"

12

11.கடற்கரைச் சாலை பயணக்குறிப்புகள்

ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்களைப் பற்றிக் குறும்படம் எடுக்கத் திட்டமிடுதலுக்காகச் சென்று வந்த ஊர்களின் பார்வையும் சந்தித்த மனிதர்கள் தந்த தாக்கமும் குறித்த என்னுடைய எண்ணத்தைச் சில அத்தியாயங்களில் எழுதி வைத்து விடுகின்றேன்.

இதற்காக நான் பயணித்து வந்த தூரம் ஏறக்குறைய 1400 கிலோமீட்டர். சென்னையில் இருந்து கடற்கரைச் சாலை வழியாகத் தனுஷ்கோடி. அங்கே இருந்து மீண்டும் கடற்கரைச் சாலை வழியாகப் பட்டுக்கோட்டை. இதன் தொடர்ச்சியாகக் கும்பகோணம் அருகே உள்ள திருவாவாடுதுறை.

கடைசியாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூருக்குத் திரும்பி வந்தேன்.

நான் இன்னமும் தமிழ்நாட்டிற்குள் பார்க்க வேண்டிய ஊர்கள், பயணம் செய்ய நினைக்கும் ஊர்கள் பல பட்டியலில் இருந்தாலும் இந்தப் பயணத்தின் மூலம் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்த பல ஊர்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை என்ற நவீன வசதிகள் கொடுத்த சுகமான பயணத்தை, பயத்தை நேரிடையாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது.

சென்னை

ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் சென்று திரும்பி வரும் போது ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் பாடங்களைக் கற்றுக் கொண்டு வருவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத்தின் அவசர வாழ்க்கையை விடப் பெருநகர அவசரங்கள் மனிதர்களைப் படிப்படியாக யோசிக்கவே முடியாத அளவுக்கு எந்திரமாக மாற்றி வைத்து விடுகின்றது. இது போன்ற பெரு நகரங்களில் சராசரி வருமானம் மற்றும் சராசரிக்கும் கீழே உள்ள அன்றாடம் காய்ச்சி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் அவஸ்த்தைகள் தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை உருவாக்குகின்றது.

இந்த வர்க்கத்தினர் இதனையே விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். வேறு எந்த மாற்று ஏற்பாடு குறித்தோ, வேறு இடங்களில் உள்ள வாய்ப்புகளைக் குறித்தோ யோசிக்க மனமில்லாது வாழ்பவர்கள் தான் என் பார்வையில் சாதனையாளர்களாகத் தெரிகின்றார்கள்.

பெருநகரங்கள் ஒவ்வொரு மனிதர்களையும் காந்த பூமி போல இழுத்து வைத்துள்ளது.

பெரிய வீடுகள், வசதியான வீடுகள் என்று எப்படி இருந்தாலும் சென்னையில் கூவம் நதி ஓடும் பாதையில் மற்றும் அதன் அருகே உள்ள வீடுகளிலும் மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரையிலும் வாழ்வதும் உறங்குவதும் தனிப்பட்ட பயிற்சி எடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் போலத் தெரிகின்றது.

கொசுக்களின் ரீங்காரம் தான் இந்தப் பகுதிகளில் வாழ்பவர்களின் தேசிய கீதமாக உள்ளது. கொசுக்கள் இரவில் வந்து நம்மைக் கடிப்பது இயல்பானது. ஆனால் இரவில் கொசுப்படைகளின் மத்தியில் வாழ்வதும், கட்டியிருக்கும் கொசு வலையைச் சுற்றிலும் இடைவிடாது போராடி பணி செய்யும் கொசு பகவான்களின் கருணையே கருணை.

கனவுத் தொழிற்சாலை

கடந்த இருபது வருடங்களில் சென்னைக்குச் சென்று வரும் போது அங்கே தனிப்பட்ட நட்பு வட்டத்தில் நான் சந்தித்த பத்துப் பேர்களில் ஒருவராவது திரைப்படத்துறை சம்மந்தபட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

சென்ற மாதம் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அவரவர் கண்கள் முழுக்க மாறாத அதே கனவு. லட்சிய வேட்கை. இடைவிடாத முயற்சி. தனக்குத்தானே சமாதானம்.

பறிபோன இளமை. அன்றாடச் செலவுக்கே தகிங்ணத்தோம் என்று வாழ்க்கை இருந்தாலும் அந்த மாயச் சூழலில் இருந்து வெளியே வர முடியாதவர்களைப் புரட்டப் புரட்ட வந்து கொண்டேயிருக்கும் பெரிய புத்தகத்தைப் போலவே தெரிகின்றார்கள்.

நாளை விடிந்து விடும். அடுத்த நாள் உலகம் முழுக்க நம்மைப் பற்றிப் பேசப் போகின்றார்கள் என்ற இந்த வார்த்தைக்குள் தங்களை அடகு வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். குடும்பம், உறவுகள் அனைத்தும் மறந்து, துறந்து தனி மனிதராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாறிப் போன சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் வைத்திருக்கும் கனவுகளை அடை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அருகே அமர்ந்து ஆறுதலாகவும் பேச முடியவில்லை. அவரவர் படுகின்ற துன்பங்களைக் காணச் சகிக்க நமக்குத் தைரியமும் போதவில்லை.

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகள்

சென்னையிலிருந்து காலை ஆறு மணிக்குக் கிளம்பினால் சற்றுத் தப்பித்துச் சென்னைக்கு வெளியே வந்து விடலாம். அலுவலக நேரம் தொடங்கும் போது சாலையில் பயணிக்க நமக்கு அவசியம் தியான மன நிலை வேண்டும். ஒவ்வொரு இடங்களில் உள்ள தடைகளும், சாரை சாரையாகத் தாண்டி செங்கல்பட்டு வந்து சேர்ந்தாலும் விடாது துரத்தும் கருப்பு போலவே போக்கு வரத்து நெரிசல் நம் விழிகளைப் பிதுங்கிப் போக வைக்கின்றது.

குளிரூட்டப்பட்ட வசதியான வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் போது விமானப் பயணம் போலவே உள்ளது. ஆனால் நாங்கள் பயணித்த 1400 கிலோமீட்டர் பயணத் தூரத்திற்குச் சுங்கவரியாக மட்டும் 1700 ரூபாய் செலவளித்தோம். மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஒரு இடத்தில் பகல் கொள்ளை ரீதியாகக் கட்டண வசூல் செய்கின்றார்கள்.

செங்கல்பட்டில் இருந்து இராமநாதபுரம் செல்ல ஒட்டுநர் தேர்ந்தெடுத்த கடற்கரைச் சாலை என்பதையும், இப்படி ஒரு சாலை வழியாகச் செல்லமுடியும் என்பதனையும் அப்போது தான் முதல் முறையாக அறிந்தேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.