"

15

14.கடற்கரைச் சாலை – பயணக்குறிப்புகள் 4

இந்தப் பயணத்தில் ஆசானுக்கு மிகவும் பிடித்த, அவருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் மதுரை காந்தி மியூசியத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் எத்தனை வளர்ச்சிகள் வந்த போதிலும், திடீர் மாற்றங்களினால் அந்த நகரத்தின் சாயலே மாறிய போதிலும் மதுரை நகரம் மட்டும் தன் இயல்பான தோற்றத்தில் தான் இன்னமும் உள்ளது. ஆனால் மதுரை மண்ணுக்கு உண்டான இயல்பான சாப்பாட்டுச் சுவையில் பண ஆசை புகுந்து விட்டதால் உணவக முதலாளிகளின் சேவை மனப்பான்மை எல்லை கடந்து போய்விட்டது.

மீன் குழம்பு என்ற பெயரில் சாம்பாருக்கு அண்ணன் போன்ற ஒரு தண்ணீரை இலையில் ஊற்றியவனைப் பார்வையால் எறித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பீடாவை வாங்கி மென்று துப்பிய பின்பே அந்தக் கேவலமான சுவையின் தன்மை நாவிலிருந்து அகன்றது.

பெரும்பாலான பெரிய உணவங்களில் கட்சி கரை வேஷ்டி கட்டிய மகான்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது. கும்பலாக வந்து சாப்பிடுகின்றார்கள். யாரோ ஒருவர் காந்தி தாளை (1000 ரூபாய்) எடுத்துக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் வளர்த்திருக்கும் தொப்பை தொந்தரவு செய்தாலும், போட்டிருக்கும் சட்டை பட்டன்கள் தெறித்து விழுவது போல இருந்த போதிலும் இரண்டு தடவை மீன் குழம்பு, இரண்டு தடவை கறிக் குழம்பும் வாங்கிக் கொண்டு, சோற்றில் கோடு கிழித்துக் கபடி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏலெய் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான்யா சாப்பிட்டேன்என்று பெருமூச்சோடு மனதிற்குள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தேன்.

முதல் முறையாக மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தைப் பார்த்த போது மனதிற்குள் இனம் புரியாத வெட்கம் வந்தது. இப்படி ஒரு இடம் இருப்பதும், அதன் தலவரலாற்றைத் தெரிந்து கொண்ட போது ஆச்சரியமாக இருந்தது. அங்கும் மக்கள் அதிக அளவு வந்து போய்க் கொண்டிருப்பதும் எளிய விலையில் ஏராளமான கைவினைப் பொருட்கள் விற்பதும் காந்தீயம் இன்னமும் மக்கள் மனதில் வாழ்கின்றது என்ற நம்பிக்கையை உருவாக்கியது. மதுரையைப் பற்றிக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி நண்பர்கள் பேசத் தொடங்கும் பொழுதே சில மாதங்களுக்கு முன் () சில வருடங்களுக்கு முன் ஒரு பெரிய கலவரம் () கொலை நடந்ததே? இது இந்தப் பகுதியில் இந்த இடத்தில் தான் நடந்தது என்று தங்கள் பேச்சைத் தொடங்குகின்றார்கள்.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி பயணத்தை முடித்து விட்டு மீண்டும் மற்றொரு கடற்கரைச் சாலை வழியாகத் திருவாவாடுதுறை சென்றோம். இரவு நேர பயணமாக அமைந்த காரணத்தால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவனிக்கக்கூடிய வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. எனவே தனுஷ்கோடியில் நான் பார்த்த கவனித்த சில விசயங்களைப் பற்றிச் சொல்லிவிடுகின்றேன்.

கடந்த ஐந்து வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சிறிய பெரிய புத்தகங்களை ஒழுங்காகப் படித்தது ஈழம் சார்ந்த வரலாற்றை மட்டுமே என்ற காரணத்தினால் நான் பார்க்காத ஊராக இருந்தாலும் தனுஷ்கோடி குறித்து ஓரளவிற்குத் தெரியும். குறிப்பிட்ட இடம் அல்லது பகுதி, நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு கொஞ்சமாவது தலவரலாறு தெரிந்து இருந்தால் உங்களின் பார்வை கூர்மைப்படும். இல்லாவிட்டால் சென்றும் பிரயோஜனமிருக்காது.

இதற்கு மேலாக எழுத்தின் வாயிலாகப் படிப்பதற்கும் அந்த இடங்களுக்கே நேரிடையாகச் செல்லும் போது நம்மில் உருவாகும் சிந்தனை மாற்றங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். தனுஷ்கோடி குறித்த என் முழுமையான எண்ணமும் இப்படித்தான் மாறியது.

தரைப்பாலத்தைக் கடந்து உள்ளே இராமேஸ்வரம் நுழைவதற்கு முன்பே தனுஷ்கோடிக்குச் செல்லும் தார் சாலை பிரிகின்றது. சாலை வசதி மிக அற்புதமாகப் போடப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் மரங்கள். உப்புக்காற்று என்பதால் இலைகளில் ஆரோக்கியமற்ற, கம்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மரங்களும், எப்பொழுதோ அடித்து வரப்பட்ட மணல் குவியல்களையும் பார்க்க முடிந்தது.

பயணத்தூரம் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ரசிப்பதற்கான விசயங்கள் நிறைய இருந்த போதிலும் அவசர கதியில் செயல்பட வேண்டிய சூழ்நிலையின் காரணத்தினாலும் பலவற்றைச் சரியாக உள்வாங்க முடியவில்லை. எனக்குப் பயணங்களில் கடல் வழி பயணங்களை ரொம்பவே விரும்புவேன். கண்களுக்குத் தெரிந்த வரையிலும் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்தக் கடல் சொல்லும் பாடங்களை, பயங்களை ரசிப்பதுண்டு.

மேலும் படகு சவாரி என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதை விட முக்கியமானதொன்று.

சுடச்சுட சுவையான மீன்கள் வகை வகையாகக் கிடைக்கும். இதை மனதில் வைத்துக் கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டு அங்கே சென்ற போது சூழ்நிலை வேறு விதமாக இருந்தது.

தார் சாலை முடியும் இடத்தில் தனுஷ்கோடி செல்லும் பகுதிக்கு பல லொக்கடாவகையான வேன்கள் மூலம் அழைத்துச் செல்கின்றார்கள். அதுவும் வசதியாகப் பத்துப் பேர்கள் உட்கார்ந்து செல்ல வேண்டிய வாகனத்தில் 20 பேர்களைச் சில சமயம் அதற்கு மேலும் ஏற்றித் திணித்துக் கொண்ட பிறகே வண்டியை எடுக்கின்றார்கள். குறைவான நபர்கள் என்றால் வண்டி எடுக்கப்படமாட்டாது. ஒன்றன் பின் ஒன்றாக இதே போல ஒவ்வொரு லொக்கடாவும் தயாராக உள்ளது.

கூட்டம் சேரச் சேர ஒன்றன் பின் ஒன்றான முறை வைத்து செல்கின்றார்கள். ஒருவருக்கு ரூபாய் இருபது. கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒட்டுநர் பையனிடம் வண்டி மூலம் வருகின்ற லாப நட்டங்களையும், இந்தத் தொழிலுக்குப் பின்னால் உள்ள சவால்கள், தினந்தோறும் எவருக்கெல்லாம் மாமூல் கொடுக்க வேண்டிய விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் 15 முதல் 22 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் படிப்பை பாதியில் விட்டு மீன் பிடி தொழிலில் இருந்து வெளியே வந்த பின்பு இது போன்ற துறைகளில் இறங்கியுள்ளனர். நிச்சயம் ஒரு நபருக்கு தினசரி ஆயிரம் ரூபாய் வந்து விடும் அளவுக்குச் செழிப்பாகவே உள்ளது.

குடிப்பழக்கம் இல்லாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

எந்த இடத்திலும் மீன் பொரித்து விற்பனை செய்யும் நபர்களே இல்லை என்கிற அளவுக்குச் சூழ்நிலைகள் மாறியுள்ளது.

காரணம் கேட்டால் விலை கட்டுபிடியாகவில்லை என்கிறார்கள். நாங்கள் பயணித்த போது மூன்றில் இரண்டு மடங்கு வடநாட்டு மக்கள் தான் இருந்தார்கள். ஓட்டுநர்கள் மற்றும் குறிப்பிட்ட வண்டி சார்ந்து இயங்கும் எந்தப் பையன்களுக்கும் ஹிந்தி தெரியவில்லை. அதே போல வரும் வட நாட்டு மக்களுக்கும் மொழி குறித்த அக்கறையும் இன்றிச் சமாளிக்க ஒரு சில வார்த்தைகளாவது தெரிந்து இருப்பார்கள் என்று அவர்களது உரையாடல்களைக் கவனித்தேன். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அத்தனை சிலாக்கியமாக இல்லை.

அதே போல வண்டி இளைஞர்களும் ஒரு நபருக்கு இருபது ரூபாய் தொடக்கத்திலே வாங்கி வைத்துக் கொண்டு விடுகின்றார்கள்.

வந்தா வா. வராட்டி போஎன்கிற மனோநிலையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு இளைஞனும் நல்ல உடல் வலுவும், அசாத்தியமான தைரியசாலிகளாகவும் இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் ஒட்டும் ஒவ்வொரு வண்டியும் பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி போலவே உள்ளது. டயரும், என்ஜினும் மட்டும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற அத்தனை பாகங்களும் பயணத்தின் போது காற்றோடு பேசுகின்றது.

வண்டி எடுத்த முதல் நொடி முதல் அவர்கள் கொண்டு போய் இறக்கி விடும் தனுஷ்கோடியில் உள்ள குறிப்பிட்ட எல்லை வரைக்கும் மணலில் தான் பயணம்.

நாம் நடந்து சென்றால் கூட அடுத்த அடி எடுத்து வைக்க யோசிக்கும் அளவுக்குத் தண்ணீர் கலந்த மணலும், புதைகுழிகள் போல உள்ள சிக்கல் நிறைந்த பாதையது. கொஞ்சமல்ல நிறையப் பயமாகவே இருந்தது.

ஆனால் ஒட்டுநர் பையன் சர்வசாதாரணமாகக் கையாண்டதைப் பார்த்த போது வண்டியின் பலவீனத்தை விட அவனின் புஜபலாக்கிரமத்தை பாராட்ட வேண்டும் போலத் தோன்றியது. அரை மணி நேர பயணம். மணலும், தண்ணீர் கலந்த மணலும் சுற்றிலும் கடல் நீருமான இந்த உலகத்தைப் பார்த்த போது, தனுஷ்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து உரையாடிய போது மனதிற்குள் இப்படித்தான் தோன்றியது.

நாம் எவ்வளவு கொடுத்து வைத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் தான் அதிகமாகத் தினசரி வாழ்க்கையில் அலுத்துக் கொண்டு வாழ்கின்றோம்“.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.