26
25. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும்
நடந்து முடிந்த 2014 பாராளுமன்றத் தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்கள் கழித்து எழுதினால் அது பழங்கஞ்சி ஆகவிடும் ஆபத்துள்ளதால் சிலவற்றைச் சில பதிவுகள் மூலம் (இந்திய பாரளுமன்றத் தேர்தல் 2014) என் பார்வையை எழுதி வைக்க விரும்புகின்றேன்.
இப்போது எங்குப் பார்த்தாலும் மோடி புகழ் மட்டுமே எட்டுத்திசையிலும் சுடரொளி விட்டுப் பறக்கின்றது. மோடி ஜெயித்தது எப்படி? என்று தொடங்கிய ஜெயிக்கக் காரணமாக இருந்தவைகள் என்ன? என்பது வரைக்கும் எல்லா இடங்களிலும் அலசப்படுகின்றது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன அத்தனை பேர்களும் வீணர்கள் என்றும் அதற்கான காரணங்கள் என்று ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த கதை வசனத்தில் கட்டுரைகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
வரலாறு எப்போதுமே கொஞ்சம் பிரச்சனையான சமாச்சாரம் தான். இல்லை என்பதை இருப்பதாகக் காட்டிவிடும். இருப்பதை இல்லையென்று வெளிப்படுத்திவிடும். அதனால் தான் வெற்றிபெற்றவனின் வாக்கு வேதவாக்காக மாறிவிடுகின்றது. தோற்றவர்களின் நியாயங்கள் கேலிக்கூத்தாக மாறிவிடுகின்றது.
கடந்த பத்தாண்டுகளில் சோனியா குடும்பக் கும்பல் இந்திய நாட்டைச் சுரண்டி சேர்த்த சொத்து வண்டவாளங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிவந்து விடும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலை நான் எப்படி உள்வாங்கினேன்? காங்கிரஸின் தோல்வி மற்றும் மோடியின் வெற்றியை எப்படி உணர்கின்றேன்? மாநில அரசியலில் ஜெயலலிதாவுக்கு எப்படி இப்படியொரு ஆதரவு கிடைத்தது? என்பதையும் இங்கே எழுதி வைத்து விட விரும்புகின்றேன்.
சமூகத் தளங்கள் மற்றும் வலைதளங்களில் மதம்,சாதி,அரசியல் என்ற இந்த மூன்றையும் தொடாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்குத் தான் பலரும் இருக்கின்றனர். படிப்பவர் எழுதுபவர் என இருவருக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடிய காரணக் காரியங்கள் இருப்பதால் பெரும்பாலோனோர் நாம் ஏன் இதைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டும் என்று ஒதுங்கி விடுகின்றனர். சிலரோ எழுதிய பின்பு உருவாகும் எதிர்ப்பலைகள், கிடைக்கும் மோசமான விமர்சனங்கள், உருவாக்கப்படும் முத்திரைகள் காரணமாக நழுவலாகவும் நகர்ந்து விடுவதுண்டு.
நாம் தான் எப்போதும் வம்பை விலைகொடுத்து வாங்குகின்ற ஆளாச்சே?
இந்தச் சமயத்தில் தேர்தலுக்கு முன் மற்றும் தேர்தலுக்குப் பின் என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வழியே நான் உணர்ந்து கொண்டே விதத்தை அப்படியே தந்து விடுகின்றேன்.
இந்த நிமிடம் வரைக்கும் குறிப்பிட்ட கட்சி அல்லது அவர்களது கொள்கைகள், தலைவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்ற யோக்கியவான்கள் மேல் எவ்வித நல்ல அபிப்பராயமும் அற்றவன்.
எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. அதேபோல எல்லாவற்றிலும் தீமைகளும் கலந்தே உள்ளது என்ற எதார்த்தத்தை உணர்ந்தே இருக்கின்றேன்.
சம காலச் சமூகத்தில் அதிக அளவு தாக்கத்தை உருவாக்கும் ஒவ்வொரு விசயத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டு அதன் ஒவ்வொரு நகர்தலையும் தனிப்பட்ட விருப்பத்துடன் கவனிப்பதுண்டு. ஆச்சரியங்களை மனதில் குறித்துக் கொள்வதுண்டு. ஒவ்வொன்றையும் துணுக்குத் தோரணங்களாக இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
எழுதத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என்பதால் சிறிய தொடர் போல அரசியல் சார்ந்த சிலவற்றை அனுபவப் பகிர்வாக எழுத விரும்புகின்றேன்.