"

9

8.அவன் ஒரு தீவிரவாதி

அவனின் நோக்கம் ஒன்று மட்டுமே. இலக்கை அடைய வேண்டும். உருவாகும் விபரீதங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.ஆனால் செயலாக்கம் முக்கியம். புத்தி பொறுமையாக இரு என்று எச்சரிக்கும். ஆனால் மனம் மறுக்கும். இடைவிடாத இந்தப் போராட்டத்தில் உணர்ச்சி கொந்தளிப்பாகி மனம் கழிவிரக்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

நடந்ததை, நடக்கப்போவதை யோசித்து,இப்படி நடந்து விடக்கூடுமோ என்று பயந்து நம்மைச் சர்வகாலமும் அலைகழித்துக் கொண்டே இருக்கும்.

இந்தத் தீவிரவாதி ஒவ்வொரு மனதிலும் நிரந்தரமாகவே இருப்பவர்.இவர் நாட்டைச் சீர் குலைக்கும் தீவிரவாதி அல்ல.

ஆனால் அதை விடக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துபவர். இவரை நாள்தோறும் நம்மோடு வாழ அனுமதித்துக் கொண்டுருக்கின்றோம். அவரின் பெயர் தான் திருவாளர் கவலை.. தீவிரமான எண்ணங்கள் கவலைகளை உருவாக்குகின்றது. பல சமயம் வெறுத்துப் போய்ச் சிலரை காதல், சாதி, மத, பணத் தீவிரவாதியாகவும் மாற்றி விடுகின்றது.

நடந்த சம்பவங்கள்,காணும் காட்சிகள் என்று ஒவ்வொன்றையும் கண்கள் உள்வாங்க, மூளையில் பிரதிபலிக்க ந்யூரான்கள் ஒவ்வொன்றையும் இது தேவை இது தேவையில்லை என்று பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனம் உள்ளே புகுந்து டேய் சோமாறி நீ கம்னு கிட என்று சொல்லிட நரம்புகள் வழியே தனது இலக்கை அடைகின்றது.

திருவாளர் கவலைக்கு உடம்பில் அதன் இலக்கென்பது வயிற்றுப்பகுதியில் இருப்பதால் மனிதர்களின் ஒவ்வொரு கவலையின் பிரதிபலிப்பும் இங்கே வந்து முடிகின்றது. பலருக்கு வாழ்க்கை முழுக்கப் போராடக்கூடிய (ஆரோக்கிய) போராட்டங்களும் இங்கிருந்தே தொடங்குகின்றது.

நாம் உண்ணும் உணவை செறிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric Acid )என்பதை இயல்பாகவே இயற்கை உருவாக்கி வைத்துள்ளது.

இந்த அமிலத்தை ஒரு குடுவையில் எடுத்து ஒரு இரும்புத்துண்டை அதில் போட்டு வைத்தால் இருந்த இடம் இல்லாமல் மாயமாகக் கரைந்து விடும். இது இல்லாவிட்டால் நாம் அம்பேல்.

பர்கர் சாப்பிட்டாலும், பாயாசம் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் சென்றால் செரிமானமாக மாறாவிட்டால் ஆய் ஊய் என்று கத்தி ஊரை கூப்பிட்டு இறுதிப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். அளவோடு வளமோடு என்பது உடம்பில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உள்ளது. இப்படித்தான் யாரோ ஒருத்தரு நம்முடைய கண்ணுக்குத் தெரியாத சூத்திரத்தை நிரலியாக எழுதிவைத்துள்ளனர். இதைப் பலர் விதி என்கிறார்கள். புத்திசாலிகள் மதி என்றும் சொல்கின்றார்கள்.

நல்லா பசிக்குது. போய் ஒரு கட்டு கட்டனும்ன்னு நீங்க கிளம்பிட்டீங்கன்னா உள்ளே இந்த அமிலம் சுரக்கத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம். பசித்த போது சாப்பிட்ட முடியாதவர்களுக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரந்து இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa)படலத்தைச் சிதைத்து புண்ணாக மாற்றுகின்றது.

உள்ளே உள்ள வயிற்றுச் சுவரே பல சமயம் சாப்பாடாக மாறிவிடுகின்றது. இந்தக் குடல் புண் உருவாக ஏராளமான காரணங்கள் இருந்தாலும் மற்ற எல்லாவற்றையும் விடக் கவலைகள் கொடுக்கும் அல்வாத் துண்டுகள் தான் நம் ஆரோக்கியத்தை விலை பேசத் தொடங்கி விடுகின்றது.

குடல் புண்ணில் இரண்டு வகை உள்ளது.

வாயுக்கோளாறால் உருவாக்குவது Gastric Ulcer

சிறுகுடலில் ஏற்படும் புண் Duodental ulcer

இரண்டையும் சேர்த்து உருவாவதை peptic ulcer

நாம் பேசப்போவது மனித உடற்கூறியல் பற்றியல்ல.

இந்தக் குடல்புண்களை அதிக அளவு உருவாக்கும் தீவிரவாதியான கவலையைப் பற்றியே.

கலைகளில் விருப்பமில்லாதவர்களைக் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால் கவலையில்லாத மனிதனை சித்த சுவாதீனம் இல்லாதவன் என்றே தற்போதைய சமூகம் அர்த்தப்படுத்துகின்றது.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளைப் போலவே எப்போதும் நம்மோடு இருப்பவை பயமே. சின்னப் பயம், பெரிய பயம் என்ற பாரபட்சமின்றி எப்போதும் ஏதோவொரு பயம் நம்மோடு இருக்க அதுவே நமக்குத் தேவையானதாகவும் அன்றாடச் செயல்பாடுகளையும் அதுவே தீர்மானிக்கின்றது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, குழப்பம் போன்ற பல காரணிகள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றது.

விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் கொண்டு போய் விடுகின்றது. இவற்றைத் தவிர இந்த மன அழுத்தத்தை நாமே விலை கொடுத்து வாங்கவும் செய்கின்றோம்.

அதாவது புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை போன்றவையே. இந்த மன அழுத்தம் உருவாக இயல்பாகவே பயமும் பங்களாளியாக நம்முடனே தங்கி விடுகின்றது.

பல சமயம் பயங்கள் சொல்லும் வாழ்க்கையே நம்மைப் பக்குவப்படுத்தவும் செய்கின்றது.

ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்குத் தேவைப்பட்டாலும் அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். காரணங்கள் அறியப்படாவிட்டால் மன அழுத்தம் முதல் மனநோய் வரைக்கும் என்ற கட்டுரைக்கு நமக்குத் தகவல் கிடைத்து விடும் வாய்ப்புள்ளது.

பதட்டம் பயத்தை உருவாக்குகின்றது. பயம் கவலை வரவேற்கின்றது. கவலைகள் மன அழுத்த கதவை திறக்க இனம் கண்டு கொள்ளாத போது உலகே மாயம் வாழ்வே மாயம் என்று தெருவில் அலையும் பரதேசி வாழ்க்கை அறிமுகமாகின்றது.

குறிப்பிட்ட செயலை செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் முக்கியம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ எல்லையை மீறத் தொடங்க மனதில் இனம் புரியாத வேகமும் உருவாகி விடுவதைக் கவனித்தால் புரியும்.

நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன. நேர்மறையென்பது சாலை விதிகளை மதித்து வண்டியை ஓட்டுதல். எதிர்மறையென்பது வலது பக்கம் கையைக் காட்டி இடது பக்கம் வண்டியை திருப்புதல் போன்றது. காலையில் எழும் வரையிலும் உயிரைப் பற்றித் தெரியாத உடம்பு கண்விழித்து உலகத்தைப் பார்க்கத் தொடங்க ஒவ்வொரு சிந்தனையிலும் இந்தப் பயங்கள் நம்மில் ஒட்டிக் கொண்டுவிட எழுந்து ஓட வைக்கின்றது.

பாடங்களைச் சரியாகச் சொல்லத் தெரியாத போது ஆசிரியரை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம்? என்ற பயம் நம் வாழ்க்கையைத் தொடங்கி வைக்கின்றது. படித்து முடித்துச் சரியான வேலைகள் கிடைக்காத போது எதிர்கொள்ளும் கேள்விகளை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற பயம் தொடர வைக்கின்றது.

மனைவி கேட்ட பூ முழம் முப்பது ரூபாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது வாழ்க்கை குறித்த அக்கறை பயம் வருகின்றது. மகளுக்குத் திருமணம், வீட்டு வாடகை, வங்கியில் மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகை என்று பயமென்பது வாழ்நாள் முழுக்க வளர்பிறையாகவே உள்ளது.இதற்குத் தேய்பிறை என்பதே இல்லை.

இன்றைய மருத்துவம் அனைத்தையும் கூறுபிரித்துக் காட்டினால் மனம் சார்ந்த செயல்பாடுகளை ஒரு அளவுக்கு மேல் அதனால் பாகுபடுத்திப் பிரித்துக் காட்ட முடியவில்லை.

ஆனால் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் மனமே மருந்து என்று எளிதாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டது.

ஆனால் இந்த மனத்திற்கு எந்த மருந்துகளும் கடைசி வரையிலும் வேலை செய்வதில்லை. பயிற்சி தான் தீர்வாக உள்ளது. அந்தப் பயிற்சியைக் கொண்டு வர முடியாமல் தான் நாம் தடுமாறுகின்றோம். தடுமாற்றமே தடம் புரள வைக்கின்றது.

தற்போதைய சமூகத்தில் ஆழ் மன பயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரமாக இன்று இருப்பவை பணம்.

இந்தப் பணமே எதிர்காலப் பயத்தை உருவாக்குகின்றது. வளர்க்கின்றது. நாமும் அதையே விரும்புகின்றோம் என்பதால் பயங்களை நம்மோடு ஒட்டி வாழக்கூடிய ஒன்றாகவே இருந்து விடுகின்றது.

பணமில்லாதவன் பசிக்காக ஓட அதுவே பணமிருப்பவர்கள் உடம்பை குறைக்க ஓடுகின்றார்கள். இரண்டு செயலும் ஒன்று. ஆனால் காரணங்கள் வெவ்வேறு.

அறிவு வளர வளர சிந்தனைகளின் வளர்ச்சியை இன்றைய சமூகம் கொண்டாடுகின்றது. உருவாகும் கேள்விகளுக்குப் பதில் தேட அதுவே வளர்ச்சியின் பாதை என்கிறார்கள். எதையும் கேள்வியாகக் கேட்டுப் பழகு என்றும் சொல்கின்றார்கள்.

ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உள்ளது. எதையும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மனதில் குழப்பங்கள் உருவாவது இல்லை. இருப்பதே சிறப்பு என்கிற சிறிய வட்டமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை இயல்பாக அனுபவித்து வாழ முடிகின்றது.

தற்போது வெற்றி என்பதை எளிதாக வரையறைத்து வைத்துள்ளனர்.

வெற்றி என்பது என்ன?

தேவையான அளவுக்குப் பணம் இருந்தால் அவன் வெற்றி பெற்றவன்.

மிதமிஞ்சிய பணமிருந்தால் அவனே சாதனையாளன்.

ஒருவனிடம் இருக்கும் பணமே சகலத்தையும் தீர்மானிக்கின்றது. அந்தஸ்த்து, அதிகாரம், செல்வாக்கு என்று சகல திசையிலும் பரவி நிற்கின்றது. பணம் தவிர மற்றவற்றைப் பேசுபவர்களை இறுதியாகப் பரதேசி என்கிற நிலை வரைக்கும் நம்மவர்கள் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றார்கள்.

பணத்தை மெத்தைக்குக் கீழே வைத்து தூங்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கமும் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் மறுபக்கம் போராடிக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

பணத்தைத் தேவைக்கு அதிகமாகச் சேர்த்தவர்களும் எதையும் முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

வாழ்க்கை தேவைக்குத் தேடிக் கொண்டிருப்பவர்களும் ஆசைப்படுவதை அடைய முடிவதில்லை.

இந்தப் பணம் ஒவ்வொரு மனிதரையும் நாள்தோறும் மாற்றிக் கொண்டேயிருந்தாலும் நமக்குப் பணத்தாசை குறைவதில்லை.

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

(தேவையான சமயத்தில்) அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.