விட்டு அதில் நாட்டுச்சர்க்கரை (எக்காரணம் கொண்டும் ஜீனியை எந்த வடிவத்திலும் உணவில் சேர்க்காமல் இருப்பது பெரும் புண்ணியம். முக்கால்வாசி நோய்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் முக்கியக் காரணம் இந்த வெள்ளை எமன் தான் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவும்) அல்லது கருப்பட்டி என்று உங்களுக்குப் பிடித்ததை அதில் போட்டு கலந்து அதற்குப் பிறகு அடுப்பில் வைத்து கூழாக வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

கவனமாகச் செயல்படாவிட்டால் கட்டியாக நின்று போய்விடும். பக்குவமாகத் தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும், கூழ் பக்குவத்தில் இறக்கி சூடு ஆறியதும் குடிக்கலாம். குடித்துப் பாருங்கள். கும்மாளமிடும் மனம்.

ஒரு மாதமாவது தொடர்ந்து குடித்து வரும் போது உங்கள் உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்கள் உணரக்கூடும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.