"

10

நண்பர் இராஜராஜனுடன் ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்கள்

(ஆசான் வாழ்ந்த இடங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக அவருடன் நண்பர்கள் துணை கொண்டு பயணித்தேன். கூடவே மனதில் உருவான ஆன்மீகம் குறித்த எனது பார்வை)

பயண வழித்தடம்

(தமிழ்நாடு கடற்கரையோர சாலை வழியே பயணம்)

1. திருப்பூர் – சென்னை

  1. சென்னை – திருச்செந்தூர்

  1. திருச்செந்தூர் – மதுரை

  1. மதுரை – திருவாவாடுதுறை

  2. திருவாவாடுதுறை திருப்பூர்

ஆசான் காணொளிக் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=bL31QvVTzaM

https://www.youtube.com/watch?v=GDHlPU_bhpY

https://www.youtube.com/watch?v=-gfgB5Ylf44

https://www.youtube.com/watch?v=eWWl6vwlmgY

(பயணம் செய்த மாதம் ஜனவரி 2014)

9. ஆசான்

நாங்களிருவரும் அவரை ஆசான் என்று தான் அழைப்போம். நாங்கள் என்றால் நானும் இராஜராஜனும். இராஜராஜன் எனக்கு வலைபதிவுகள் மூலம் வாசகராக அறிமுகமாகி நண்பராக மாறி என் குடும்பத்து அங்கத்தினராக மாறியவர். என் எழுத்துலக வாழ்க்கையில் எண்ணிக்கையில் அடங்கா உதவியைச் செய்தவர். இன்று வரையிலும் செய்து கொண்டிருப்பவர். என் நலமே அவர் நலம் போல கருதிக் கொண்டு எனக்கு உதவிக் கொண்டிருப்பவர்.

நான் எழுதி வெளியிட்டுள்ள “தமிழர் தேசம்” என்ற மின் நூலே இவருக்குத் தான் முறைப்படி சமர்பிக்கப்பட வேண்டும்.

நான் வலைபதிவில் எழுத வந்த முதல் ஆண்டில் தமிழர்களை, தமிழ் மன்னர்களை, அவர்களது காலடித்தடங்களை, சங்ககாலத்தைப் பற்றி எழுதத் தொடங்கிய போது அறிமுகமாகி கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய அத்தனை துயரங்களில் பங்கெடுத்து என்னை மீட்டெடுத்தவர். தமிழ் மன்னர்களில் சோழப் பேரரசில் வாழ்ந்த இராஜேந்திர சோழன் குறித்து இது வரையிலும் அறியப்படாத் தகவல்களைச் சேகரித்து எழுத வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை விரட்டிக் கொண்டிருப்பவர்.

இன்று வரையிலும் நாங்கள் இருவரும் வெவ்வேறு துருவங்களாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எண்ணங்கள். கருத்து ரீதியான செயல்பாட்டில் இருந்தாலும் இரும்பு காந்தம் போல ஏதோவொன்று இருவரையும் இணைத்து வைத்துத் தண்டவாளம் போல எங்கள் இருவரின் நட்பும் இயல்பான புரிதலுக்கு அப்பாற்பட்டுப் பலமாக உள்ளது.

இராஜராஜனுக்கு அறிமுகமான ஆசானை முதன் முதலாக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் வீட்டில் நான் சந்தித்தேன். ஆசான் ஈடுபட்டுள்ள யோகாசனம் துறையில் எனக்குப் பெரிதான ஆர்வம் இல்லாத காரணத்தால் அவருடன் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன். அப்போது இராஜராஜன். ஆசான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த யோகாசனம் குறித்த விபரங்களைப் புத்தகமாக மாற்றுவதில் உதவி புரிந்து கொண்டிருந்தார்.

ஆசான் யோகாசனம் குறித்து சில புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அதில் ஒன்று தான் உங்கள் ஆரோக்கிய வாழ்வுஎன்ற பெயரில் பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இந்தப் புத்தகம் முக்கிய பாடமாக உள்ளது. சிறந்த இயற்கை உணவுகளை எப்படிச் சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி அது குறித்த வழிகாட்டுதலை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். “இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்” போல இவரும் தமிழ்நாட்டில் முக்கியமான நபராகக் கருதப்பட வேண்டியவர். இயற்கை உணவுகள் மற்றும் யோகக்கலையில் குறிப்பிட்டத்தக்க ஆளுமை கொண்டவர்.

நான் ஒவ்வொரு முறையும் திருப்பூரில் இருந்து அலுவலக மற்றும் சொந்த வேலையாகச் சென்னை செல்லும் போதும் ஆசான் வீட்டில் நானும் இராஜராஜனும் தங்குவோம். கீழே வீடும் மேலே யோகா கற்றுக் கொடுக்க ஒரு அற்புதமான வடிமைப்பில் ஒரு நீண்ட ஹால் போன்ற வடிமைப்பில் நான்கு புறமும் ஆள் உயர கண்ணாடி அற்புதமான ரசிக்கக்கூடியதாக இருக்கும். நடுநாயகமாக உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டே நானும் இராஜராஜன் கருத்து ரீதியான விவாதங்களில் புயலை உருவாக்கிக் கொண்டிருப்போம்.

ஆசானின் முழுப் பெயர் திரு. கிருஷ்ணன். திருச்செந்தூரில் பிறந்து சென்னையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.

தனது வாழ்க்கையை யோகா என்ற கலைக்காக அர்ப்பணித்தவர். இன்று அவரின் வயது 70. திருமணம் செய்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல், திரைப்பட, சமூகப் பிரபல்யங்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யோகக்கலையைக் கற்றுக் கொடுத்தவர்.

கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். அப்படியென்றால் வசதியாக வாழ்பவர் என்ற கற்பனைக்கு வந்து வீடாதீர்கள்.

பணத்திற்கு ஆசைப்படாமல், எவருடனும் எதற்காகவும் அண்டிப்பிழைக்கும் எண்ணம் இல்லாமல் ஆச்சரியப்படத் தக்க வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் நோக்கம், தன் செயல்பாடு, தன் சுதந்திரம் என்பதில் மட்டுமே இன்று வரையிலும் குறியாக இருந்து தான் கற்று வைத்துள்ள கலையை முடிந்த வரைக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

தன்னைச் சந்தைப்படுத்திக் கொள்ள (மார்க்கெட்டிங்) விரும்பாமல் தான் உண்டு தன் கடமை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு சென்றவர்கள், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் மணிக்கு இத்தனை டாலர் என்று சம்பாரித்துக் கொண்டிருந்த போதிலும் இவருக்கு இன்று வரையிலும் பணம் சார்ந்த விசயங்களில் அதிக அளவு அக்கறையோ ஆர்வமோ இல்லாமல் இருப்பது கண்டு பலமுறை நானும் இராஜராஜன் வியந்து போய் இருக்கின்றோம்.

மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பச்சைக்காய்கறிகள், பழங்களை மட்டுமே தன் உணவாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்.

தொலைக்காட்சிகளின் வாயிலாக இன்று தமிழ்நாட்டில் பிரபல்யமாக அறியப்படும் பல காசு பார்க்கும் மனிதர்கள் அறியாத நூற்றுக்கணக்கான யோகக் கலையைக் கற்று வைத்திருப்பவர். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இப்படிப்பட்ட ஆசனங்கள் உண்டா? என்று யோசிக்கக் கூடிய வகையில் பன்முகத் திறமை கொண்டவர் தான் ஆசான்.

ஆனால் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. எவரையும் தரக்குறைவாக மற்றவர்களுடன் சொல்வதும் இல்லை. இதைப்பற்றிக் கேட்கும் போதெல்லாம் தயாராக ஒரு பதிலை வைத்திருப்பார்.

அவரவர் வினைவழி. அவர்வர் வழிஎன்பார்.

இராஜராஜனுக்கு இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது. சென்னையில் இருந்த போது அந்த முயற்சி கைகூடவில்லை. இதன் காரணமாக இந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இதுவொரு சவலான வேலையாகும். காரணம் ஆசான் ஒரு வகையில் குழந்தை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

தற்கால நடைமுறைக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்துவது அத்தனை சுலபமல்ல. இதைப் பலமுறை சொல்லியே இராஜராஜன் இந்தப் பணியை என்னிடம் கொடுத்திருந்தார். நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டதும், முதலில் ஆசானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் முறை சென்னைக்குச் சென்ற போது அவர் வைத்திருந்த பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து படித்தேன்.

இரண்டாவது முறை இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கி அவர் வாழ்ந்த இடங்களை, பழகிய மனிதர்களைப் பற்றி நேரிடையாகச் சென்று தெரிந்து கொண்டு வந்து விடுவோம் என்று ஒரு நீண்ட பயணத்தை நண்பர்களுடன் தொடங்கினேன்.

காரணம் இராஜராஜன் சிங்கப்பூரில் இருப்பதால் அவர் மூலம் அறிமுகமான திரைத்துறையில் உள்ள நண்பர் மதன் ஒருங்கிணைப்போடு ஒரு குறுகிய காலப் பயணத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தேன். அப்போது பயணங்களில் எடுத்த படத்தை, வாகனத்தில் சென்ற போது அவருடன் உரையாடியதை வைத்து நான்கு காணொளித் தொகுப்பை உருவாக்கி உள்ளோம்.

இடங்களைத் தேர்வு செய்தல் (லோகேசன் பார்த்தல்) என்று சொல்வார்கள். பயணத்தின் போது எடுத்த படங்களை, அவர் குரலை, அவர் கற்று வைத்துள்ள பலதரப்பட்ட யோகா வழிமுறைகளை முதலில் ஆவணப்படுத்தி வைத்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதத்தில் இதை ஒரு குழுவினரோடு சேர்த்து உருவாக்கினோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.