20
19. ஆன்மீகம் என்பது யாதெனில்?
இன்று வரையிலும் யாரோ, ஏதோவொரு சமயத்தில் பேசி என்னைக் கோபப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இருபது வருட திருப்பூர் வாழ்க்கையில் நேற்று வரையிலும் புதிதாகச் சந்திக்கும் எவருக்கும் காரைக்குடி என்ற ஊர் பெரிய அளவுக்குத் தெரிந்த ஊராக இல்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு.
டக்கென்று காரைக்கால் தானே? என்பார்கள்.
குறிப்பாக இங்குள்ள முதலாளிகளுக்குப் பிள்ளையார்பட்டி தெரிந்த அளவுக்குக் காரைக்குடி மேல் அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை.
அப்படியா? என்று போற போக்கில் இழுத்தபடியே சென்று விடுவார்கள்.
ரொம்ப நெருங்கிக் கேட்டால் அந்தப் பக்கம் சாப்பாடு நல்லாயிருக்கும்லே? என்று வெறுப்பேற்றுவார்கள்.
இதே போலத்தான் ஆசான் என்னை மேலும் கீழும் பார்த்தார். பயணத்திட்டம் வகுத்துக் கிளம்பிய சமயத்தில் திருவாவாடுதுறை என்ற பெயரை ஆசான் சொன்னபோது நானும் புரியாமல் முழித்தேன். உங்களுக்குத் தெரியாதா? என்று ஆச்சரியமாகப் பார்த்தார்.
உண்மையிலேயே அன்று தான் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இப்படி ஒரு ஊர் உள்ளது என்றும், அங்குப் பிரபலமான ஆதீனம் உள்ளது என்பதையும் அறிந்தேன்.
தனுஷ்கோடியில் இருந்து கிளம்பி இராமநாதபுரம் தொடங்கிக் கடற்கரைச் சாலை பயணம் வழியாகப் பட்டுக்கோட்டை வந்து அடைந்தோம். அங்கே இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாவாடுதுறை வந்து சேர்ந்தோம். திருவாவாடுதுறைக்கு மிக அருகே மயிலாடுதுறை உள்ளது.
1984 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு வந்துள்ளேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு பயணம். இரவு நேர பயணமாக இருந்த போதிலும் சாலையின் இரண்டு பக்கமும் எந்தப் பெரிதான மாற்றமும் இல்லை. அதே குறுகிய சாலைகள். ஒவ்வொரு இடங்களிலும் கிராமத்து முகம் கொண்ட சிறிய ஊர்கள்.
திருவாவாடுதுறை இரண்டுகெட்டான் போலவே உள்ளது. கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் என்பதால் மக்கள் கூடும் இடம் போலத்தான் நகரப்பகுதிகள் உள்ளது. பெரிதான ஆடம்பரங்கள் எங்குமே இல்லை. முதன் முதலாகச் சூடிதார் அணிந்த கிராமத்துப் பெண்ணுக்கு எப்படித் தடுமாற்றம் இருக்குமோ?
அப்படித்தான் இரண்டுங்கெட்டானாக முக்கியச் சாலைகள் இருந்தன.
ஊருக்குள் நுழைந்து முக்கியச் சாலையில் இருந்து பிரிந்து போடப்பட்டுள்ள தனியார் தார் (இந்தப் பகுதிகள் ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமாக இருந்த பகுதிகள்) சாலையின் வழியாக ஆதீனத்திற்குள் வந்து சேர்ந்தோம். பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள மடம் மற்றும் அதனைச் சார்ந்த கோவில் உள்ள பகுதிகள். சுற்றிலும் உள்ளே பணிபுரிபவர்களுக்கெனக் கட்டப்பட்ட வீடுகள். உள்ளேயே நீண்ட அகண்ட தார் சாலைகள். இரண்டு புறமும் மரங்கள். வீடுகள் ஒவ்வொன்றின் வயதும் ஏறக்குறைய நூற்றாண்டுகளைக் கடந்ததாக இருக்கக்கூடும்.
ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் வயல் வெளிகள். நீண்ட மதில் சுவர்கள். பாதிக் காரைக்குடி பகுதியில் உள்ள கட்டிங்கள் போலவும் மீதி ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது போலவும் இருந்தது. அருகே இருந்த நகர்ப்புற வளர்ச்சிக்குக்குக் கொஞ்சம் கூடச் சம்மந்தம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. திரைப்படம் எடுக்கத் தேவைப்படும் பகுதியாகவும் எனக்குத் தெரிந்தது.
மடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது பண்டாரங்கள், பரதேசி போன்ற வார்த்தைகள் உங்கள் நினைவுக்கு வருமென்றே நினைக்கின்றேன். ஆனால் இந்த மடத்தின் உள்ளே சென்று பார்க்கப் பார்க்க மிரண்டு போய் மயங்கி விழாத குறை தான். ஒவ்வொரு பகுதியிலும் கலையம்சமும், அலங்காரங்களும் சேர்ந்து விரிசல் விடாத சுவற்றில் வித்தியாசமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளும் ஓராயிரம் சரித்திர சம்பவங்கள். உள்ளே இருந்த அறிவிப்புப் பலகையை வைத்து யூகித்தபடி முறைப்படியான ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து தொடங்குகின்றது.
இந்த மடத்தின் பூர்விக வரலாறு, ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள், படிப்படியான வளர்ச்சிகள், ஆதீன பதவிகளில் இருந்தவர்கள், அவர்களின் சாதனைகள், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், பகுதிகள், நிலங்கள் குறித்த குறிப்புகள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது இந்திய அரசின் பட்ஜெட் தான் என் நினைவுக்கு வந்தது.
ஒரு மினி அரசாங்கமாகவே ஆதீனங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த ஆதீனங்கள் மூலம் யாரும் லாபம்? என்றொரு பெரிய கேள்வி உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். அல்லது தொடர்ந்து படித்து வரும் போது உங்களுக்கே புரியும்.
இந்தப் பகுதிக்குள் நுழைந்த பின்பு வெளியுலகமே துண்டித்தது போலவே இருந்தது. உடம்பில் இருந்த படபடப்பும், வேகமும் குறைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை தந்த சுகத்தை உடனடியாக அனுபவிக்க முடிந்தது.
ஆசான் திருச்செந்தூரில் ஐந்தாம் வகுப்பு முடித்த பின்பு குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையில் திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு வந்தார்.
காரணம் ஆசானின் இரண்டு சகோதரிகளின் கணவர்கள் இந்த மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் குடும்பம் என்பதால் மடத்தில் நடக்கும் அத்தனை விசேடங்களுக்கும், மற்றும் கோவிலுக்குப் பூக்கள் கட்டி கொடுப்பது தான் முக்கிய வேலையாக இருந்தது. ஆசான் இங்கிருந்தபடியே பள்ளிக்குச் சென்றதோடு கூடவே அப்போது பதவியில் இருந்த ஆதீனத்திற்கு உதவியாளராகவும் இருந்தார்.
இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமான அனைத்து இடத்தில் இருந்தும் வரி, வசூல் போன்றவற்றைக் கவனித்துக் கொண்டதும் ஆசானே. வரி வசூல் என்றதும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நன்செய் மற்றும் புன்செய் பூமிகள். இதற்கு மேலாக ஆதீனத்திற்குச் சொந்தமாக உள்ள வாடகைக்குக் கட்டி விடப்பட்ட கடைகள், கட்டிடங்கள் இன்னும் பலப்பல. இந்த ஆதீனத்திற்குச் சொந்தமான பல இடங்கள் திருச்செந்தூரில் இருந்தது. ஆனால் அது பல தனியாருக்குச் சொந்தமானதாக மாறியுள்ளது.
ஆசானுடன் ஆதீனத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற போது சுவராசியம் ஏதுமில்லாமல் உள்ளே ஏதாவது ருசியாகச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் ஆசான் வாயைத் திறந்தால் திருமந்திரத்தை பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்தவுடன் நெற்றி நிறையப் பட்டை. கழுத்தில் கொட்டை மற்றும் மணிகள் உள்ள ஆபரணங்கள் என் கன ஜோராக மற்றவர்கள் எழுவதற்கு முன்பே குளித்து முடித்துத் தயாராக இருப்பார்.
அதாவது பாருங்க….. ஜோதி என்று ஆசான் தொடங்கினார் என்றால் அரை நூற்றாண்டு கதையைச் சொல்லி முடிக்கும் போது எனக்கு மீண்டும் பசியெடுக்கத் தொடங்கி விடும். இதன் காரணமாகவே ரெண்டு மூணு தேங்காய் மூடிகளை எப்போதும் என்னருகில் தயாராக வைத்திருப்பேன்.
திருவாவாடுதுறையில் வாழ்ந்த போது ஆசான் தங்கியிருந்த வீடு மற்றும் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்த்த போது எனக்குப் பெரிதான ஆச்சரியமல்ல. காரணம் எங்கள் பகுதியில் ஒவ்வொரு செட்டியார் வீடுகளின் அமைப்பைப் போல முற்றம் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள், ஊஞ்சல், கரி அடுப்பு, போன்ற அத்தனை பழங்காலத்துப் பழக்கவழக்கங்கள் உள்ள அமைப்பாக இருந்தது.
கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒன்று மட்டுமே அங்கே நான் பார்த்த நவீன பொருள். மற்றவை எல்லாமே 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விசயமாகவே இருந்தது.
திருமூலர் பற்றி முழுமையாக முதல் முறையாக அறிந்து கொண்டது, ஆதீனங்களின் வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆதீனங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட விபரங்கள், சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், அதிகாரப் போட்டிகள், தற்போது பதவியில் இருக்கும் ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதற்குப் பின்னால் உள்ளவர், அதிகாரப் போட்டியில் பாதிக்கப்பட்டவரை நேரிடையாகச் சந்தித்தது அவருடன் உரையாடிய போது மடத்திற்குள் நடந்த, நடந்து கொண்டிருக்கும் திருட்டுத்தனங்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் என ஒரு திகில்படத்தின் கதைக்குச் சமமாகப் பல விசயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் வருடந்தோறும் ஆதீனத்திற்கு வர வேண்டிய வருமானம் என்பது ஏறக்குறைய நூறு கோடி ரூபாய். ஆனால் வந்து கொண்டிருப்பதே இருபதில் ஒரு மடங்கு கூட இருக்குமா? என்று தெரியவில்லை. முக்கால்வாசியை விற்றுத் தினறுவிட்டார்கள். இது தவிர ஆதீன சொத்துக்களைத் தினந்தோறும் சுரண்டிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
தமிழ்நாடு முழுக்க இந்த ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட பல இடங்கள் உள்ளது. இதே போலக் குத்தகைக்கு விடப்பட்ட விவசாயப் பூமிகள். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பலரால் வழங்கப்பட்ட நன்கொடைகள். இதன் மூலம் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் இது போன்ற மடங்களின் மூலம் வளர்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு பலரும் வழங்கி உள்ளனர்.
ஆனால் காலமாற்றத்தில் ஒவ்வொன்றும் மாறியதைப் போலவே இன்று ஆதீனங்களின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள் அனைத்தும் மாறிப் போய் ஊழலில் திளைத்து, உண்மைக்கு இடம் இல்லாத அளவுக்கு நிர்வாகம் கெட்டுப் போய் இறுதி மூச்சில் தான் ஆதீனங்கள் உள்ளது.
பலருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டுவதற்குள் ஆதீனம் என்ற பெயரே இருக்காது என்கிற அளவுக்கு இந்த இடமே விற்பனை பூமியாக மாறிப் போய்விடும் என்றார்கள்.
ஆசானைப் பொருத்தவரையிலும் ஆன்மீகம் தான் அவர் மூச்சு பேச்சு எல்லாமே. ஆனால் நான் அவற்றைக் கடந்து வந்து விட்டேன். தற்பொழுது எனக்குத் தினசரி வாழ்க்கையில் அன்றைய தினம் மட்டுமே முக்கியமாகத் தெரிகின்றது.
நேற்றைய வாழ்க்கையும், நாளைய வாழ்க்கையும் குறித்த யோசனைகளும், பயமும் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்மீகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.
எனக்குத் தற்போது எது குறித்தும் வெறுப்பும் இல்லை. விருப்பும் இல்லை. சற்று விலகி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருப்பதால் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ முடிகின்றது.
இந்த நிலையை அடைய மற்றவர்களால் முடியுமா? என்றால் அவரவர் அனுபவங்கள் தான் வழிகாட்டியாக இருக்க முடியும். பயணம் முழுக்க ஆசான் பேசிய முக்கிய விசயங்களைக் காதில் வாங்கிக் கொண்டு மற்ற கற்பனை புராணக்கதைகளைக் காற்றோடு விட்டு விடுவதுண்டு.