14
13.கடற்கரைச் சாலை – பயணக்குறிப்புகள் 3
இந்தியர்களின் பக்தி மார்க்கத்தில் நிறைய ஆச்சரியங்களைக் கவனிக்க முடியும். காரைக்குடியில் இருந்து நினைத்தால் போய்வரக்கூடிய தொலைவில் உள்ள இராமேஸ்வரத்திற்கு இந்தப் பகுதியில் வாழ்பவர்களில், நான் பார்த்தவரைக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் இன்று வரையிலும் வடக்கே இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
அதேபோல உடம்பு ஒத்துழைக்காத பட்சத்திலும் “ஒரு தடவை காசிக்கு போயிட்டு வந்து செத்துடனும்” என்று சொன்னவர்களை அதிகம் பார்த்துள்ளேன்.
காரைக்குடி அருகே புதுவயல் (நான் பிறந்து வாழ்ந்த ஊர்) என்ற கிராமத்தில் இருந்து பிள்ளையார்பட்டி பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இன்று பிரபல்யமாக இருக்கும் பிள்ளையார்பட்டியை திருப்பூர் வந்த பிறகு யாரோ ஒருவரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த ஊரை நான் முழுமையாகப் பார்த்தேன். அது வரையிலும் போகிற போக்கில் அப்படியே கடந்து சென்றது தான்.
இந்த இடத்தில் நம்மவர்களின் அடிப்படை மனப்பான்மைகளையும், எப்போதும் “தூரத்துப் பச்சை” மேல் உள்ள ஈர்ப்பும் கவனிக்கக்கூடியது. அடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது?
என்னுடைய குழந்தைப்பருவத்தில் குடும்பத்தினருடன் இராமேஸ்வரத்திற்கு ரயில் மார்க்கமாகச் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. ரயில் முழுக்கப் பரவியிருந்த கவுச்சி வாடையும், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த மீன்கள் வைத்திருந்த ஓலைப்பாய் போன்றவைகள் கூட இன்றும் நினைவில் வந்து போகின்றது. பயத்தில் அம்மாவின் கைபிடித்துக் கொண்டு கடலை ஆச்சரியமாகப் பயத்தோடு பார்த்த இராமேஸ்வரத்திற்குக் கடந்த நாற்பது வருடங்களில் மொத்தமாக நாலைந்து முறை தான் சென்றுள்ளேன்.
ஒரு முறை கூட இந்த ஊரை நான் முழுமையாக உள்வாங்கியதில்லை. இந்த முறையும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் பயணத்தின் மூலம் முதல் முறையாகத் தனுஷ்கோடி சென்றேன்.
இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதம் என்று கொள்கைகள், நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியை ரசனையோடு அணுகும் நபர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.
விரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும்.
அடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல்.
வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது. இந்தப் பக்தி மார்க்கத்தைப் பற்றி இந்த இடத்தில் லேசாகப் பார்த்து விடலாம்,
“இப்படி இருப்பதற்கு நீ தான் காரணம்” இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.
“தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்”
“அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்”
ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமான பக்தி மார்க்கத்தையே தான் மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் விரும்புகின்றார்கள். ஆலயத்திற்குள் சென்று அனைத்தையும் கொட்டி விட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள். இதைத்தான் “ஆத்ம திருப்தி” “பூரண மகிழ்ச்சி” என்கிறார்கள்.
பக்தி மார்க்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிய பிறகு மூட நம்பிக்கைகள் அணிவகுக்கக் தொடங்கியது. வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கேயாவது வழி பிறந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஏன் தமிழர்கள் மற்ற இன மக்களை விடத் தனித்துவமாக இருப்பதன் காரணத்தை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த முறை பாம்பன் தரைப் பாலத்தில் சற்று நிதானமாக நின்று கடலையும் பாலத்தையும் ரசிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன்.
பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நின்று ரசித்தோம். அப்போது பெருமை மிகு இந்தப் பாலத்தின் லட்சணத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. பராமரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு பகுதியும் பயமுறுத்துவதாக இருந்தது.
இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டி (1974) ராஜீவ் காந்தி அவர்களால் (1988) அவர்களால் திறக்கப்பட்ட பாலத்திற்குள் நுழைய சுங்கவரி எதுவும் வசூலிக்கவில்லை. அப்போது கீழே தெரிந்த ரயில் பாலத்தை அதன் விஸ்தீரணத்தை ரசிக்க முடிந்தது.
பல வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது.
நாங்கள் சென்ற போது (2014 ஜனவரி) நூற்றாண்டு விழா காணப்போகும் (பிப்ரவரி) பாம்பன் ரயில் பாதை விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் முதல் முறையாக 2.3 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய இந்த ரயில் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையாக மாற்றம் பெற்ற பின்னரே இதன் உண்மையான பயன்பாடும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது.
ராமேஸ்வரம் என்பது வடக்கே உள்ள காசி போலப் புனிதத்தலம் என்கிற ரீதியில் தான் நம் மக்களின் பார்வையும் மதிப்பும் உள்ளது. ஆனால் வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்களுக்கும், வாழ முடியாமல் திரும்பி வந்தவர்களுக்கும் சரணாலயம் போல இன்று வரை காட்சியளித்துக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியான இடமும் கூட.
ஆனால் இந்தப் பாலத்தின் வாயிலாக ஈழத்திற்குச் சென்ற, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பாலத்தில் நின்று கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில் அதிக நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்?
ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது உருவாக்கிய வசதிகளையும் அதற்குப் பின்னால் உள்ள வஞ்சகம், சூழ்ச்சி, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளையும் யோசித்த போது கடற்காற்றில் மிதந்து வந்த உப்புத் தன்மையைப் போல மனமெங்கும் இனம் புரியாத பிசுபிசுப்பு உருவானது.