17
16. பயணமும் படங்களும் – அரை நிர்வாண பக்கிரி 6
மதுரை காந்தி அருங்காட்சியம்
மோகன் தாஸ் கரம் சந்த் காந்திக்கு எத்தனையோ சிறப்புகள். அதில் ஒன்று தான் வின்ஸ்டன் சர்ச்சில் கொடுத்த அரை நிர்வாண பக்கிரி என்ற பட்டப் பெயரும் ஒன்று. காரணம் காந்தியடிகள் இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்ற போது அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்துச் சர்ச்சில் அவ்வாறு அழைத்தார். காந்தி தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளத் தூண்டிய சம்பவம் தமிழ்நாட்டில் மதுரையில் தான் நடந்தது.
1921ம் ஆண்டுக் காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார்.
அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றிக் குளிரில் வாடுவதையும், கோவணத்துடன் இருந்த ஏழை விவசாயியையும் கண்டார். அன்று இரவே, நாட்டில் இப்படியும் மக்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் இந்த் ஆடம்பரம் என்று தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் மகாத்மா.
அந்த மகாத்மாவின் மறைவுக்குப் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. அப்படித் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று மதுரை.
1957ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால், மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது.
இங்குக் காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அரசு சார்புள்ள குழுவினர் காந்தி அருகாட்சிக் கூடத்தைப் பாதுகாத்துக் கொண்டு வந்தபோதிலும் உள்ளே உள்ள கட்டிடங்களைக் கவனித்த போது பல இடங்களில் கவனிப்பாரற்ற நிலையிலும், வெள்ளை அடித்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டதோ? என்கிற நிலைமையில் தான் உள்ளது.
காந்தியை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளை விடக் காந்தி மேல் உண்மையான மரியாதை கொண்ட பலரின் இடைவிடாத ஒத்துழைப்பால், உழைப்பால் இன்றும் இந்த நினைவு காட்சியம் உயிர்ப்போடு இருந்து வருகின்றது.
ஆசான் தன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை மாதந்தோறும் இந்த அருங்காட்சி நிர்வாகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். தங்கள் வாழ்க்கையைக் காந்தியின் கொள்கையைப் பரப்புவதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இங்குச் சென்று விட்டு பிறகு திருச்செந்தூர் செல்வோம் என்று கூறியதால் எனக்கு முதல் முறையாக இந்த இடத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.